Quantcast
Channel: கட்டுரைகள் –புதினப்பலகை
Viewing all 367 articles
Browse latest View live

சீனாவைத் தழுவும் சிறிலங்கா –அதிகரிக்கும் பிராந்திய புவிசார் அரசியல் ஆபத்து

$
0
0

maithri-xi (3)சிறிலங்காவின் குறுகிய கால சீன எதிர்ப்புக் ‘கலகமானது’, சீனாவை எதிர்த்தால் ஆசிய நாடுகளின் பொருளாதாரம் எவ்வாறு சிதைவுறும் என்கின்ற உண்மையை வெளிச்சமிட்டுக் காண்பிக்கும் சான்றாகக் காணப்படுகிறது.

இவ்வாறு ஜப்பானின் Nikkei Asian Review ஊடகத்தில் HIROYUKI AKITA எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சீனாவானது சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் துறைமுக நகரம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதி தொடர்பாக சிறிலங்கா மீளவும் ஆராய்ந்து தீர்க்கமானதொரு முடிவை எட்டியுள்ளது. இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ள இலங்கைத் தீவானது ஆசியாவிலிருந்து மத்திய கிழக்கு நோக்கிப் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்கள் தங்கிச் செல்கின்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது.

கடந்த ஆண்டின் ஆரம்பத்தில், சீன ஆதரவு வெளியுறவுக் கோட்பாட்டைக் கைவிடுவதென சிறிலங்கா தீர்மானித்திருந்தது. சிறிலங்கா மீதான சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்கினால் எழுந்த அச்சமே சிறிலங்காவின் இத்தீர்மானத்திற்குக் காரணமாகும். எனினும், சிறிலங்காவின் இந்த முடிவானது ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுக்கு வாய்ப்பாக மாறியிருக்கலாம்.

அண்மைய சில ஆண்டுகளாக சீனாவால் முன்னெடுக்கப்படும் கரையோரப் பட்டுப் பாதைத் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு சீனாவால் சிறிலங்கா மிகப் பாரியதொரு மூலோபாய மையமாக மாற்றப்படுகிறது. சீனாவின் இந்திய மாக்கடல் நோக்கிய நகர்வை அமெரிக்கக் கடற்படை கண்காணித்து வருகிறது.

இதன் காரணமாக சீனா தனது திட்டத்தை வெற்றி பெறச் செய்வதற்கு கரையோர நாடுகளில் துறைமுகங்களை அமைக்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதன்மூலம் அமெரிக்காவின் கண்காணிப்பிலிருந்து தனது கடல் சார் நகர்வுகளை மறைப்பதே சீனாவின் பாரியதொரு நோக்காகும்.

சீனாவைப் பொறுத்தளவில், கரையோரப் பட்டுப்பாதைத் திட்டத்தின் மத்தியில் சிறிலங்கா அமைந்துள்ளதால் இது மிகவும் மூலோபாய முக்கியத்துவம் மிக்க மையமாக அமைந்துள்ளது.

இடைநிறுத்தப்பட்டிருந்த சீன முதலீட்டுத் திட்டத்தை மீளவும் தொடர்வதற்கு சிறிலங்காவானது ஜனவரி நடுப்பகுதியில் தனது பச்சைக்கொடியைக் காண்பித்ததானது சீனாவிற்குக் கிடைத்த அதிர்ச்சிகரமான வரவேற்பாகும். கொழும்பின் கரையோர நிலத்தைக் கையகப்படுத்தி அதில் வர்த்தக, குடியிருப்பு மற்றும் விளையாட்டு வசதிகளுடன் 1.5 பில்லியன் டொலர் செலவில் திட்டம் ஒன்றை மேற்கொள்வதென சீன நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

இத்திட்டத்திற்கான ஆரம்ப கட்ட நிர்மாணப் பணிகள் செப்ரெம்பர் 2014ல் ஆரம்பிக்கப்பட்டது. எனினும், இது கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடைநிறுத்தப்பட்டது. கொழும்பு நகரத் திட்ட உடன்பாட்டில் ஏற்பட்ட சில நடைமுறைப் பிரச்சினைகளே இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டதற்கான காரணம் என சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரமானது நியாயமான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சிறிலங்காவின் ஆட்சியில் ஏற்பட்ட மாற்றமே சீனா நோக்கிய சிறிலங்காவின் வெளியுறவுக் கோட்பாடு மாறுவதற்குக் காரணமாகும். சிறிலங்காவின் புதிய அதிபராக மைத்திரிபால சிறிசேன தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவியேற்பானது சீன சார்பு ஆட்சியை நடத்திய மகிந்த ராஜபக்ச தனது அதிபர் பதவியை இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியது.

தேர்தல் பரப்புரையின் போது, சீன நிறுவனங்கள் மகிந்த தொடர்புகளைப் பேணுவதாகவும் இதனால் பல்வேறு ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாகவும் மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியிருந்தார்.  இவர் தனது தேர்தல் பரப்புரையின் போது வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக, சீனாவின் திட்டத்தை இடைநிறுத்துமாறு அறிவித்தல் விடுத்தார். சிறிசேனவின் இந்த அறிவிப்பானது சீனாவின் இராணுவ மற்றும் மூலோபாய உதவிகளை சிறிலங்கா இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளும் என ஆய்வாளர்கள் கருதினர்.

ஆனாலும் மீண்டும் சீன முதலீட்டுத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படுவதற்கான அனுமதி ஒரு ஆண்டின் பின்னர் வழங்கப்பட்டது. சிறிசேன தனது சீன எதிர்ப்புக் கொள்கையைக் கைவிட்டு மீண்டும் சீனாவுடன் கைகோர்த்துள்ளார்.

‘சிறிலங்காவின் சீனா தொடர்பான நிலைப்பாடு முற்றுமுழுதாக மாறியுள்ளது. மேற்கில் சிறிலங்கா மீது இறுக்கமான நிலைப்பாடுகள் இடப்பட்டுள்ள நிலையில் எமக்கு வேறு யார் நிதி வழங்குவர்?’ என   சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் கேள்வி எழுப்பியிருந்ததாக பெப்ரவரி 10 அன்று வெளியிடப்பட்ட ரொய்ட்டர்ஸ்  ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரதான துறைமுகம் காணப்படும் சிறிலங்காவின் தெற்கில் சிறப்புப் பொருளாதார வலயம் ஒன்றை அமைத்து அதில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை சீன வர்த்தகர்கள் எதிர்பார்த்திருப்பதாக ரொய்ட்டர்ஸ் சுட்டிக்காட்டியிருந்தது. சிறிலங்காத் துறைமுகங்களை சீனா தனது இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதாக அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகியன தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.

‘நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். அவர்கள் தமது சொந்த நிதியை முதலீடு செய்வார்கள்’ என சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. சிறிலங்காவின் தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்தி ஏற்றுமதிகள்  மந்த நிலையை அடைந்துள்ளன.  சிறிலங்காவின் வெளிநாட்டு நாணயமாற்றும் தொடர்ச்சியாகத் தளம்பல் நிலையிலேயே காணப்படுகிறது.

இந்நிலையில் சீனாவுடன் பகையை வளர்த்துக் கொள்வது முட்டாள்தனமானது என்பதை சிறிசேன உணர்ந்து கொண்டார். சீனாவும் இப்பொன்னான வாய்ப்பைப் பற்றிப்பிடித்துள்ளது.

பெப்ரவரி 06 அன்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் ஜி கொழும்பு விமான நிலையத்தில் வைத்து சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். 21ம் நூற்றாண்டிற்கான கரையோரப் பட்டுப்பாதைத் திட்டத்தை அமுல்படுத்துவதில் சீனாவானது சிறிலங்காவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் சீன வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கு இரண்டு நாட்களின் முன்னர், அதாவது பெப்ரவரி 04 அன்று சீன அதிபர் ஜி சின்பிங் மற்றும் சீனப் பிரதமர் லீ கெகியாங் ஆகியோர் சிறிலங்காவின் சுதந்திர நாள் வாழ்த்துச் செய்தியை அதன் தலைவர் சிறிசேன உட்பட சிறிலங்காத் தலைவர்களுக்கு அனுப்பியிருந்தனர். இரு நாடுகளுக்கும் இடையில் மூலோபாய ஒத்துழைப்பு கூட்டுப்பங்களிப்பை உருவாக்குவதற்கான அழைப்பை சீனத் தலைமை விடுத்திருந்தது.

இதேவேளையில், தென்சீனக் கடலில் செயற்கைத் தீவுகளுக்கான அடிப்படைக் கட்டுமான வசதிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. சீனாவின் இந்த நகர்வை எதிர்த்து, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியன ஏனைய ஆசிய நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தி வருகின்றன.

ஆனால் ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியன இந்த முயற்சியில் வெற்றியடைந்துள்ளனவா என்பது தெளிவற்றதாகவே காணப்படுகிறது. ஏனெனில் இந்த ஆசிய நாடுகள் சீனாவிடமிருந்து பொருளாதார நலன்களைப் பெறும் அதேவேளையில், சீனாவின் இராணுவப் பலப்படுத்தல்களை எதிர்த்து நிற்கின்றன.

சிறிலங்காவின் குறுகிய கால சீன எதிர்ப்புக் ‘கலகமானது’, சீனாவை எதிர்த்தால் ஆசிய நாடுகளின் பொருளாதாரம் எவ்வாறு சிதைவுறும் என்கின்ற உண்மையை வெளிச்சமிட்டுக் காண்பிக்கும் சான்றாகக் காணப்படுகிறது.


எட்கா உடன்பாடு ரணிலை வீட்டுக்கு அனுப்புமா? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

$
0
0

ranil-sushmaஉள்நாட்டு யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வர இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்பதை ஜே.ஆர். புரிந்து கொண்டார். இதனால் இந்தியாவை தனது சூழ்ச்சி வலைக்குள் வீழ்த்துவதென ஜே.ஆர். தீர்மானித்தார். இந்தியாவால் வளர்த்தெடுக்கப்பட்ட புலிகளை இந்தியாவே அழிக்க வேண்டும் என்பதற்காகவே இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

இந்தியா – சிறிலங்கா இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் இவை தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் போன்ற அரசியல்வாதிகளின் பார்வைகள் என்ன என்பது தொடர்பாக இப்பத்தியில் ஆராயப்படுகிறது.

இவர்களது கருத்துக்கள் உத்தியோகபூர்வ ரீதியாகவும் உத்தியோகபூர்வமற்ற வகையிலும் எவ்வாறான முரண்பாடான விடயங்களை உள்ளடக்கியுள்ளன என்பதை இங்கு நோக்க முடியும்.  ஆகவே, குறுகிய அரசியல் நலன்களை அடைந்து கொள்வதற்காகவே அரசியல்வாதிகள் உடன்படிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்பது இங்கு தெளிவாகிறது.

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்தின் ஆசிரியர் சேகர் குப்தா , 2008ல் நேர்காணல் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இந்த நேர்காணலின் போது, 1987ல் மேற்கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தமானது இனப்பிரச்சினைக்குச் சிறந்ததொரு தீர்வு எனவும் 13வது திருத்தச்சட்டமும் சிறந்ததொரு தீர்வாகக் காணப்படுவதாகவும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இவற்றை முன்னுணர்ந்து 1987ல் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்தமை வரவேற்கத்தக்க விடயம் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார்.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்டதைத் தொடர்ந்து இந்திய அமைதி காக்கும் படை சிறிலங்காவிற்கு வருகைதந்தமை தொடர்பாகவும் சேகர் குப்தாவிடம் மகிந்த ராஜபக்ச சுருக்கமாக விளக்கியிருந்தார்.

‘இந்திய அமைதி காக்கும் படையை சிறிலங்காவிலிருந்து மீண்டும் இந்தியா அழைக்க வேண்டும் என அதிபர் பிறேமதாச கோரிக்கை விடுத்தமை தவறானது. இதனால் இந்திய-இலங்கை உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்திய அமைதி காக்கும் படையினரால் ஆற்றப்பட்ட சேவைகளுக்கு இலங்கையர்கள் நன்றி செலுத்த வேண்டும். சிறிலங்காவின் ஒருமைப்பாட்டிற்காக இந்திய அமைதி காக்கும் படையினர் தமது உயிர்களைத் தியாகம் செய்தனர். இந்தியப் படையினர் சிறிலங்காவில் மேலும் சிறிது காலம் பணியாற்றுவதற்கு அனுமதித்திருந்தால், நாங்கள் வெற்றியைப் பெற்றிருப்போம். ஆனால் தென்னிலங்கை வாழ் தீவிரவாதிகளின் அழுத்தம் காரணமாக பிறேமதாசா, இந்திய அமைதி காக்கும் படையினரை அவர்களது நாட்டிற்குத் திருப்பி அனுப்பினார்’ என மகிந்த ராஜபக்ச 2008ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

இதே மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் 1989 மே 26 அன்று சிறிலங்கா நாடாளுமன்றில் ஆற்றிய உரையின் போது,  1987ல் மேற்கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கை மற்றும் இந்திய அமைதி காக்கும் படை போன்றவற்றை விமர்சித்திருந்தார்.

இவர் தனது நாடாளுமன்ற உரையில் ‘இந்திய அமைதி காக்கும் படையினர் இங்கு கொண்டுவரப்பட்டதால் இந்த நாடு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளது. வடக்கில் வாழும் மக்களை அடக்குவதற்காகவும், தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களைக் கொல்வதற்காகவும், இவர்களது அடிப்படை உரிமைகளை மீறுவதற்காகவுமே இந்திய அமைதி காக்கும் படையினர் இங்கு கொண்டுவரப்பட்டனர். யூலையில் மேற்கொள்ளப்பட்ட சமாதான உடன்பாட்டின் பிரகாரம் சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கில் குவிக்கப்பட்ட இந்திய அமைதி காக்கும் படையினரே தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட பாலியல் வன்புணர்வு மற்றும் ஏனைய மீறல்களுக்குப் பொறுப்பாளிகளாவர் என அனைத்துலக மன்னிப்புச் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என சுட்டிக்காட்டியிருந்தார்.

மகிந்த தனது உரையின் போது, வடக்கு மற்றும் கிழக்கில் அப்பாவிப் பெண்கள் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்படுவதற்காகவே இந்திய அமைதிப் படையினர் சிறிலங்காவிற்குக் கொண்டு வரப்பட்டதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார்.

இவரது இந்தக் கூற்றை மேலும் வலுப்படுத்துவதற்காக, ‘இந்தியப் படையினர் அமைதி காக்கும் படையினர்கள் அல்ல. அவர்கள் பாலியல் படையினர்’ என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

மகிந்த ராஜபக்ச: ஆம், இந்திய அமைதி காக்கும் படையினர் இந்தியப் பாலியல் படையாக மாறியுள்ளனர். அவர்கள் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்குகின்றனர். எதிர்காலத்தில் வடக்கில் இந்தியர்களை உருவாக்குவதற்காகவே பெண்களைப் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்குகின்றனர். வடக்கில் மக்கள் கொல்லப்படுகின்றனர். பெண்கள் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். ஆனால் தெற்கில் என்ன நடக்கிறது எனப் பாருங்கள். வடக்கில் இடம்பெறும் இவ்வாறான மீறல்களுக்கு எதிராக தென்னிலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுபடும் போது அவர்கள் ரயர்கள் இடப்பட்டு எரிக்கப்படுகிறார்கள். ” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்

GL-Peiris

பொருளாதார மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையானது பரந்த பொருளாதார கூட்டு உடன்படிக்கைக்கு ஒத்ததாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திட்டு 15 ஆண்டுகளின் பின்னர் சிறிலங்காவின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் விதமாக பொருளாதார மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையானது வரையப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான சிறிலங்காவின் பிரதான ஏற்றுமதிப் பொருள் பாக்கு ஆகும்

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்- (08.02.2016- Mawbima)

இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை:

1998ல் இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக உடன்படிக்கையானது சிறிலங்காவிற்கு பல்வேறு திறந்த முதலீட்டு வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கும் என பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் 2008ல் சிறிலங்காவின் வர்த்தக அமைச்சராக இருக்கும் போது அறிவித்திருந்தார். இதே பீரிஸ் இந்தியாவுடனான வர்த்தக உடன்படிக்கையின் கீழ் பாக்கு மட்டுமே சிறிலங்காவிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பிரதான பொருள் எனத் தற்போது குறிப்பிடுகிறார்.

பீரிஸ் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஏனையவர்கள் இந்தியாவுடனான பொருளாதார தொழினுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை தொடர்பில் இரட்டை நிலைப்பாட்டையும் இரட்டைக் கருத்துக்களையும் கொண்டுள்ளனர் என்பது தெளிவாகும். தமது ஆட்சிக்காலத்தில் இந்த உடன்படிக்கையை ஆதரித்து தமது கைகளை உயர்த்திய இவர்கள் தற்போது இதனை எதிர்த்து நிற்கின்றனர்.

‘முதலில் தேசம் அதன் பிறகே வேலைத்தளம்’ என்கின்ற இரண்டு எண்ணக்கருக்களை 1987ல் தற்போது கூட்டு எதிர்க்கட்சியினர் கொண்டிருந்தனர். இந்த எண்ணக்கருக்களைப் பயன்படுத்தி இவர்கள் 1987ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை ஆட்சியிலிருந்து நீக்கினர். தற்போது இவர்கள் பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கையை எதிர்ப்பதன் மூலம் ஜே.ஆரின் மருமகனான ரணிலை வீட்டிற்கு அனுப்பத் திட்டமிடுகிறார்கள். இதனை இவர்களால் செய்ய முடியுமா? இதனைத் தற்போது எதிர்வுகூற முடியாது. இதற்கு இன்னமும் கால அவகாசம் தேவைப்படுகிறது.

1989ல் மகிந்தவால் எதிர்த்து விமர்சிக்கப்பட்ட இந்திய அமைதி காக்கும் படையை சேகர் குப்தாவுடனான நேர்காணலின் போது மகிந்த ராஜபக்ச எவ்வாறு புகழ்ந்துரைத்தார் என்பதும், இவர் அதிபராகப் பதவி வகித்த போது உயிர்நீத்த இந்தியப் படையினருக்காக யாழ்ப்பாணத்தில் நினைவாலயம் ஒன்றை அமைத்து மரியாதை செலுத்தினார் என்பதையும், விமல் வீரவன்ச போன்ற நாட்டுப்பற்றாளர்கள் எனத் தம்மைத் தாமே கூறிக்கொள்பவர்கள் இந்த நினைவாலயத்தை வணங்குகிறார்கள் போன்ற சம்பவங்கள் சிறிலங்கா அரசியல்வாதிகள் இரட்டை முகத்தை வெளிச்சமிட்டுக் காண்பிக்கின்றது.

ஆகவே, தற்போது பொருளாதார, தொழினுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையை விமர்சிப்பவர்கள் எதிர்காலத்தில் இதனைப் புகழ்ந்து பாராட்டி நினைவாலயங்களை அமைக்கலாம். ஏனெனில் சில ‘நாட்டுப்பற்றாளர்கள்’ இரட்டை நாக்குகளுடன் இரட்டை நிலைப்பாடுகளுடன் செயற்படுகின்றனர்.

தனது தொலை நோக்குச் சிந்தனையின் மூலம் 1987ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். இவர் வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தை ஒரு புற்றுநோய் போன்றே நோக்கினார். இந்த யுத்தம் இந்தியாவாலேயே உருவாக்கப்பட்டது என்பதை இவர் அறிவார். வடமராட்சியில் இடம்பெற்ற யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வருவதற்கு இந்தியா எதிர்த்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமானம் மூலம் உணவுப் பொதிகளை இந்தியா வீசிய போது, உள்நாட்டு யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவருவதற்கு இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்பதை ஜே.ஆர்.ஜெயவர்த்தனா புரிந்து கொண்டார்.

இதனால் இந்தியாவை தனது சூழ்ச்சி வலைக்குள் வீழ்த்துவதென ஜே.ஆர். தீர்மானித்தார். இந்தியாவால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ்ப் புலிகளை இந்தியாவே அழிக்க வேண்டும் என்பதற்காகவே இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் ஜே.ஆர் கைச்சாத்திட்டார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜே.வி.பி போன்றன ஜே.ஆரின் நிலைப்பாடு தொடர்பாக விழித்துக் கொண்டனர். இந்திய அமைதி காக்கும் படை யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவந்தால், இந்த நாட்டை ஜே.ஆர் தொடர்ந்தும் ஆளக்கூடிய நிலை உருவாகும் என இவர்கள் அச்சம் கொண்டனர். இது இடம்பெற்றால், தாம் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு உருவாகாது என்பதையும் இவ்விரு கட்சிகளும் புரிந்துகொண்டனர். இதனால், மாகாண சபைகள் இந்த நாட்டைக் கூறுபோடும் என்கின்ற கருத்தை உருவாக்கினர்.

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அச்சுறுத்தியதுடன் இவர்கள் தேசத்துரோகிகள் எனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜே.வி.பி முத்திரை குத்தின. இதன்மூலம் நாடு தழுவிய ரீதியில் மக்கள் மத்தியில் மனரீதியான அச்சத்தை உருவாக்கினர். அத்துடன் இவர்கள் மாகாண சபைத் தேர்தல்களைப் புறக்கணித்தனர். இத்தேர்தல் 1988ல் இடம்பெற்றது.

1993ல், சிறிலங்கா சுதந்திரக் கட்சி தனது நிலையிலிருந்து மாறி மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டது. இதேபோன்று மாகாண சபை முறைமையை உருவாக்கிய 1987 இந்திய இலங்கை உடன்படிக்கையை எதிர்த்த ஜே.வி.பி தனது நிலையிலிருந்து இறங்கி 1999ல் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டது.

2005 மகிந்த சிந்தனை விளக்கவுரை:

1987ல் இந்தியாவின் அனுசரணையையும், 2005ல் நோர்வேயின் அனுசரணையையும் எதிர்த்து நின்ற மகிந்த மற்றும் விமல் ஆகியோர் 2005ல் இந்தியாவின் தலையீட்டுடன் கூடிய தேர்தல் விளக்கவுரையை உருவாக்கியது. இதேவே 2005 மகிந்த சிந்தனை ஆகும். இதில் இந்தியாவின் நடுநிலைமையுடன் நாட்டில் சமாதானமும் அபிவிருத்தியும் உருவாக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், 2010 அதிபர் தேர்தலில், மகிந்த சிந்தனையின் பக்கம் 05ல் ‘புவிமயமாக்கலானது சிறிலங்காவிற்குப் பல்வேறு வாய்ப்புக்களையும் சவால்களையும் வழங்கியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஏனைய பிராந்திய நாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இதன் மூலம் எமது ஏற்றுமதித் துறை, முதலீட்டு மற்றும் தொழினுட்பத் துறைகள் நலன் பெறும்’ எனக் குறிப்பிடப்பட்டது.

எந்தவொரு எதிர்காலத் திட்டங்களும் இன்றி, 2010ல் உருவாக்கப்பட்ட மகிந்த சிந்தனையில் இந்தியாவுடன் வர்த்தக மற்றும் ஏனைய உடன்படிக்கைகளை மேற்கொள்வதென பரிந்துரைக்கப்பட்டது. 2008ல் முதன்முதலாக இந்தியாவுடன் பரந்த பொருளாதார கூட்டு உடன்படிக்கையை மேற்கொண்டது மகிந்த அரசாங்கமே ஆகும். மகிந்த அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்தியாவுடன் உடன்படிக்கை தொடர்பாகப் பேச்சுக்களை நடத்தியவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆவார். இந்தியப் பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்த கருத்தரங்கு ஒன்றில் பீரிசால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஜூலை 13, 2008 அன்று ‘த ஐலண்ட்’ ஊடகம் பதிவேற்றியிருந்தது.

‘சிறிலங்கா ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், இந்தியப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடன் பரந்த பொருளாதார கூட்டு உடன்படிக்கை தொடர்பாக கலந்துரையாடியுள்ளார். சிறிலங்காவிற்கான இந்திய உயர் ஆணையாளர் அலோக் பிரசாத், இந்திய வர்த்தகச் செயலர் ஜி.கே.பிள்ளை, இந்திய வர்த்தகத் திணைக்களத்தின் கூட்டுச் செயலர் றஜீர் கேர், கொழும்பிலுள்ள இந்திய உயர் ஆணையகத்தின் பொருளாதார வர்த்தக ஆலோசகர் சந்தோஸ் ஜா, இந்திய வர்த்தகத் திணைக்கள இயக்குனர் றாஜீர் குமார் ஆகியோர் இந்திய அரச பிரதிநிதிகளாகக் கலந்துகொண்டனர்.

சிறிலங்காப் பிரதிநிதிகளாக, பீரிஸ் மற்றும் சிறிலங்கா ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சுச் செயலர் எஸ்.றணுகே, வர்த்தக பதில் இயக்குனர் கோமி சேனதிர ஆகியோர் கலந்து கொண்டனர். தாஜ் சமுத்ரா விடுதியில் இடம்பெற்ற பரந்த பொருளாதார கூட்டு உடன்படிக்கைக்கான ஆரம்ப கட்டக் கலந்துரையாடலில் இந்திய வர்த்தகச் செயலர் ஜி.கே.பிள்ளை கலந்து கொண்டார். சிறிலங்காவானது பூகோள பொருளாதாரத்துடன் தனது பொருளாதாரத்தையும் ஒன்றிணைப்பதற்கு பிராந்திய மற்றும் இருதரப்பு சுதந்திர வர்த்தக நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக பீரிஸ் தெரிவித்தார்.

சிறிலங்கா தனது அயல் நாடுகளுடன் குறிப்பாக சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளுடன் வலுவான வர்த்தக மற்றும் பொருளாதார உறவை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். இதன் மூலம் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த சந்தை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் குறைந்த செலவில் பொருட்கள் மற்றும் சேவைகளையும் அடைய முடியும். அத்துடன் பிராந்தியத்தில் நல்லுறவையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்த முடியும். 1998ல் உருவாக்கப்பட்ட இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையானது எமது சொந்த முயற்சியில் பிராந்தியத்தில் மிகப்பாரிய பொருளாதார நாடாக வளம்பெற உதவும். இந்தியாவின் முதலீடானது சிறிலங்காவின் சுகாதாரம், விடுதிகள், வான் போக்குவரத்து, வங்கியியல் மற்றும் வழங்கல் போன்ற பல்வேறு துறைகளை விரிவாக்க உதவும். 2002லிருந்து இந்திய சுற்றுலாப்பயணிகளே சிறிலங்காவிற்கு அதிகம் வருகை தருகின்றனர் எனவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.

இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் மூலம் விசாகபட்டிணம் திட்டத்தில் 650 மில்லியன் டொலர் முதலீட்டில் இந்தியாவின் பிறாண்டிக்ஸ் நிறுவனத்தால் வர்த்தகச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது மிகவும் முதன்மையானதாகும்.

சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மிகவும் வெற்றிகரமாக அமுல்படுத்தப்படுவதால் சிறிலங்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் ஆகஸ்ட் 2004ல் பொருட்களிலிருந்து சேவைகள் வரை தமது பரிமாற்றல் தொடர்பாடல்களை விரிவுபடுத்தியுள்ளன எனவும் இதுவரை உத்தியோகபூர்வமாக 13 தடவைகள் பேச்சுக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பீரிஸ் தெரிவித்தார். பரந்த பொருளாதார கூட்டு உடன்படிக்கையின் கீழ் முதலீடுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் இது சிறிலங்காவிற்கு நலன் பயக்கும் எனவும் அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டார்.

தேசிய சேமிப்பு மற்றும் முதலீடு ஆகியவற்றுக்கு இடையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள நான்கு சதவீத இடைவெளியை ஈடுசெய்வதற்கும் வருடாந்த பொருளாதார வளர்ச்சி வீதத்தை 8-9 சதவீதமாக அதிகரிப்பதற்கும் நீண்ட கால அடிப்படையில் நேரடி வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்க வேண்டிய தேவை சிறிலங்காவிற்கு உள்ளதாகவும் பீரிஸ் சுட்டிக்காட்டினார். தாராளமயப்படுத்தப்பட்ட முதலீடானது இந்தியாவிலிருந்து சிறிலங்காவிற்கு அதிக முதலீடுகள் உள்ளீர்க்கப்படுவதற்கும் தொழினுட்பம், மனித வலு மற்றும் வர்த்தக விரிவாக்கத்தை மேற்கொள்ளவும் வாய்ப்பாக அமையும் எனவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்’ என ஐலண்ட் செய்தி வெளியிட்டிருந்தது.

மகிந்தவின் வர்த்தக அமைச்சராக ஜி.எல் பதவி வகித்த போது முற்றுமுழுதாக பரந்த பொருளாதார கூட்டு உடன்படிக்கை ஆதரவாகவே பரப்புரை செய்திருந்தார். இதே ஜி.எல்.பீரிஸ் சிறிலங்காவிற்கு அதிக நலனை வழங்கக்கூடிய பொருளாதார தொழினுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையை தற்போது விமர்சிக்கிறார். இது ஜி.எல் பீரிசின் இரட்டை நிலைப்பாடா?

மிச்சமென்ன சொல்லுங்கப்பா? – கி.பி.அரவிந்தனின் இறுதிக்கால கேள்வி –யதீந்திரா

$
0
0

ki-pi-annaஅரவிந்தன் அண்ணன் பிரிந்து ஒரு வருடமாகின்றது. ஒவ்வொரு வருட முடிவிலும் இவ்வளவு விரைவாக காலம் கடக்கிறதே என்னும் பெருமூச்சு மட்டும் மிச்சமாகிக் கனக்கிறது.

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ஈழ அரசியல் உரையாடல்களுடன் இரண்டறக் கலந்துகிடந்த அரவிந்தன், ஈழ அரசியலின் எதிர்காலம் பெருமளவிற்கு கேள்விக் குறியாகிவிட்ட ஒரு சூழலில்தான், எங்களை விட்டு நீங்கினார். அவரில்லாத இந்த ஒரு வருடம் வழமையான பெருமூச்சுக்கள், வழமையான அங்கலாய்ப்புக்கள் மேலும் வழமையான தடுமாற்றங்களாகவே கழிந்து சென்றது.

அரவிந்தன் பற்றி ஒரு சில விடயங்களை எழுதுவது என்றவுடன் முதலில் எதைப் பேசுவது என்னும் வினாதான் துருத்திக் கொண்டு முன்நிற்கிறது.

அரவிந்தன் பற்றி எண்ணும் போது, அவர் பற்றி பல விடயங்களை பேசலாம். ஏனெனில் அவரது வாழ்வில் பல பாத்திரங்களை அவர் விரும்பியே ஏற்றிருந்தார். அந்த பாத்திரங்கள் ஒவ்வொன்றும் அவருக்கு ஒவ்வொரு முகத்தை வழங்கியிருந்தது.

முதலில் அவர், ஆயுத விடுதலைப் போராட்ட அமைப்புக்களில் ஒன்றான ஈரோஸ் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர். 90களில் ஈரோஸ் அமைப்பு கலைக்கப்பட்ட பின்னரான சூழலில்தான், அவரது பிற்கால முகமான புலம்பெயர் செயற்பாட்டாளர், கவிஞர், இணையத்தள நெறியாளர் போன்ற முகங்களை அவர் அணிந்து கொண்டார்.

நான் நினைக்கிறேன், இப்படி பல முகங்களில் அவர் இயங்கியிருந்தாலும் கூட, கவிஞன் என்னும் முகம்தான் பெருமளவுக்கு அரவிந்தனை மற்றவர்கள் மத்தியில் நிலைநிறுத்தியது. இப்படி பல முகங்களில் இயங்கிய போதிலும், ஈழ அரசியலிருந்து அரவிந்தன் எப்போதும் தன்னை துண்டித்துக் கொண்டதில்லை. அந்த அரசியல் தேடல்தான், அவரது வயதையும் கடந்து புதிய தலைமுறையுடனும் அவரை பிணைத்தது. நான் அவருக்கு நண்பனான பின்னணியும் இதுதான். அவரும் எனக்கும் சில வருட பழக்கம்தான். ஆனாலும் அது ஒரு அர்த்தமுள்ள பழக்கமாக இருந்தது.

ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய விடயம், அரவிந்தன் இப்படி பல முகங்களில் அறிமுகமான காலத்தில், அவர் அரசியலை தன்னுடைய ஆரம்பகால புரிதலில் வழியாக மட்டுமே, அசைபோட்டுக் கொண்டிருக்கவில்லை. ஈரோஸ் இயக்கம் கலைக்கப்பட்ட பின்னர், அரவிந்தன் அயுதப் போராட்ட அரசியலிருந்து முற்றிலுமாக விலகிக் கொண்டார். ஈரோஸ் இயக்கம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து, அதன் ஒரு பகுதியினர், க.வே.பாலகுமாரனின் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் ஐக்கியமாகி, அதனுள்  கரைந்து போயினர். உடன்படாதவர்கள் வேறு வழிதேடினர். இதில் அனேகரின் தெரிவு ஒதுங்கி, ஓரமாகிப் போவதாகவே இருந்தது. அவ்வாறு ஒதுங்கியவர்களில் வரிசையில்தான் அரவிந்தனும் வருகிறார்.

பாலகுமார் விடுதலைப்புலிகளுடன் உடன்பட்டுக் கொண்ட போது, அரவிந்தன் அந்த அணியில் இருக்கவில்லை. அதன் பொருள், அரவிந்தன் தன்னை விடுதலைப்புலிகளுக்குள் கரைக்க விரும்பவில்லை என்பதுதானே! ஆனாலும் அன்று பலரையும் ஒரு சங்கடம் ஆட்படுத்தியது. ஓடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்னும் வகையில், விமர்சனங்கள் இருந்தபோதிலும் கூட, பெரும்பாலானவர்களது தெரிவு விடுதலைப் புலிகளாகவே இருந்தது. அரவிந்தன் எனக்கு அறிமுகமாகிய காலத்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளராகவே இருந்தார். ஆனாலும்; அவரிடம் விமர்சனங்கள் இருந்ததை நானறிவேன். அவர் விமர்சனமற்றவராக இருந்திருந்தால் எனது (2009இற்கு பின்பான) எழுத்துக்கள் அவரால் நெறிப்படுத்தப்பட்டு புதினப்பலகையில் இடம்பெற்றிருக்காது.

000000

2009, பலரையும் நிலைகுலைத்தது போன்று அரவிந்தனையும் பாரதூரமாகவே நிலைகுலைத்தது. அனைவரும் நிலைகுலைந்து போன அந்த நாட்களில் நானும் அவரும், அவ்வப்போது நிலைமைகள் பற்றி பேசுவதுண்டு. ஆனால் அவர் எதனையும் எனக்கு அழுத்திக் கூறுவதில்லை. தங்களுடைய அனைத்து மதிப்பீடுகளும் பிழைத்துப் போன பின்பு, ஈழ நிலத்தில் தொடர்ந்தும் கால்பதித்திருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு எதனையும் அழுத்திச் சொலும் தகுதிநிலையில் தான் இல்லை என்பதை அவர் உணர்ந்திருக்கலாம்.

2009இற்கு பின்னர் எது எப்படியோ, அதனை அங்கிருக்கும் மக்களே தீர்மானிக்க வேண்டும் என்பதில் அவரிடம் தெளிவான பார்வையிருந்தது. அதன் காரணமாக நான் என்னுடைய விமர்சனங்களை வெளியிட்ட போது, அதனை பிரசுரிப்பதில் அவர் பின்நிற்கவில்லை. அரவிந்தன் எந்தளவிற்கு நிலைகுலைந்து போயிருந்தார்? அவரின் பிந்தைய வெளியீடான ‘மிச்சமென்ன சொல்லுங்கப்பா’ என்னும் கவிதைத் தொகுப்பின் முகவுரையில் அவர் எழுதியிருக்கும் பின்வரும் இருவரிக்குறிப்பு அவரது நிலைகுலைவை தெளிவாக பதிவுசெய்திருக்கிறது.

“ஈழத்தமிழரின் வாழ்விலும் இருப்பிலும் இன்று என்னதான் மிஞ்சியுள்ளது? அந்தக் குழந்தைக்குச் சொல்வதற்கு அப்பனிடம் மிச்சம் மீதம் என்ன இருக்க முடியும்?”

ஒரு சிறிய இனம் தன்னுடைய ஆற்றல் வளங்கள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி, செலவு செய்து இறுதியில் எல்லாவற்றையும் இழந்துவிட்ட ஒரு சூழலில், ஒரு கவிஞனின் சிந்திப்புத்தான் மேற்படி வரிகள். ஒரு காலத்தில் தமிழ் மக்களுக்கான சுதந்திர தேசம் ஒன்றை கனவு கண்டு, அதற்காக வீடு துறந்து பயணித்த அரவிந்தன் என்னும் ஒரு விடுதலைப் போராளியிடமிருந்த, எஞ்சிய நம்பிக்கையும் காலமாகிவிட்டது என்பதையே மேற்படி வரிகள் உணர்த்துகின்றன. அரவிந்தனிடமிருந்து, இப்படியான வார்த்தைகள் வெளிப்படும் வரையான காலப்பகுதியில் நடந்தவைகள் என்ன? இதற்கான பதிலை தேடும் பொறுப்பை, காலம் புதிய தலைமுறையிடம் விட்டுச் சென்றிருக்கிறது.

என்னளவில், அரவிந்தன் போன்றவர்களை நினைவு கொள்வதென்பது, கடந்த காலத்தை திரும்பிப் பார்ப்பதும், அதில் எடுக்கக் கூடியதை எடுத்துக் கொண்டு, விட்டுவிட வேண்டியதை விட்டுவிடுவதும்தான். விட்டுவிட வேண்டியதை எடுத்துச் செல்ல முற்படும் போதெல்லாம், முன்னர் அதனை விட்டுவிட மறுத்தமையால் என்ன நிகழ்ததோ, அதுவே மீண்டும் நிகழும்.

000000

அரவிந்தனை நினைவு கூர்பவர்கள் பலரும் அவரவர் நட்பின் எல்லைக்குள் நின்றவாறு பலதையும் பகிரலாம். ஆனால் ஒரு விடுதலை இயக்க போராளியை, அரசியல் செயற்பாட்டாளனை நினைவு கொள்வதென்பது, ஒரு புதிய  உரையாடலுக்கான அடித்தளமாக அமைய வேண்டும். ஏனெனில் எமது கடந்தகால அரசியல் இயங்குநிலையென்பது, தமிழ் சமூகத்தினுள் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தாமல் அழிவை அனுபவமாக்கிவிட்டு ஒய்ந்திருக்கிறது.  அவ்வாறாயின் எமது கடந்த காலஇயங்குநிலையில் உள்ள பிரச்சினைதான் என்ன?

அரவிந்தன் அவாவிநின்ற தமிழர் விடுதலை என்பது வெறுமனே நிலங்களை கையகப்படுத்தி, அதன் மீது எல்லையிட்டு, ஆட்சி செய்யும் ஒரு அதிகார பீடமல்ல. அரவிந்தன் போன்றவர்கள் பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து விடுபடும் அதேவேளை, தமிழ் சமூகத்தின் மத்தியில் ஆழ வேர்விட்டிருந்த சாதிய ஒடுக்குமுறைகளையும் தகர்த்தெறிய வேண்டுமென்று இயங்கியவர்கள். ஆனால் அதனை தமிழர் விடுதலைப் போராட்டத்தினால் அறுத்தெறிய முடிந்ததா?

இத்தனை இயக்கங்கள் தமிழ் சமூகத்தை உலுப்பி அசைத்திருந்த போதும், பின்னர் 30 வருடங்களாக தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் சமூகத்தை ஏகபோகமாக தீர்மானித்த போதிலும் கூட, ஏன் இறுதியில் தமிழ் சமூகமானது, எந்த மாற்றங்களையும் பரிசிக்காத காயடிக்கப்பட்ட சமூகமாகவே இருக்கிறது?

தமிழ் இளைஞர்களின் உரிமைப் போராட்டம் இறுதியில் சாதித்ததுதான் என்ன?

தமிழ் சமூகத்தை ஆழ்ந்து புரிந்து கொள்ளாமல் இயங்கியதன் விளைவா அல்லது, மக்களை வெறும் பார்வையாளராக்கிவிட்டு, இயக்கங்கள் ஆடிய ஆட்டத்தின் விளைவா இது?

தமிழ் சமூகத்தில் அனைத்தும் அப்படியே இருக்கிறது ஆனாலும் ஒரு தலைமுறையே தன் உயிரை கொடுத்திருக்கிறது. முன்னாள் போராளிகள், விதவைகள், அங்கவீனர்கள், அனாதரவான சிறுவர்கள், எல்லாவற்றையும் இழந்துவிட்டு கையேந்தி நிற்கும் ஒரு மக்கள் கூட்டம் என்று ஒரு பட்டியலை பிரசவித்து விட்டு, ஈழ வீரமார்த்தாண்ட மரபு முற்றுப்பெற்றிருக்கிறது.

போராட்டங்கள் எதுவும் பிழையல்ல ஆனால் ஆரம்பிக்கப்படும் அனைத்து போராட்டங்களும் ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டே ஆகவேண்டும். தலைமுறைகள் தோறும் போராடிக் கொண்டிருக்கவே முடியாது. புற நிலைமைகளை விளங்கிக் கொண்டு போராட்டங்கள் நிறுத்தப்படாத போது, அது தொடர்வதை விரும்பாத சக்திகள் அதனை நிறுத்திவிடும். எனவே போராட்டங்களை இன்னொரு தரப்பு நிறுத்துவதற்கு அவகாசம் கொடுக்காமல் அதனை ஆரம்பித்தவர்களே நிறுத்தி விடுவதான் அந்த போராட்டத்தின் உண்மையான வெற்றியாகும். அப்படியான போராட்டங்கள்தான் மக்களுக்கான போராட்டமாக வெற்றிபெறும்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் தவறல்ல. அது நியாயமான காரணங்களில் வேர்கொண்டிருந்தது. ஆனால், அது நிறுத்தப்பட வேண்டிய தருணத்தில் நிறுத்தப்படாததால், அது மற்றவர்களால் நிறுத்தப்பட்ட போது தமிழர்களுக்கு அழிவே மிச்சமானது.

மிச்சமென்ன சொல்லுங்கப்பா – என்னும் அரவிந்தனின் கேள்விக்கு –அழிவொன்றுதான் மிச்சம் என்பதையே வரலாறு பதிலாக முன்னிறுத்தியிருக்கிறது. அரவிந்தன் போன்ற ஒரு ஆளுமையை நினைவு கொள்வதென்பது, அவரை முன்னிறுத்தி, அவர் அவாவிநின்ற சமூதாய விழுமியங்கள் தொடர்பில் உரையாடுவதாக அமைய வேண்டும் என்பதே எனது புரிதல். அந்த அடிப்படையிலேயே சில விடயங்களை இங்கு பதிவு செய்திருக்கிறேன்.

- யதீந்திரா

ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கிறதா மலேசியா? – பி.இராமசாமி

$
0
0

P-ramasamyமுன்னாள் சிறிலங்கா இராணுவத்தினரை மலேசியா தனது நாட்டின் பாதுகாப்புப் பணிகளுக்காக ஆட்சேர்த்துக் கொள்ளுமாயின், அங்கிருக்கும் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பயங்கர மீறல்களை மலேசியா அசட்டை செய்துள்ளது என்ற அவப்பெயரைச் சம்பாதிக்க வேண்டியேற்படும். 

இவ்வாறு மலேசியாவின் பினாங் மாகாண பிரதி முதல்வர் பி.இராமசாமி free Malaysia today ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

இந்த நாட்டில் செயற்படும் பாதுகாப்பு அமைப்புக்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதுடன் பயிற்றுவிக்கப்பட்ட உத்தியோகபூர்வ பாதுகாப்பு பணியாளர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளது. பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபடுவதற்காக முன்னர் நேபாள நாட்டவர்கள் இணைக்கப்பட்ட போதிலும், இவர்கள் மலேசியாவிற்கு வருகை தருவதில் ஆர்வம் கொள்ளவில்லை.

இதேவேளையில், மலேசியாவில் நிலவும் பாதுகாப்பு சார் பணி வெற்றிடங்களை நிரப்புவதற்காக சிறிலங்காவின் முன்னாள் இராணுவ வீரர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மலேசிய உள்விவகார அமைச்சின் அறிவித்தலை குற்றவியல் தடுப்பு வலைப்பின்னல் சங்கம் வரவேற்றுள்ளது.

இந்த நகர்வானது மலேசியாவின் பாதுகாப்பு சார் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உதவுவதோடு மட்டுமல்லாது, துறைசார்ந்த அனுபவங்களைக் கொண்ட பாதுகாப்புப் பணியாளர்களையும் நாட்டிற்குள் உள்ளீர்த்துக் கொள்வதற்கும் உதவும் என குற்றவியல் தடுப்பு வலைப்பின்னல் சங்கத்தின் தலைவர் அலெக்ஸ் சந்திரன் கிருஸ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்காவின் முன்னாள் இராணுவ வீரர்கள் விரிவான பயிற்சிகள் மற்றும் யுத்தகள அனுபவத்தைக் கொண்டிருப்பதால், இவர்கள் இந்த நாட்டின் பாதுகாப்பு அமைப்புக்களின் காத்திரமான அபிவிருத்திகளுக்கு பங்களிப்பு வழங்கக்கூடிய நிலையில் இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

இதனை மலேசிய உள்விவகார அமைச்சு செயற்படுத்தினால், சிறிலங்காவின் முன்னாள் இராணுவ வீரர்கள் மலேசியாவிற்கு வருகை தருவது நிச்சயமாகும். இதனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களாகச் செயற்பட்டுப் பின்னர் சிறிலங்கா இராணுவத்தில் இணைந்து பணியாற்றவர்களை மலேசியாவிற்கு அழைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்த விவகாரம் தொடர்பில் அலெக்ஸ் தனது ஆதரவை வழங்கியுள்ளதானது பல்வேறு வினாக்களைத் தோற்றுவித்துள்ளது.

மலேசியாவின் பாதுகாப்பு சேவைகளில் காணப்படும் பணி வெற்றிடங்களை நிரப்புவதற்காக சிறிலங்காவின் முன்னாள் வீரர்கள் அழைக்கப்படுவார்களாயின்  இந்த நாடு பல்வேறு தேவையற்ற விளைவுகளைச் சந்திக்க வேண்டியேற்படும். முன்னாள் புலி உறுப்பினர்கள் பாதுகாப்புப் பணிக்காக இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என உறுதிப்பாடு வழங்கப்பட்டிருப்பினும் கூட, இவர்களில் எத்தனை பேர் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றுகின்றனர் என்கின்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

2009ல் சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தம் முடிவடைவதற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் சிறிலங்கா இராணுவத்தில் இணைந்திருக்கலாம். எனினும் இவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவானதாகும். இது தொடர்பான தகவலை அலெக்ஸ் எங்கிருந்து பெற்றுக் கொண்டார் என்பதோ அல்லது இவருக்கு சிறிலங்கா விவகாரங்கள் தொடர்பாக அவ்வளவு தூரம் தெளிவான விளக்கங்கள் உள்ளதா என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் அதாவது தமிழ் மக்களின் பாரம்பரிய நிலத்தில் சிறிலங்கா இராணுவப் படைகளால் இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டது. இதில் பல ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பதை முழு உலகமும் நன்கறியும். இதற்கும் மேலாக, சிறிலங்கா இராணுவப் படையினரால் ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் திட்டமிட்ட ரீதியில் மிகக் கொடூரமாக பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டனர்.

சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் கூட, அந்நாட்டு இராணுவப் படையினரால் தமிழ்ப் பெண்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பல்வேறு சம்பவங்களை மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.

சிறிலங்கா இராணுவத்தால் இழைக்கப்பட்ட இவ்வாறான சித்திரவதைகளை மலேசியா கருத்திற்கொள்ளவில்லை என அலெக்ஸ் கருதுகிறாரா?

தமிழராகிய அலெக்ஸ், சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் அனுபவித்த பல்வேறு மீறல்கள் மற்றும் வடுக்கள் தொடர்பில் எவ்வித உணர்வற்றவராகவும் இருக்க முடியுமா?

இவ்வாறான மனிதாபிமானத்திற்கு எதிரான பல்வேறு மீறல்களில் சிறிலங்காவின் முன்னாள் இராணுவ வீரர்கள் பலர் ஈடுபட்டனர். தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மீறல்கள் தொடர்பாக அனைத்துலக சமூகம் தனது விசாரணையை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அனுமதிக்க வேண்டும் என தற்போது ஐ.நா மனித உரிமைகள் சபை வலியுறுத்தி வருகிறது.

முன்னாள் சிறிலங்கா இராணுவத்தினரை மலேசியா தனது நாட்டின் பாதுகாப்புப் பணிகளுக்காக ஆட்சேர்த்துக் கொள்ளுமாயின், அங்கிருக்கும் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பயங்கர மீறல்களை மலேசியா அசட்டை செய்துள்ளது என்ற அவப்பெயரைச் சம்பாதிக்க வேண்டியேற்படும்.

மலேசியா வாழ் தமிழ் மக்கள் சிறிலங்காப் படையினரை ஆட்சேர்ப்புச் செய்யும் நடவடிக்கையை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். இவ்வாறானதொரு நகர்வானது மலேசியா மற்றும் சிறிலங்கா வாழ் தமிழ் மக்களின் நலனையும் அவர்களது கௌரவத்தையும் பாதிக்கின்ற ஒரு செயல் என்பதை மலேசிய அரசாங்கம் புரிந்துகொள்வதுடன் இதற்கான அனுமதியை வழங்காது என நான் நம்புகிறேன்.

மறுபுறத்தே, தமிழ் மக்களின் துன்ப துயரங்களிலிருந்து சுயலாபம் ஈட்டலாம் என அலெக்ஸ் ஒருபோதும் நினைக்கக் கூடாது. இதற்குப் பதிலாக அலெக்ஸ் தமிழ் மக்களின் துன்பங்களைக் களைவதில் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.

கொழும்புக்கும், சீனாவுக்கும் ஒரே நேரத்தில் இந்தியா வைக்கும் ‘செக்’

$
0
0

colombo-harbourதென்னாசியாவின் ஒரேயொரு மிகப்பாரிய இறங்குதுறைமுகமாக உள்ள கொழும்பு அனைத்துலக இறங்குதுறையின் ஏகபோக ஆட்சியை முடிவிற்குக் கொண்டு வருவதோடு மட்டுமல்லாது  இந்திய மாக்கடலில் இந்தியா தனது கரையோர கப்பல் செயற்பாடுகளை விரிவாக்குவதற்கும், அனைத்துலக கப்பல்களை ஈர்ப்பதற்குமான ஒரு மூலோபாயமாக அமைந்துள்ளது.

இவ்வாறு Foreign Policy ஊடகத்தில் SHREY VERMA எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

கொழும்பு துறைமுகத்தின் அனைத்துலக கொள்கலன் முனையத்தில் 2014 செப்ரெம்பரில், சீன இராணுவ நீர்மூழ்கி தரித்து நிற்பதற்கான அனுமதி வழங்கப்பட்ட போது, பாதுகாப்பு கட்டமைப்புகளுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்ததால், அப்போது புதிதாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு சோதனையாக இருந்தது.

சீனாவின் விரிவாக்கப்பட்ட கடல் சார் ஆதிக்கம் மற்றும் அதன் துறைமுக அபிவிருத்தி மூலோபாயத்தை உள்ளடக்கிய கரையோர பட்டுப் பாதைத் திட்டமானது,  பாரம்பரிய செல்வாக்குமிக்க   இந்திய மாக்கடல் பிராந்தியம் மீதான இந்தியாவின் ஆதிக்கத்திற்கு தொடர்ந்தும் சவாலாக உள்ளது.

எனினும், இந்தியாவின் கப்பல் சட்டங்கள் மீது மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமாயின் கொழும்பில் சீனாவின் நிதியில் மேற்கொள்ளப்படும், கொழும்பு அனைத்துலக கொள்கலன் முனைய கேந்திர மையம் திட்டம் வெற்றி பெறுவதைத் தடுப்பதற்கும், இதன் வளர்ச்சியைத் தடுப்பதற்கும் உதவும் எனக் கருதப்படுகிறது.

கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் பாரிய நிறுவனமான A.P. Moller Maersk Group  ஆல் கட்டுப்படுத்தப்படும் மேற்கு இந்தியத் துறைமுகமான APM Terminals Pipavav  கடந்த மாதம் 800 Hyundai கார்களை இறக்குமதி  செய்வதற்கான கோரலைப் பெற்றது. இந்தியாவின் கிழக்குக் கரையோரத்திலுள்ள சென்னை துறைமுகத்தில் இந்தக் கார்கள் கப்பல்களில் ஏற்றப்பட்ட பின்னரே இதற்கான அனுமதி கோரப்பட்டது.

இந்தியாவின் இரு துறைமுகங்களுக்கு உள்ளே பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான கரையோர வணிகச் சட்டத்தில் சிறிய தளர்வை ஏற்படுத்தலாம் என இந்திய அரசாங்கம் தீர்மானம் எடுத்து ஐந்து மாதங்களின் பின்னரே 800 கார்கள் கப்பல்களில் ஏற்றப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் ஜோன்ஸ் சட்டத்திற்கு ஒப்பானதாகவே, இந்தியாவின் கரையோர வணிகச் சட்டமும் வெளிநாட்டுக் கப்பல்களுக்கு இரண்டாவது இடத்தையும் இந்தியாவின் சரக்குக் கப்பல்களுக்கு முன்னுரிமையையும் வழங்குகிறது. அதாவது சரக்குகளை ஏற்றுவதற்குப் பொருத்தமான இந்தியாவில் பதியப்பட்ட சரக்குக் கப்பல்கள் இல்லாதுவிடத்து மட்டுமே ஏனைய அனைத்துலகக் கப்பல்களுக்கான அனுமதி வழங்கப்படுகிறது.

ஆனால் தற்போது இந்தச் சட்டத்தில் சிறியதொரு தளர்வு மேற்கொள்ளப்பட்ட பின்னர், இந்தியாவின் கரையோரத்தில் இந்தியச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யாத அனைத்துலகக் கப்பல்களும் குறிப்பாக அனைத்துலக பாரந்தூக்கி கப்பல்களான மேர்ஸ்க் மற்றும் மெடிற்றெறேனியன் கப்பல் நிறுவனம் போன்றன சரக்கு வணிகத்தில் ஈடுபடுவதற்கான அனுமதி வழங்கப்படலாம். இதனை இந்திய அரசாங்கம் நிறுத்த முடியும்.

இந்தியாவின் கரையோர வணிகச் சட்டங்களின் ‘ஒட்டுமொத்த தளர்வையும் ஏற்படுத்தும் இறுதி வரைபு ஒன்று விரைவில் பிரதமர் நரேந்திர மோடியால் அங்கீகரிக்கப்படலாம் எனவும், இதன்மூலம் அனைத்துலக பாரிய கப்பல் போக்குவரத்துக்களுக்காக இந்தியாவின் பிராந்திய நீர்நிலைகள் மற்றும் துறைமுகங்கள் திறந்துவிடப்படலாம் எனவும் இந்திய கப்பற்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.

செலவுக் குறைப்பு மற்றும் பொருளாதார சார் நலன்களைக் கருத்திற் கொண்டே, மிகப் பாரிய கொள்கலன் தாங்கிகள் ஆழ்கடல் துறைமுகங்களுக்குப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்துறைமுகங்களிலிருந்து சிறிய மற்றும் ஆழமற்ற துறைமுகங்களுக்குப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்தியாவின் கரையோர வணிகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தளர்வுநிலையானது இப்பிராந்தியத்தில் பொருட்களைக் கொண்டு செல்வதில் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் கடந்த பத்தாண்டாக கப்பல் ஏற்றுமதிச் செயற்பாடுகள் இடம்பெறுகின்ற போதிலும், இந்தியாவின் கொள்கலன்களின் பெரும்பாலானவை கொழும்பு மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களின் ஊடாகவே தற்போது இடம்பெறுகின்றன.

ஏனெனில் அனைத்துலக கடல் வழிகளுக்கு அருகில் பாரிய ஆழ்கடல் துறைமுகங்களை இந்தியா தற்போது கொண்டிருக்காமையே இதற்கான காரணமாகும். இந்தியாவின் கரையோர வணிகச் சட்டமானது பிராந்தியக் கடற்பரப்பில் அந்நிய நாட்டுக் கப்பல்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கான தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள கரையோர வணிகச் சட்டமானது இந்தியாவிற்குள்ளே உள்ள இரு துறைமுகங்கள் தமக்கிடையே பொருட்களைப் பரிமாற்றிக் கொள்வதற்கு இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல்கள் மாத்திரமே ஈடுபட முடியும்.

இதேபோன்று இந்தியாவில் பதிவு செய்யப்படாத கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களில் தரித்து நிற்பதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளன.  இவ்வாறான சட்ட நடைமுறைகள் காரணமாக, இந்தியத் துறைமுகங்களில் தமது கப்பல்களைத் தரித்து நிறுத்துவதற்குப் பதிலாக சில வெளிநாடுகள் தமக்குச் சொந்தமான கப்பல்களைத் தரித்து நிறுத்துவதற்கு கொழும்புத் துறைமுகத்தைப் பயன்படுத்துகின்றன.

கொழும்பு அனைத்துலக இறங்குதுறைமுகம் போன்ற துறைமுகங்கள்  மற்றும் சிறிலங்கா துறைமுக அதிகாரசபை போன்றன இந்தியப் பொருட்களின் ஏற்றுமதிச் செயற்பாடுகளை அதிகம் மேற்கொள்கின்றன. இந்தியாவின் வெளிநாட்டுக் கப்பல் போக்குவரத்துக்களை கொழும்பு தனது அதிகாரத்தின் கீழ் செயற்படுத்துகிறது.

2014-15 வரையான காலப்பகுதியில் இந்தியாவின் கடல்வழிச் செயற்பாட்டின் 48 சதவீதம் கொழும்பின் கட்டுப்பாட்டின் கீழ் இடம்பெற்றது. இதேபோன்று கடல்வழியின் ஊடான இந்தியாவிற்கான வெளிநாடுகளின் பொருள் ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் மையமாக சிங்கப்பூர் இரண்டாம் இடத்தில் விளங்குகிறது. இச்செயற்பாடுகளின் 22 சதவீதமானது சிங்கப்பூரின் ஊடாக மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியாவின் மிக நெருங்கிய துறைமுகம் ஒன்றிலிருந்து 175 கடல்மைல்கள் தூரத்தில் அமைந்துள்ள கொழும்பு அனைத்துலக இறங்குதுறையானது இந்தியாவிற்கான பொருள் இறக்குமதி மையமாக விளங்குகிறது.

இந்தியாவிலிருந்தும் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குமான கடல்வழிப் போக்குவரத்து ஏற்றுமதி இறக்குமதிச் செயற்பாடுகள் 45 சதவீதமாகக் காணப்படுவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆகவே, இந்தியத் துறைமுகங்கள் நோக்கி கப்பல்களைத் திசைதிருப்புவதற்காக அனைத்துலக கப்பல் போக்குவரத்து வழிகள் தொடர்பாக இந்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு கோட்பாட்டு மாற்றங்களும் சீனாவின் நிதி ஆதரவுடன் செயற்படும் கொழும்பு அனைத்துலக இறங்குதுறைமுகத்தின் எதிர்கால செழுமையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

கொழும்புத் துறைமுகத்தில் தங்கியிருப்பதைக் குறைப்பதற்கும், குறிப்பாக இது சீன அரசின் ஆதரவில் செயற்படுகின்றமை போன்றன இந்தியா தனது கடல் சார் வணிகச் சட்டத்தில் தளர்வை ஏற்படுத்துவதற்கான காரணிகளாக இருக்கலாம்.

இதுமட்டுமல்லாது, இந்தியாவின் தென்கரையோரத்தில் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள விழிஞ்சத்தில் ஆழ்கடல் துறைமுகம் அமைக்கப்படுகிறது. புதிதாக அமைக்கப்படும் விழிஞ்சம் துறைமுகத்திற்கு கரையோர வணிகச் சட்டம் தளர்த்தப்படுவதற்கான திட்டத்தை இந்திய அரசாங்கம் கடந்த டிசம்பரில் அறிவித்தது. இத்துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கான பணிகள் 2018 நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விழிஞ்சம் துறைமுகமானது கிட்டத்தட்ட 66 அடி ஆழத்தில் அமைக்கப்படவுள்ளது. இது ஒரு ஆழ்கடல் துறைமுகமாக அமைக்கப்படும்.

எதிர்காலத்தில் கொழும்பு அனைத்துலக இறங்கு துறைமுகத்திலிருந்து கப்பல்களை விழிஞ்சம் போன்ற இந்தியத் துறைமுகங்கள் நோக்கி திசை திருப்புவதை இந்தியா நோக்காகக் கொண்டுள்ளதால் இந்திய அரசாங்கத்தின் தளர்த்தப்படும் கடல்வணிகச் சட்டம், தொடருந்துப் பாதைகள் மற்றும் வீதிகள் போன்றவற்றைத் தொடுக்கும் வகையில் உருவாக்கப்படும் விழிஞ்சம் ஆழ்கடல் துறைமுகம் போன்றன கணிசமான செலவுகளைச் சிக்கனப்படுத்துவதையும் அனைத்துலக கப்பல்கள் மூலம் பாரிய பொருளாதார நலன்களையும் அடைந்து கொள்ளலாம்.

தென்னாசியாவின் ஒரேயொரு மிகப்பாரிய இறங்குதுறைமுகமாக உள்ள கொழும்பு அனைத்துலக இறங்குதுறையின் ஏகபோக ஆட்சியை மட்டும் முடிவிற்குக் கொண்டு வருவதோடு மட்டுமல்லாது  இதற்கப்பால் இந்திய மாக்கடலில் இந்தியா தனது கரையோர கப்பல் செயற்பாடுகளை விரிவாக்குவதற்கும், அனைத்துலக கப்பல்களை ஈர்ப்பதற்குமான ஒரு மூலோபாயமாக அமைந்துள்ளது.

இதற்கும் மேலாக, கொழும்பின் சீன ஆதரவுத் துறைமுகம் தொடர்பில் இந்தியா கொண்டுள்ள பூகோளஅரசியல் ஆபத்தைக் குறைப்பதற்கான இதன் முயற்சிகளுக்கும் இந்தியாவின் இந்த மூலோபாயமானது சீனாவின் இந்திய மாக்கடல் மீதான செல்வாக்கைக் குறைப்பதற்கும் துணைநிற்கும்.

மாறுகிறதா கூட்டணி கணக்குகள்? –தி.சிகாமணி

$
0
0

tamilnadu electionதனித்துப் போட்டி அல்லது தனது தலைமையில் கூட்டணி என்று தேமுதிக அறிவித்திருப்பது, தேர்தல் களத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பலமுனை போட்டி ஆளும்கட்சிக்கு எதிரான வாக்குகளை சிதறடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வழக்கமாக கடந்த 25 ஆண்டுகாலமாக ஆளும் கட்சிக்கு எதிராக விரிவான கூட்டணி உருவாகி வந்தது. இந்தத் தேர்தலில் அதற்கான சாத்தியம் குறைந்துவிட்டது. தேமுதிக முடிவு திமுகவுக்கு ஏமாற்றத்தையும் சோர்வையும் தரக்கூடும். இதிலிருந்து அவர்கள் மீள்வதற்கு சில நாட்கள் பிடிக்கலாம்.

ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் பெரிய அளவில் பிரதான எதிர்க்கட்சிக்குப் போகும் நிலைமையில் 2014 மக்களவைத் தேர்தலில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. எனினும் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக எதிர்ப்பு வாக்குகள் திமுகவுக்குத்தான் முழுமையாக சிந்தாமல், சிதறாமல் வரும் என்று அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர் கூட்டணி பலம் குறித்து கவலைப்படாமல் ஆட்சியை வீழ்த்தும் சக்தி யாருக்கு உள்ளது என்பதைப் பார்த்து மக்கள் வாக்களிப்பார்களா? மாற்று பேசுபவர்களின் கடந்தகாலத்தைப் பரிசீலித்து முடிவுக்கு வருவார்களா? என்பதே இப்போதுள்ள கேள்வி.

மாற்று என்ற முழக்கத்துடன் வந்த ராமதாஸ், வைகோ ஆகியோர் திமுக, அதிமுக-வுடன் மாறி மாறி கூட்டணி வைத்துவிட்டனர். விஜயகாந்த் 2011ல் அதிமுக-வுடன் மட்டும் சேர்ந்துள்ளார். கூட்டணி என்று வந்துவிட்டால் ‘உன் வாக்கு வங்கி மூலம் சீட், என் செல்வாக்கு மூலம் உனக்கு ஆட்சி அதிகாரம்’ என்பதே நடக்கிறது. ஆனால் உங்கள் கட்சிக்கு அங்கீகாரம், சின்னம் எங்களால்தான் கிடைத்தது என்று திமுக, அதிமுக சிறிய கட்சிகளைப் பார்த்து ஏளனம் செய்வதும், நன்றி இல்லை என்று பேசுவதும் வாடிக்கையாக இருக்கிறது.

கொடுக்கல் வாங்கல்போல் காரிய சாத்தியம் என்பதே கூட்டணிக்கு அடிப்படை. ஒருசில விதிவிலக்குகள் தவிர்த்து, கொள்கை என்பதே இரண்டாம்பட்சம். பொதுவாக, இதில்தான் தீண்டாமைப் போக்கு மிகக் குறைவு. 1967 முதல் இதற்கு நீண்ட வரலாறு உள்ளது 100 சதவிகித கருத்து ஒற்றுமையுடன் ஒரு கூட்டணி உருவாக முடியாது. முரண்பாடான கூட்டணி என்று விமர்சனக் கணை வந்தாலும் கட்சிகள் அலட்சியப்படுத்திவிடும்.

இப்போது எழுந்துள்ள சூழலில் தேமுதிக-வை மக்கள் நலக் கூட்டணி தங்கள் பக்கம் இழுக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. அதிக இடங்களைக் கொடுத்து தேமுதிக-வுடன் அணி சேர முடியும். சமீபகாலம் வரை பாஜக-வுடன் கூட்டணி மற்றும் பேச்சுவார்த்தை என்று இருந்த தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி எனும் மதச் சார்பற்ற அணியில் சேர்வதை மக்கள் ஏற்பார்களா?

வெற்றிக்கோட்டைத் தொட வாய்ப்புள்ள கட்சிகள் மட்டும்தான் தனித்துப் போட்டியிட வேண்டுமா? தனித்தோ, சிறிய கட்சிகள் சேர்ந்தோ போட்டியிடுவதால் ஒரு பெரிய கட்சிக்கு வெற்றிவாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்பதால் அத்தகைய முடிவை எடுக்கக்கூடாதா? தனித்துப் போட்டி என்பதால் ஏற்படக்கூடிய ஆபத்துகளில் ஒன்று, சில கட்சிகளால் தொண்டர்களை தக்கவைக்க முடியாமல் போவது. என்றாவது ஒருநாள் ஆட்சிக்கு வருவோம் என்று நம்பும் அளவுக்கு வாக்கு வங்கி உள்ள கட்சிகளின் தொண்டர்கள் தொடர்ந்து ஒரே கட்சியில் இருப்பார்கள். எனக்கு குழப்பமில்லை என்று தெரிவித்துள்ள விஜயகாந்த்தால் கூட்டணி அரசியலில் இப்போதைக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் முடிவால் ஏமாற்றம் யாருக்கு? லாபம் யாருக்கு? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இப்போது, இன்று கூட்டணிக்காகக் காத்திருந்தவர்கள், காத்திருப்பவர்கள், மாற்று பேசுபவர்கள், தனித்துப் போட்டியிடுவோம் என்று கூறுபவர்கள் கடந்த காலங்களில் கூட்டணி அமைப்பதில் ஏற்படுத்திய அதிர்ச்சிகள், ஆச்சரியங்களைப் பார்க்கலாம்.

முதலாவதாக 1967 பொதுத்தேர்தல். இதில் கூட்டணி அமைப்பதில் ஒரு ஆச்சர்யம் நிகழ்ந்தது. மார்க்சிஸ்ட் கட்சி காலமெல்லாம் தொழிலாளர் பக்கம் நிற்கும் கட்சி. சுதந்திரா கட்சித் தலைவர் ராஜாஜி முதலாளிகள் பக்கம் நிற்பவர். காலமெல்லாம் கம்யூனிஸ்ட்டை எதிர்த்தவர். லைசன்ஸ் ராஜ்ஜியம் நடத்துகிறார் என்று ராஜாஜி ஆட்சியை மார்க்சிஸ்டுகள் விமர்சித்தனர். ஆனால் 1967 தேர்தலில் இரண்டு கட்சிகளும் கூட்டணியில் இணைந்து ஆச்சர்யப்படுத்தினர்.

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை.

அடுத்த தேர்தல் 1971. காலமெல்லாம் எதிரிகளாக இருந்த திமுக-வும் காங்கிரசும் கூட்டணி அமைத்தன. எந்த காங்கிரஸ் கட்சியை ஒழிப்பதே முதல் வேலை என்று திமுக கூறியதோ, அதே காங்கிரசுடன் கூட்டணி வைத்தது. இதே தேர்தலில், எதிர் அணியில் ஒரே கட்சியில் இருந்தாலும் தனிக் கட்சிகளாகப் பிரிந்தாலும் எந்த இரண்டுபேர் பரம வைரிகளாக இருந்தனரோ அதே காமராஜரும் ராஜாஜியும் ஒரே அணியில் இணைந்தனர்.

அடுத்து, 1977 தேர்தல்; அவசரநிலைப் பிரகடனத்தை ஆதரித்த எம்.ஜி.ஆரின் அதிமுக-வுடன் அவசரநிலையால் பாதிப்புக்குள்ளான மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணி சேர்ந்தது.இதேபோல, அவசரநிலைப் பிரகடனத்தால் கடுமையாக முடக்கப்பட்டு, தாக்குதல்களுக்கு ஆளான திமுக, காங்கிரஸ் கட்சியுடன் 1980ல் கூட்டணி அமைத்தது.

அடுத்து 1998. மதவாதக் கட்சி என திராவிடக் கட்சிகளால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கூட்டணி வைத்தது. தொடர்ந்து 1999ல் திமுக-வும் பாஜக உடன் கூட்டணி வைத்தது. இன்னொரு திராவிடக் கட்சியான மதிமுக-வும் இக் கூட்டணிகளில் இடம்பெற்றது.

2004 திமுக தலைமையிலான மெகா கூட்டணியில் காங்கிரசும் மார்க்சிஸ்ட்டும் இணைந்தன. இதோடு, கேரள சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடந்தது. அங்கு காங்கிரசும் மார்க்சிஸ்ட்டும் எதிரெதிர் அணியில் மோதிக்கொண்டன. பக்கத்து பக்கத்து மாநிலங்களில் ஒரு மாநிலத்தில் எதிரணியில் நின்ற கட்சி மற்றொரு மாநிலத்தில் கூட்டணி சேர்ந்த அதிசயம் நடந்தது.

கேட்டால், கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணி இல்லை; தொகுதி உடன்பாடுதான் என்பார்கள்.இப்போது சொல்லிக்கொள்ளும்படியான கூட்டணிகள் அமையவில்லை. ஒருவகையான பலப்பரீட்சையா அல்லது கடைசி நேரத்தில் மாற்றங்கள் நிகழுமா, பொறுத்திருந்து பார்க்கலாம்.

- தி.சிகாமணி (மூத்த ஊடகவியலாளர்)

வழிமூலம் – மின்னம்பலம்

மகிந்தவின் அரசியலில் தேங்காய்கள் –உபுல் ஜோசப் பெர்னான்டோ

$
0
0

mahinda-vajraகறுப்பு மந்திர சூனியங்கள் மற்றும் தேங்காய் உடைப்பு வழிபாடு போன்றன சிறிலங்காவின் அதிபர்களை வீட்டிற்கு அனுப்புவதுடன், அரசாங்கங்களையும் கவிழ்க்குமாயின், 2009ல் மகிந்த வீட்டிற்கு அனுப்பப்பட்டிருப்பார்.

இவ்வாறு சிலோன் ரூடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது விசுவாசிகளின் அரசியலில் தேங்காய்கள் மிகவும் முக்கிய இடத்தை வகிக்கின்றன.   சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராகவும் அதன் உறுப்பினர்களுக்கு எதிராகவும் கோயில்கள் மற்றும் விகாரைகளில் பல நூறாயிரக்கணக்கான தேங்காய்கங்களை உடைப்பதன் மூலம் பயனுள்ள பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என மகிந்தவும் அவரது விசுவாசிகளும் நம்புகின்றனர்.

‘தேங்காய்களை உடைப்பதன் மூலம் தற்போது நிலைமைகள் முன்னேற்றமடைகின்றன’ என மகிந்த ராஜபக்ச கண்டியிலுள்ள தலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுபடுவதற்காக சென்றபோது அதன் நுழைவாயிலில் நின்றவாறு தெரிவித்தார்.

ராஜித சேனாரட்ன சத்திர சிகிச்சைக்காக சிங்கப்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான தேங்காய் உடைப்பு வழிபாடு தமக்குச் சாதகமான பலனைத் தந்துள்ளதாக மகிந்த விசுவாசிகள் சமூக ஊடகங்களில் தெரிவித்தனர். இதேபோன்றே வணக்கத்திற்குரிய மாதுளுவாவே சோபித தேரர் சிங்கப்பூரில் காலமாகிய போது, மகிந்த விசுவாசிகள் தமது தேங்காய் உடைப்பு பிரார்த்தனை வீண்போகவில்லை எனத் தெரிவித்தனர்.

அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன இறந்தவேளையிலும் கூட, மகிந்தவிற்கு குணவர்த்தன இழைத்த அநியாயத்திற்கான பலனைத் தற்போது அனுபவித்து விட்டார் என மகிந்த விசுவாசிகள் முகப்புத்தகம் மற்றும் சமூக ஊடகங்களில் சுட்டிக்காட்டினர்.

எண்பது வயதான அரசியல்வாதி பேராசிரியர் விஸ்வ வர்ணபால கடந்த வாரம் இறந்த வேளையிலும் இதையே மகிந்த ராஜபக்சவின் விசுவாசிகள் கூறினர். விஸ்வ வர்ணபால கடந்த அதிபர் தேர்தலில் எதனையும் செய்யவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே.

சிங்கப்பூர் வைத்தியசாலையில் ராஜித மாற்றுவழி இணைப்பறுவை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட போது, மகிந்தவிற்கு துரோகமிழைத்தமைக்காகன தண்டனையை ராஜித தற்போது அனுபவிப்பதாக மகிந்த விசுவாசிகள் பரப்புரை செய்தனர். இவ்வாறான விடயங்களை மகிந்த விசுவாசிகள் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டுள்ளதுடன், தேங்காய்களை உடைப்பதன் மூலம் அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியும் என இவர்கள் எண்ணுகின்றனர்.

பிறேமதாசவின் ஆட்சிக்காலத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் திருமதி.சிறிமாவோ பண்டாரநாயக்க றொஸ்மீட்டிலிருந்த அவரது வதிவிடத்தில் படியில் சறுக்கிக் கீழே விழுந்தார். இவர் அந்தவேளையில் தனது மகன் அனுராவுடனான கருத்து முரண்பாட்டால் மனஅழுத்தத்திற்கு உட்பட்டிருந்தார்.

சிறிமாவோ மேலதிக சிகிச்சைக்காக வெளிநாட்டிற்குச் சென்றிருந்தார். அவர் நீண்ட காலமாக அரசியலிற்குத் திரும்பாது ஓய்வில் இருந்தார். இதே காலப்பகுதியில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அனுருத்த ரத்வத்தை, கண்டியிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த வேளையில் வீதி விபத்திற்கு ஆளாகினார். இவரது காலொன்றில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நீண்டகாலமாக இவர் அரசியலிலிருந்து ஓய்வெடுத்தார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை அழிப்பதற்கு பிறேமதாசா மந்திரக் கோலை உபயோகிக்கிறார் என்ற கருத்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பொதுவான நம்பிக்கையாகக் காணப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிறேமதாசவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்ட வேளையில், நாடாளுமன்றின் எதிர்க்கட்சி இருக்கைகளில் மலையாள வசீகர எண்ணெயை பிறேமதாச ஊற்றியதாக லலித் அத்துலத்முதலி, காமினி திசநாயக்க, போன்றவர்களும் மகிந்த ராஜபக்ச மற்றும் ஏனைய சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் தெரிவித்தனர்.

இதற்கு முதல் நாள் இரவு பிறேமதாசா, நாடாளுமன்றில் மலையாள மாந்திரீகப் பூசை ஒன்றை மேற்கொண்டதாகவும் வதந்திகள் பரப்பப்பட்டன. இதுமட்டுமல்லாது, பிறேமதாச தனது அதிபர் பதவியைப் பாதுகாப்பதற்காக மலையாள மந்திரக் கோல் சடங்கில் ஈடுபடும் வல்லுனர்களை  வரவழைத்ததுடன், இவருக்கு ஏழு கன்னிப் பெண்கள் பால் அபிசேகம் செய்ததாகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரால் வதந்தி பரப்பப்பட்டது.

நாட்டில் கன்னிப் பெண்கள் காணாமற் போகின்றனர் என்கின்ற பரப்பரையையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் பத்திரிகை ஒன்றின் ஊடாகப் பரப்பினர்.

இவ்வாறான வதந்திகள் எவ்வளவு தூரம் உண்மை என்பதற்கப்பால், பிறேமதாச, மாய மந்திரச் சடங்கில் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பது உண்மையாகும். அத்துடன் இவர் சோதிடத்திலும் நம்பிக்கை கொண்டிருந்தார். அதற்காக பிறேமதாசா, சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் மீது மந்திரக் கோல் சடங்கை மேற்கொண்டிருந்தார் எனக் கருதமுடியாது.

பிறேமதாச தனது அதிபர் பதவியைத் தக்கவைத்திருப்பதற்காக இவ்வாறான சடங்குகளை மேற்கொண்டார் எனக் கூறப்பட்டாலும் கூட, இவரால் இவரது பதவியையும் உயிரையும் பாதுகாக்க முடியவில்லை. பிறேமதாச, புலிகளின் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார்.

பிறேமதாசாவை விட, கறுப்பு மந்திரக் கோல் சடங்குகள் மீதும் சோதிடம் மீதும் மகிந்த ராஜபக்ச அதிக நம்பிக்கை கொண்டுள்ளார். இவ்வாறானதொரு பின்னணியைக் கொண்ட ஒருவரையே மகிந்த தனது வைத்தியராகத் தெரிவு செய்தார். பிறேமதாச தனக்கென எந்தவொரு சோதிடரையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் மகிந்த தனக்கென சோதிடர் ஒருவரை வைத்திருந்தார்.

தான் கொல்லப்பட்டு விடுவேனோ என்ற அச்சம் மகிந்தவிற்கு இருந்தது. சோதிடர் சந்திரசிறி பண்டார, மகிந்த துன்பகரமான சாவைச் சந்திக்கப் போகிறார் என எதிர்வுகூறியதன் காரணமாக, இவர் சிறையிலடைக்கப்பட்டார். மற்றத் தலைவர்களைப் போலல்லாது, மகிந்த தான் போகும் இடமெல்லாம் தனது கையில் கறுப்பு மந்திரக் கோலைக் கொண்டு சென்றுள்ளார்.

மகிந்தவின் கறுப்பு மந்திரக் கோல் மீதான நம்பிக்கை தொடர்பாக அனைத்துலக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. சந்திரிக்கா மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினரை வசப்படுத்துவதற்கான மலையாள கறுப்பு மந்திரக் கோல் சடங்கொன்றை மகிந்த மேற்கொண்டிருந்தார் என்ற வதந்திகள் பரப்பப்பட்டன. மந்திரக் கோல் மற்றும் சோதிடம் போன்றவற்றில் மகிந்த கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்டிருந்த வேளையில், அனோமா பொன்சேகா தனது கணவர் சரத் பொன்சேகா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட வேண்டும் எனக்கோரி விகாரைகளில் தேங்காய்களை உடைத்து வழிபாட்டில் ஈடுபட்டார்.  அனோமாவின் இந்தச் செயலை மகிந்தவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனினும், இந்த வழிபாட்டால் மகிந்தவிற்கு எவ்வித தீங்கும் ஏற்படவில்லை.

இவர் தொடர்ந்தும் பத்தாண்டுகள் அதிபராகப் பதவி வகித்துள்ளார். இவருக்கு முன்னாள் நாட்டை ஆண்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தன மற்றும் சந்திரிக்கா ஆகியோர் தமது ஆட்சிக்காலங்களில் மகிந்தவை விட ஓராண்டு காலம் அதிகமாகவே ஆட்சி செய்தனர். மகிந்தவும் அதிபர் தேர்தலைக் காலத்திற்கு முன்னர் நடத்தாது விட்டிருந்தால், இவா தற்போதும் அதிபராக இருந்திருப்பார். சோதிடம் மற்றும் கறுப்பு மந்திரக் கோல் போன்றவற்றில் மகிந்த அதிக நம்பிக்கை கொண்டிருந்ததால், தனது கட்சியின் பொதுச் செயலர் தனக்கெதிராக தேர்தலில் போட்டியிடுவார் என்பதை இவர் கவனத்தில் எடுக்கவில்லை.

மகிந்த, கறுப்பு மந்திரவாதிகள் மற்றும் சோதிடர்களாலேயே அழிவைச் சந்தித்தார். ஆனால் இதே நம்பிக்கைகளை இவர் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காகப் பயன்படுத்துகிறார் என்பது ஆச்சரியமளிக்கும் விடயமாகும். சோபித தேரரின் இழப்பு என்பது மகிந்தவிற்கு தீமை அளித்துள்ளது.

தேரர் உயிருடன் இருந்திருந்தால், நல்லாட்சிக்கு எதிராக மக்களை ஒன்றிணைத்திருப்பார். தேரர் இறக்கும் வரை தற்போதைய ஆட்சியை எதிர்த்துச் செயற்பட்டிருந்தார். தேரர் தற்போதைய ஆட்சியில் நிலவும் பல்வேறு பின்னடைவுகள் தொடர்பாகக் குற்றம் சுமத்தியிருந்தார். இவர் தனக்கென ஆதரவாக எவ்வித அரசியல் கட்சியையும் கொண்டிருக்கவில்லை.

1977ல் அப்போதைய ஐ.தே.க அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான பரப்புரையில் சோபித தேரர் ஈடுபட்டிருந்தார். 1994ல் சந்திரிக்கா பிரதமராகப் பதவியேற்ற போது, சோபித தேரரின் விகாரைக்குச் சென்றிருந்தார். சந்திரிக்கா பிழையான அரசியல் பாதையில் பயணிக்க ஆரம்பித்த போது, ஐ.தே.க ஆட்சியிலிருந்து தூக்கி வீசப்பட்டு 17 ஆண்டுகள் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாமைக்குக் காரணமான சோபித தேரரால் மீண்டும் ஐ.தே.க ஆட்சிக்குக் கொண்டுவரப்பட்டது. தேரர் உயிருடன் இருந்திருந்தால் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழும் முதலாவது நபராக இருந்திருப்பார். இந்த உண்மையை மகிந்தவும் அவரது விசுவாசிகளும் உணரத் தவறிவிட்டனர்.

இதற்குப் பதிலாக இவர்கள் சோபித தேரரின் இறுதிச்சடங்கின் போது மதுபானம் அருந்தி மகிழ்ந்தனர். ‘பாவிகள் ஒருபோதும் ஞானிகளாக மாறமுடியாது’ இந்த உண்மை மகிந்த விசுவாசிகளுக்குப் பொருத்தமானதாகும். ஏனெனில் இவர்கள் மக்கள் மீது நம்பிக்கை கொள்ளத் தவறியுள்ளனர். ஆனால் இவர்கள் மந்திரவாதிகள் மற்றும் சோதிடர்களுக்குப் பின்னால் ஓடுகின்றனர்.

‘சேர், அன்ரன் ஜோன்ஸ் மற்றும் அஜந்த ரணசிங்க ஆகியோர் மகிந்த விசுவாசிகளின் தேங்காய் உடைப்பு வழிபாட்டாலேயா இறந்தனர்?’ என முச்சக்கரவண்டி ஓட்டுநர் ஒருவர் என்னிடம் வினவினார். ஆம்.. நிச்சயமாக இந்த வினாவில் அர்த்தம் உள்ளது.

அதிபர் தேர்தலை முன்கூட்டி நடத்துவதற்கான அறிவிப்பை மகிந்த விடுத்த போது, சோபித தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மகிந்த மற்றும் கோத்தபாய ஆகியோர் தேரரை அமைதியாக இருக்குமாறு அச்சுறுத்தல்களை மேற்கொண்டனர். இவர்களது அச்சுறுத்தல்கள் மற்றும் தலையீடுகளின் விளைவாகவே தேரர் நோய்வாய்ப்பட்டார்.

சோபித தேரர் இறப்பதற்கு முன்னர் அஸ்கீரிய பீடத்தின் மகாநாயக்கர் வணக்கத்திற்குரிய உடுகம சிறி புத்தரகித்த தேரர் காலமாகினார். புத்தரகித்த தேரர் இறந்த வேளையில் மைத்திரி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மகாநாயக்க தேரர் ஒருபோதும் அரசியலில் பிரவேசிக்கவில்லை. இவர் தனது முதுமையின் காரணமாக நோய்வாய்ப்பட்டு இறந்தார்.

கறுப்பு மந்திர சூனியங்கள் மற்றும் தேங்காய் உடைப்பு வழிபாடு போன்றன சிறிலங்காவின் அதிபர்களை வீட்டிற்கு அனுப்புவதுடன், அரசாங்கங்களையும் கவிழ்க்குமாயின், 2009ல் மகிந்த வீட்டிற்கு அனுப்பப்பட்டிருப்பார். ஏனெனில் 2009ல் சிறிலங்காவின் வடக்கில் காணாமற் போனவர்களின் பெற்றோர்கள் மற்றும் கணவனை இழந்த பெண்கள் போன்றோர் ஒவ்வொரு கோயில்களிலும் மகிந்தவைப் பழிவாங்குவதற்காக தேங்காய்களை உடைத்து வழிபாட்டில் ஈடுபட்ட போது மகிந்த வீட்டிற்கு அனுப்பப்பட்டிருப்பார்.

இரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 07

$
0
0

நீங்கள் அதிகளவுக்கு விமர்சிக்கப்பட்டால் உங்களுடைய செயற்பாடும் கருத்தும் அதிகளவுக்கு கவனிக்கப்படுகிறது என்று அர்த்தமாகும்.இந்த விமர்சனங்கள் உங்களுடைய குறைகளை தவறுகளை சுட்டிக்காட்டுவதாக இருந்தால் கண்டிப்பாக நீங்கள் அவற்றை கவனத்தில் எடுத்து உங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.

மாறாக இந்த விமர்சனங்கள் உங்களை கொச்சைப்படுத்துவதாகவும் உங்கள் மீது சேறடிப்பதாகவும் இருந்தால் அதையிட்டு நீங்கள் கவலைகொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் இவை உங்களுக்கு கிடைத்த வெற்றியாகும். எதிரிகளுக்கு தாங்கள் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப் போய்விடுவோம்; தோற்றுப் போய்விடுவோம் என்று பயம் ஏற்படும் போது தான் அவர்கள் உங்கள் மீது கீழ்த்தரமான வர்த்தைகளை பயன்படுத்தி சேறடிப்பார்கள்.”

0000

மக்களின் எழுச்சியை வீணடித்தமை தொடர்பாக…….

2008 நவம்பர் மாதம்…

நாச்சிக்குடா…அக்கராயன்…கிராஞ்சி…கௌதாரிமுனை..பூநகரி… என்று பல்வேறு இடங்களை சிறீலங்கா படையினர் கைப்பற்றிக் கொண்டு தொடர்ந்து முன்னேறி வந்த நேரத்தில்…

மறுபுறத்திலே சிறீலங்கா படையினர் நடத்திய எறிகணை வீச்சு விமானக்குண்டு வீச்சுகளில் எமது மக்கள் வகைதொகையின்றி கொல்லப்பட்டும் எஞ்சியவர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து கொண்டிருந்த நிலையில்…..

இங்கே புலம் பெயர்ந்த மக்கள் மத்தியிலே ‘இந்தப் போராட்டம் தோற்றுப் போய்விடக் கூடாது. விடுதலைப்புலிகள் தோற்றுப் போய்விடக்கூடாது. எமது உறவுகள் காப்பாற்றப்பட வேண்டும்” என்கின்ற உணர்வும் ஆதங்கமும் ஏற்பட்டிருந்தது. இது ஒரு மாபெரும் எழுச்சியாக உருவெடுத்ததும் அனைவரும் அறிந்ததே. விடுதலைப்புலிகள் தங்கள் வாழ் நாளெல்லாம் எதிர்த்தவர்கள் கூட இந்தப்போராட்டம் தோற்றுவிடக் கூடாது என்கிற உணர்வோடு இந்த எழுச்சியிலே பங்குகொண்டதையும் நாம் அறிவோம்.

சிறீலங்கா அரசாங்கம் கூட இந்த எழுச்சியை கண்ட அஞ்சியதும் எல்லோரும் அறிந்த ஒன்று தான்.

ஆனால் உணர்வு நிலையிலான இந்த மக்கள் எழுச்சியை நடைமுறை சார்ந்த அறிவுபூர்வமான வேலைதிட்டமாக மாற்றி அதனுடாக எமது இலக்கை அடையக்கூடிய அனுபவம் புலம்பெயர்ந்த நாடுகளின் பொறுப்பாளர்களுக்கு இல்லாமல் இருந்தது. இது அவர்களே எதிர்பார்க்காத ஒரு பேரெழுச்சி. ஏற்கனவே அவர்களுக்கு இருந்த அழுத்தங்கள், நெருக்கடிகள் மற்றும் போராட்டம் தோல்வி நோக்கிச் செல்வதாக வந்து கொண்டிருந்த செய்திகள், அவர்களை அதிகளவுக்கு பாதித்தது என்பதை நேர்மையுடன் பதிவு செய்தாக வேண்டும்.

இந்தக் காலகட்டத்திலே அவர்களுக்கு ஆலோசகர்களும் வழிகாட்டிகளும் தேவைப்பட்டார்கள். நிறைய ஆலோசகர்கள், நிறைய வழிகாட்டிகள், வந்தார்கள். தமிழர்கள் ஒன்றுபட்டு தெருவில் நின்று இரவு பகலாக போராடினால் அமெரிக்கா போரை நிறுத்தும்;கிளாரி கிளிண்டன் உதவி செய்வார். ஓபாமா மீட்புக்கப்பல் அனுப்புவார், ஐ.நா. நிச்சயம் தலையிட்டு போரை முடிவுக்கு கொண்டு வரும் என்றெல்லாம் பெரிய பெரிய ஆலோசனைகள் எல்லாம் வழங்கப்பட்டன.

இங்குள்ள பொறுப்பாளர்களுக்கு இவையெல்லாம் ஆச்சரியமான விடயங்களாக இருந்தன. இதெல்லாம் நடக்குமா என்று சிந்திக்கக் கூட அவர்களால் முடியவில்லை. அந்தளவுக்கு அவர்களுக்கு நெருக்கடிகள் இருந்தன. அவர்கள் வன்னிக்கு தகவல் அனுப்பி அவர்களையும் இலவு காத்த கிளிகளின் நிலைக்கு தள்ளினார்கள்

இந்த நேரத்திலே பாரிசிலே எனக்கு நன்கு அறிமுகமான குர்திஷ்தான் விடுதலை இக்கத்தின் மகளிர் பிரிவு தளபதிகளில் ஒருவரான சகின் கொன்சியின் (Sakine Consiz) உதவியோடு(பாரிசின் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டவர்) இன்று பிரான்சின் முக்கிய கட்சியின் முன்ணித்தலைவர் ஒருவரை சந்தித்து இந்த பேரை நிறுத்த உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டோம். இந்தச் சந்திப்பு 30.11.2009 மாலை இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது அவர் எங்களுக்கு சில விடயங்களை புரியவைத்தார்.

சிறீலங்கா அரசாங்கம் தான் நடத்துகின்ற யுத்தத்தை பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்று பிரகடனப்படுத்தியிருக்கிறது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தை அமெரிக்கா,  கனடா, அவுஸ்ரேலியா,  ஐரோப்பிய ஒன்றியம் இந்தியா உட்பட பல நாடுகள் பயங்கரவாத இயக்கமாக அறிவித்திருக்கின்றன.

  • பயங்கரவாத இயக்கமாக பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு இயக்கத்துக்கு எதிராக ஐ.நாவில் அங்கம் வகிக்கும் ஒரு நாடு மேற்கொள்ளும் யுத்தத்தை ஏனைய உறுப்பு நாடுகள் எதிர்த்தால் அது பயங்கரவாதத்தை ஆதரித்ததாக அமையும் என்பதால் எந்த நாடும் தனது இராஜதந்திர நலன்களை தாண்டி இந்த முடிவை எடுக்காது.
  • பிரான்சுக்கு தனிப்பட்ட முறையில் சிறீலங்கா மீது எந்த அக்கறையும் கிடையாது. அதனுடைய செல்வாக்கு வலயத்துக்குள் அது அடங்கவில்லை. சிறீலங்கா விடயத்தில் இந்தியா என்ன முடிவு எடுக்கிறதோ அதைத்தான் பிரான்ஸ் ஆதரிக்கும்.
  • மேற்குலக நாடுகளில் அகதிகளாக தஞ்சம்புகுந்துள்ள தமிழ் மக்கள் இந்த யுத்தத்தை நிறுத்தும்படி முன் வைக்கும் எந்தக் கோரிக்கையும் இந்த நாடுகள் அனுதாபத்துடன் பரிசீலிக்கும். ஆனால் அவற்றை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அவற்றிக்கு இல்லை.

……இவை தான் அவர் எமக்கு புரியவைத்த விடயங்களில் முக்கியமானவை. விடுதலைப்புலிகள் மீதான தடை கொண்டு வரப்பட்ட போது அதை சட்டரீதியாக எதிர்த்து, தடையை நீக்குவதற்கு முயற்சிக்காததை கண்டித்த அவர், அந்த இக்கட்டான நிலையில் யுத்தத்தை நிறுத்துவதற்குள்ள சில வழிமுறைகளையும் எமக்குத் தெரிவித்தார்.

  • இந்த யுத்தம் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமென்ற போர்வையில் அப்பாவி மக்களுக்கு எதிராக நடத்தப்படும் யுத்தம் என்பதை நிரூபிக்க வேண்டும்.
  • இந்த யுத்தத்தின் பின்னணியில் இருக்கும் இனவாதம், மதஅடிப்படைவாதம் முதலான சகல பிற்போக்கு தனங்களையும் அம்பலப்படுத்த வேண்டும்.
  • ஒவ்வொரு நாட்டிலும் அந்தநாட்டு குடிமக்களைக் கொண்டு இந்த யுத்தத்தை நிறுத்துமாறு அந்தந்த நாட்டு அரசாங்கங்களுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பி வைக்க வேண்டும்.
  • பிரான்சும் பிரித்தானியாவும் பாதுகாப்பு சபையிலே வீட்டோ அதிகாரத்தைக் கொண்ட நாடுகள். இந்த இரண்டு நாடுகளிலும் குறைந்த பட்சம் 1 இலட்சம் குடிமக்களது கையொப்பங்களை திரட்டி மக்களுக்கு எதிரான இந்த யுத்தத்தை நிறுத்துமாறு அந்தந்த அரசாங்கங்களுக்கு அவசர மனு கொடுக்க வேண்டும்.
  • பிரெஞ்சு குடிமக்கள் ஒரு இலட்சம் பேரின் கையொப்பத்துடன் ஒரு மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டால் கண்டிப்பாக அவர் அந்த மனுமீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால் இந்த விடயத்தை பிரான்சை கொண்டு ஐ.நா பாதுகாப்பு சபையில் ஒரு அவசர தீர்மானமாக கொண்டுவரச் செய்யலாம். சீனாவோ ரஸ்யாவோ தங்களது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதை நிராகரித்தால் மீண்டும் அதை பொதுச் சபைக்கு கொண்டுவரச் செய்யலாம். பொதுச் சபையில் பிரான்ஸ் தனது செல்வாக்கு உட்பட்ட நாடுகளை இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக திரட்டும் போது பிரித்தானியாவை கொண்டு அதன் செல்வாக்குக்கு  உட்பட்ட நாடுகளை ஆதரவாக திரட்டுமாறு நிர்ப்பந்தித்தால் நிச்சயமாக இந்த யுத்தத்தை நிறுத்த முடியும்;…..

இவைதான் அவர் தெரிவித்த வழிமுறைகளாகும். இந்த நடவடிக்கை மூலம் மக்களை அழிவில் இருந்து காப்பாற்றுவதோடு போராளிகளையும் போர் கைதிகளாக பிடிக்கப்படும் இழிநிலையில் இருந்து காப்பாற்றலாம். யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்படும் திகதியில் இருந்து போர்புரிந்த இரண்டு தரப்பையும் அவரவர் நிலைகொண்ட இடங்களில் இருக்க வைத்து சர்வதேச மத்தியத்துவத்துடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கான தீர்வைக்காணலாம் என்று அவர் அதற்கான விளக்கத்தையும் தந்திருந்தார்.

உண்மையில் அந்த இக்கட்டான நிலையில் மக்களையும் போராட்டத்தையும் போராளிகளையும் தலைமையையும் காப்பாற்றுவதற்கு இது தான் சரியான வழியாக  எனக்குப்பட்டது.

அந்த நேரத்திலே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, போராளிகளையும் தலைமையையும் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடையச் செய்யும் ஒரு சதிவலை விரிக்கப்பட்டு கையறு நிலையில் எல்லோரும் அதில் சிக்கிக் கொண்ட அவலம் தான் நேர்ந்தது.

நான் இந்த விடயத்தை புலத்திலுள்ள உரியதரப்புக்கு எடுத்துச் சொல்லி இராஜதந்திர ரீதியாக அவசர அவசரமாக நாங்கள் செயற்பட வேண்டும் என்பதை புரியவைக்க மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன.

இவை பற்றி நான் இங்கே விலாவாரியாக எழுத விரும்பவில்லை. அப்படி எழுதினால் அது போராளிகள் செய்த தியாகத்தை கொச்சைப்படுத்துவதாக அமையும் என்பதால் அதை தவிர்த்து விடுகிறேன்.

எல்லோரும் ‘அமெரிக்கா ஆபத்பாந்தவனாக வந்து மக்களையும் போராட்டத்தையும் தலைமையும் காப்பாற்றும்” என்ற நம்பிக்கையோடு சந்திப்புக்கு கூட நேரமில்லாமல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

உணர்வுள்ள பல இளைஞர்கள் தங்களை ஒறுத்து உண்ணா நோன்பிருந்து இந்த உலகத்தின் கண்கள் திறக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்தார்கள். எமது மக்கள் கொடுங்குளிரையும் மழையையும் பொருட்படுத்தாமல் ‘இந்த புலம்பெயர்ந்த நாடுகளின் பார்வை எங்கள் மீது விழாதா?” என்ற ஏக்கத்தோடு இரவு பகலாக வீதிகளிலே நின்றார்கள்.

புலம்பெர்ந்த தமிழ் பிரமுகர்கள் குழுவினர் பிரித்தானிய,  பிரெஞ்சு அமைச்சர்களை சந்தித்துப் பேசினார்கள்.

பிரித்தானிய, பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர்கள் சிறீலங்கா சென்று யுத்தத்தை நிறுத்தும்படி மகிந்த அரசாங்கத்தை கோரினார்கள்.

சீறீலங்கா அரசாங்கமோ ‘மக்களை நாங்கள் கொல்லவில்லை. பயங்கரவாதிகள் மனித கேடயங்களாக பிடித்து வைத்திருக்கும் அவர்களை மீட்கவே நாங்கள் போர் நடத்துகிறோம். அதனால் அதை நிறுத்த முடியாது என்றது.

அவர்கள் இருவரும் சிறீலங்காவின் விருந்தோம்பலை மெச்சிவிட்டு திரும்பி வந்தார்கள்.

பிரான்ஸ் அரசாங்கம் பாதுகாப்பு சபையிலே தனக்குரிய பொது நேரம் ஒன்றிலே ஒரு தீர்மானமாக அல்லாமல் எமது பிரச்சினையை எழுப்பியது. சீனாவும் ரஸ்யாவும் அது மக்களுக்கு எதிரான போரல்ல, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் அதை விவாதிக்கத் தேவையில்லை என்று உரத்துக் கூறின. பிரான்சோ பிரித்தானியாவோ அதன்பின் எங்கள் விடயம் பற்றி வாய் திறக்கவில்லை.

அந்த முக்கியமான பிரெஞ்சு அரசியல் தலைவர் எங்களுக்குச் சொன்ன அத்தனை விடயங்களும் அச்சொட்டாக நடந்தேறின.

கிளிநொச்சி வீழ்ந்து விட்டது… ஆனையிறவு விழ்ந்துவிட்டது…

ஆனந்தபுரத்திலே எங்கள் வீரத்தளபதிகள் எதிரியின் நயவஞ்சகமான தாக்குதலில் வீரச்சாவை தழுவிக் கொண்டார்கள்….

எங்கள் மக்கள் நாளாந்தம் வகை தொகையின்றி வதைக்கப்பட்டும் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டும் இருந்தார்கள்….

நாங்கள் இங்கே ஐரோப்பிய தெருக்களில் கையறு நிலையில் அழுது புலம்பிக் கொண்டிருந்தோம்…

(தொடரும்)

- சிவா சின்னப்பொடி


சீமான் : முரண்பாடுகளின் மொத்த வடிவம்

$
0
0

seemaan-velசீமான் இயக்கிய `பாஞ்சாலக்குறிச்சி’ படத்தில் நகைச்சுவை காட்சி ஒன்று உண்டு. முழு போதையில் வீட்டுக்கு வரும் வடிவேலு ஒரு ஓலைப் பாயை விரித்து படுத்துக் கொள்ள முயல்வார். அது எப்படி விரித்தாலும் சுருட்டிக்கொண்டே வரும்.

கடைசியில் பாயை விரித்து வைத்துக் கொண்டு அதில் தொபுக்கடீர் என்று விழுவார். பார்த்தால் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டும். அப்படியும் விடாமல் “சின்னான்னா சும்மாவா” என்று கெத்தாக பேசுவார்.

சீமானும் கிட்டத்தட்ட சின்னான் போல ஆகிவிட்டார். தமிழ்தேசியம் என்ற ஒரு ஓலைப் பாயை வைத்துக் கொண்டு விரிப்பதற்கு பல வகைகளில் முயல்கிறார். கடைசியில் கீழே விழுந்து மூக்கு உடைந்ததுதான் மிச்சம். அப்போதும் கூட இது கரிகால் பெருவளத்தானின் ரத்தம். ராஜ ராஜசோழன், ராஜேந்திர சோழனின் பரம்பரை ரத்தம் என்று கத்தி கூச்சல் போட்டுக்கொண்டிருக்கிறார்.

தந்தி தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் பேராசிரியர் அருணனை இவர் தரக்குறைவாக, கண்ணியக்குறைவாக பேசியது நடுநிலையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஊடகத்தில் மாற்றுக் கருத்து உள்ளவர்களோடு விவாதிக்கும்போது கூட கண்ணியம் குறையாமல் அதே நேரத்தில் தன்னுடைய கருத்தை அழுத்தமாக முன்வைப்பவர் பேராசிரியர் அருணன்.

தமிழரின் தத்துவ மரபை தன்னுடைய ஆழ்ந்த வாசிப்பின் மூலமும் உழைப்பின் மூலமும் நிரூபித்தவர். சமூக சீர்திருத்தம் – இரு நூற்றாண்டு வரலாறு, தமிழர் தத்துவ மரபு, காலந்தோறும் பிராமணியம், கடவுளின் கதை போன்ற இவருடைய அரிய நூல்கள் தமிழ் உலகிற்கு அவர் அளித்துள்ள கொடைகள். தமிழருக்காகவே அவதரித்திருப்பதாக பீற்றிக்கொள்ளும் சீமான், மேடையில் கத்தி கூச்சல் போட்டதைத் தவிர தமிழுக்கு எதுவும் செய்ததில்லை. தடித்த வார்த்தைகளை தாறுமாறாக பேசுவதன் மூலம் மட்டுமே தன்னையும் ஒரு ஆளுமையாக கருதிக் கொள்கிறார்.

ஆனால், இப்படிப்பட்டவரையும் நியாயப்படுத்தி எழுதுவதற்கு சிலர் இருக்கிறார்களே என்று நினைக்கும்போதுதான் வேதனையாக இருக்கிறது. “இனவெறியா? மார்க்சிய பைத்தியமா?” என்ற தலைப்பில் அ.வியனரசு என்பவர் குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் விருந்தினர் பக்கத்தில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

விருந்து பலமாக இருக்கிறது போலிருக்கிறது. வியனரசு நல்ல தமிழறிஞர்தான் அவருடைய போதாத காலம் இப்போது சீமானிடம் சென்று சிக்கியிருக்கிறார். சீமானிடமிருந்து வெளியேறிய அய்யநாதன் மற்றும் அவரது கட்சி முன்னாள் மாவட்டச் செயலாளர்களிடம் விசாரித்தால் தெரியும் சீமானின் முகவிலாசம் என்னவென்று.

தந்தி டிவியில் சீமான் வரம்பு மீறி வார்த்தைகளை அள்ளிக் கொட்டியதை நியாயப்படுத்தும் வகையில், ஜனநாயகப்படியான விவாதத்தில் அருணன் நேரச் சுரண்டலில் இறங்கியதாகவும், அதை எதிர்க்கும் இளைஞனின் கோபக் கனலாய் ஒரு வார்த்தை அப்படித்தான் வரும் என்றும் ஆதிக்கவெறியர்களுக்கு எதிரான புரட்சியின் வெளிப்பாடு அது என்றும் வியனரசு கூறியுள்ளார்.

சீமான் பங்கேற்கும் விவாதங்களை கவனிக்கும் யாரும் எளிதாக ஒன்றை அவதானிக்க முடியும். சீமான்தான் பலரது நேரத்தையும் அபகரித்து காட்டுக் கூச்சல் போட்டு தன்னுடைய அறியாமையை அம்பலப்படுத்திக் கொள்வார். சீமான் கூறியது ஆதிக்க வெறியர்களுக்கு எதிரான புரட்சியின் வெளிப்பாடாம். இவர்களது புரட்சியைப் பார்க்கும்போது புல்லரிக்கிறது. போக்கிரித்தனத்திற்கு பெயர் புரட்சி அல்ல.

தமிழகத்திற்கு சொந்தமான தாதுமணலை கொள்ளையடித்த வைகுண்டராஜனின் திருமண விழாவில் சீமான் பங்கேற்று வாழ்த்துரைத்து வழங்கியதும் கூட `தமிழ் தேசிய புரட்சி’யின் வெளிப்பாடுதான் போலும். சீமானின் கொள்கை என்ன என்று கேட்டபோதுதான் அவர் அத்துமீறி வார்த்தைகளை அள்ளிக் கொட்டினார்.

அவரிடம் கொள்கை இருக்கிறதா என்று கேட்டிருக்கக் கூடாதுதான். கொள்கை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக்கூடியவர்தான் அவர். சீமானின் நாம் தமிழர் கட்சி ஆவணம் ஒன்றை வெளியிட்டது. அது முரண்பாடுகளின் மூட்டையாக இருப்பதை பலரும் சுட்டிக்காட்டிய பிறகு அதை அப்படியே அமுக்கிவிட்டார்கள். அதில் நாம் தமிழர் கட்சியில் சேருபவர்கள் இன்சொல் பேச வேண்டும் என்றெல்லாம் இருக்கிறது.

seemaan-vel

அது சீமானுக்கு மட்டும் பொருந்தாது போலும். சீமான் ஒரு நேர்காணலில் தகப்பனையும், தலைவனையும் கடன்வாங்க முடியாது என்று கூறியுள்ளார். ஆனால் பாட்டனை மட்டும் அவ்வப்போது கடன்வாங்கிக் கொள்ளலாம் போலிருக்கிறது.

ஆரம்பத்தில் நான் பெரியாரின் பேரன் என்றார் சீமான். பிறகு பெரியாரையே கொச்சைப்படுத்தினார். பெரியார் தமிழர் தலைவர் அல்ல என்றார். கடைசியில் முருகன்தான் என் முப்பாட்டன் என்று கூறி வேல் தாங்கி, காவடி எடுத்து ஆடிக்காட்டினார். இன்னும் எத்தனை பாட்டன்கள் வருவார்களோ தெரியவில்லை.

அவருடைய கட்சி விளம்பரத்தில் பால் தாக்கரே, ஹிட்லர் போன்ற மனிதகுல விரோதிகளின் படங்களை கூச்சமில்லாமல் போட்டுக் கொள்கிறார்கள். மும்பையிலிருந்து தமிழர்களை அடித்து விரட்டியவர்தான் பால் தாக்கரே. அவர்தான் இவருக்கு முன்னோடியாம். இவர்களது தமிழ் தேசியத்தை புரிந்துகொள்ளவே முடியவில்லை.

மராட்டியத்தில் இனக்கலவரத்தை தூண்டிவிட்ட பால் தாக்கரே கம்யூனிஸ்ட்டுகளையும் குறி வைத்து தாக்கினார். அந்த வகையில் சீமானுக்கு அவர் முன்னோடிதான்.ஆரிய இனம்தான் உலகத்தில் உயர்ந்த இனம்; ஆரிய ரத்தம்தான் தூய ரத்தம் என்று கூறித்தான் ஹிட்லர் பல்லாயிரக்கணக்கான யூத மக்களை நரவேட்டையாடினான். அந்த பாசிச ஹிட்லரும் கம்யூனிஸ்ட் விரோதிதான். இவர்களை எல்லாம் கொண்டாடுவதிலிருந்தே சீமானை புரிந்துகொள்ள முடியும்.

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று தமிழகம் முழுவதும் சென்று அதிமுகவுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டார் சீமான். இலை மலர்ந்தது, ஈழம் மலர்ந்ததா என்பதை அவர்தான் விளக்கவேண்டும்.

இப்படி தடித்தனமாக பேசுவது சீமானுக்கு ஒன்றும் புதிதல்ல. சென்னையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் சுப.வீ. குறித்து பேசும்போது இப்படியே கத்தி, கத்தி சாக முடியாது, பொறுத்து பொறுத்துப் பார்ப்பேன், இல்லையென்றால் கத்தி எடுத்து குத்தவேண்டியதுதான் என்று பேசியவர்தான் சீமான். இப்படியெல்லாம் பேசுவது என்ன மனநிலை என்பதை வியனரசுதான் விண்டுரைக்க வேண்டும்.

`யாதும் ஊரே’ என்பதுதான் தமிழ்நெறி என்கிறார் வியனரசு. ஆனால், சீமானின் தமிழ் தேசியம் சாதியத்தை அடிப்படையாகக் கொண்டுதான் கட்டப்பட்டுள்ளது. சாதி வெறியர்களின் கொடூரத்தால் தர்மபுரி இளவரசன் கொலையுண்டபோது இவர் என்ன கூறினார். `ஒரு கண்ணை துடைத்தால் இன்னொரு கண்ணில் காயம் படும்‘ என்றார். அடிப்பவனையும் அடிப்பட்டு இறப்பவனையும் ஒரே மாதிரி பார்ப்பது மட்டுமல்ல, ஆதிக்கவாதிகளின் பக்கம் நிற்பதுதான் இவரது `புரட்சிகர நோக்கம்‘ போலும்.

சீமான் மற்றும் அவரது தம்பிமார்களின் எதிரிகள் யார் தெரியுமா? தமிழ்நாட்டில் செண்டை மேளம் வாசிப்பவர்கள்தான். அந்த கலை தமிழர்களுக்கு எதிரானதாம். எனவே செண்டை மேளம் வாசிப்பவர்களை அடித்து விரட்ட வேண்டும் என்று இவர் கர்ஜிக்க அவரது தம்பிகள் அதேபோல செய்தார்கள்.

தமிழர் இசையான நாதஸ்வரத்தை இவர்கள் எத்தனை மேடையில் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று தெரியவில்லை. வந்தேறி வடுகர்கள் என்று தெலுங்கு பேசும் மக்களுக்கு எதிராக வெறியை தூண்டிவிடுகிறது சீமானின் இயக்கம். இவருடன் தொலைபேசியில் பேசிய தேனி வாலிபர் ஒருவரை இவர் தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்க்க அவரது கட்சியினர் அந்த இளைஞரை அடித்து துவைத்தார்கள்.

தெலுங்கு பேசும் துப்புரவுப் பணியாளர்கள் கூட இவர்களுக்கு எதிரிகள். ஆனால் வைகுண்டராஜன்கள் இவர்களுக்கு புரவலர்கள், அவர்களது துணையோடுதான் தமிழ் தேசியக் கொடியை பறக்கவிடப் போகிறார்களாம். திருமலைநாயக்கர் மஹாலை இடிக்கவேண்டும் என்கிறார்கள் இவர்கள். இப்படியே போனால் தமிழ்நாட்டில் ஏதாவது மிஞ்சுமா?

ஆனால் ராஜராஜ சோழன் போன்றவர்கள் தமிழ் தேசிய முன்னோடிகளாம். சோழர் ஆட்சிக்காலத்தில்தான் தமிழ் உழவர்கள் கொடூரமாக வதைக்கப்பட்டார்கள். மறுபுறத்தில் பிராமணர்களுக்கு ஏராளமான கிராமங்கள் தானமாக வழங்கப்பட்டன, தேவதாசி முறை நியாயப்படுத்தப்பட்டது என்பதெல்லாம் இவர்களுக்கு வேண்டுமானால் பெருமிதமாக இருக்கலாம்.

கண்ணை மூடிக் கொண்டு தமிழ் தேசியம் பேசினால் அது கடைசியில் மன்னர் ஆட்சிமுறையை நியாயப்படுத்துவதில் தான் போய் முடியும். மும்பையில் வடமாநிலத்தவர்கள் ஆட்டோ ஓட்டினால் அவர்களது ஆட்டோவை எரிக்க வேண்டும் என்கிறது சிவசேனையின் நீட்சியான மகாராஷ்டிர நவநிர்மாண் கட்சி.

அதே சாயல்தான் சீமான்களின் பேச்சுகளிலும் வெளிப்படுகிறது. தமிழுக்கும், தமிழர்களுக்கும் பொதுவுடமை இயக்கம் செய்துள்ள சேவைகள் அளப்பறியது. விடுதலை பெறும் இந்தியாவின் மாநிலங்கள் மொழிவழிப்பட்டவையாகவே அமைய வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.

இந்தப் போராட்டத்தின் வெற்றி காரணமாகவே தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் அமைந்தன என்பதை `நாம் தமிழர்’ இயக்கம் நடத்துபவர்கள் அறிந்திருக்கமாட்டார்கள். சென்னை மாநகரம் தமிழகத்தோடுதான் இணைந்திருக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் மாகாண கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்ல, ஆந்திர மாநிலக்குழுவும் ஆதரித்தது என்பது கடந்தகால வரலாறு.

இராஜாஜி முன்வைத்த குதர்க்கமான தட்சண பிரதேச கோரிக்கையை எதிர்த்து மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும். தமிழக எல்லையோரத்தில் உள்ள பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க வேண்டும், சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து சர்வ கட்சி கூட்டணி அமைக்கப்பட்டது. இதில் கம்யூனிஸ்ட் கட்சியும் இடம்பெற்றிருந்தது.

இந்த கோரிக்கைகளுக்காக சென்னையில் நடந்த பேரணிக்கு தலைமையேற்ற ஜீவா, எம்.ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டனர். மண்டை பிளந்து ரத்தம் கொட்டியது. தமிழக உரிமைக்காக ரத்தம் சிந்தியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். வெறும் வறட்டுக் கூச்சல் போடுபவர்கள் அல்ல.

இதேபோன்று குமரி மாவட்டத்தை தாய் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்ற போராடி சிறை சென்றவர்கள் பொதுவுடமை இயக்கத் தலைவர்களான ஜி.எஸ்.மணி, டி.மணி, எம்.எம். அலி போன்ற தோழர்கள். சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என உண்ணாவிரதம் இருந்த தியாகி சங்கரலிங்கனாருக்கு பாதுகாப்பு அளித்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். இதனால் தான் அவர் தன்னுடைய உடலை கம்யூனிஸ்ட்டுகளிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்று கூறிவிட்டு இறந்தார்.

அதன்படி அவரது உடலைப் பெற்று இறுதி நிகழ்ச்சி நடத்தியவர்கள் கே.பி.ஜானகியம்மாள், கே.டி.கே.தங்கமணி உள்ளிட்ட தலைவர்கள். காங்கிரஸ் கட்சி இந்தி மொழிக்காகவும், திமுக ஆங்கில மொழிக்காகவும் கச்சை கட்டி நின்றபோது அன்னைத் தமிழே அனைத்துத் துறைகளிலும் தலைமை தாங்க வேண்டும் என்று சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் முழங்கியவர்கள் எம்.ஆர்.வெங்கட்ராமன், ஏ.பாலசுப்பிரமணியம், என்.சங்கரய்யா போன்ற பொதுவுடமை இயக்க தலைவர்கள்.

பட்ஜெட் குறித்து தமிழக சட்டப்பேரவையில் தமிழில் ஒலித்த முதல் குரல் மார்க்சிய இயக்கத்தின் பிதாமகர் பி.ராமமூர்த்திக்கு சொந்தமானது. செம்மொழி ஆண்டு அறிவிக்க வேண்டும் என்று மக்களவையில் முழங்கிய குரல் பி.மோகன் என்ற கம்யூனிஸ்ட்டுக்கு சொந்தமானது. தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று தலைநகர் தில்லிக்குச் சென்று முழங்கியவர்கள் தமுஎகசவினர். அவர்களுக்கு தலைமைதாங்கிச் சென்றவர் அருணன்.

அப்போதெல்லாம் சீமான் எங்கே இருந்தார் என்பதெல்லாம் அவருக்கே வெளிச்சம். திருச்சி பெல் ஆலை, சேலம் உருக்காலை, நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் மற்றும் மின் உற்பத்தி நிலையம் போன்ற பல்வேறு திட்டங்கள் கம்யூனிஸ்ட்டுகளின் அயராத பணியினால் தமிழகத்திற்கு கிடைத்தவை.

பரம்பிக்குளம், ஆழியாறு திட்டம் நிறைவேறுவதற்கு காரணம் கம்யூனிஸ்ட்டுகள், கேரள முதல்வராக இருந்த இஎம்எஸ் அவர்களோடு பேசி, பரம்பிக்குளம், ஆழியாறு உபரி நீரை தமிழகத்திற்கு கிடைக்கச் செய்தவர் தோழர் பி.ராமமூர்த்தி. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

தமிழ்நாட்டிற்கும், தமிழகத்திற்கும் எதுவுமே செய்யாமல் `நாம் தமிழர்’ என்று பெயர் வைத்துக்கொண்டு ஒற்றுமையாக வாழும் மக்களிடம் பிரிவினையைத் தூண்டுகிற சில்லரைத்தனமான வேலைகளில் ஈடுபடுபவர்தான் சீமான்.

ஆனால், கம்யூனிஸ்ட்டுகள் யாரிடமும் கூலி வாங்கிக் கொண்டு கூவுபவர்கள் அல்ல. வரும் தேர்தலில் தன்னுடைய கட்சியை விட மக்கள் நலக் கூட்டணி அதிக வாக்குகள் பெற்றால் தம்முடைய கட்சியை கலைத்துவிடுவதாக சீமான் கூறியிருக்கிறார். இதை அவர் மறந்துவிடக்கூடாது.

ஏற்கெனவே ஒருமுறை தமிழ் ஈழம் கிடைப்பதற்கு முன்னால் திருமணம் செய்து கொள்ளமாட்டேன். அப்படி செய்தால் என்னை செருப்பால் அடிக்கலாம் என்று கூறியிருந்தார் சீமான் என்பது ஏனோ நினைவுக்கு வந்து தொலைகிறது.

- மதுரை சொக்கன்

வழிமூலம்-  தீக்கதிர்

சிறிலங்கா : போர்க்குற்றவாளிகளின் கூடாரம் –அவுஸ்ரேலிய ஊடகம்

$
0
0

sarath-jegathமேற்குலகின் அதிகாரத்துவ நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள், தமது சொந்த பூகோள-அரசியல் நலன்களை அடைந்து கொள்வதற்காகவே இலங்கைத் தீவு தொடர்பாக பொய்ப் பரப்புரை செய்கின்றன என்பது வெட்கம்கெட்ட செயலாகும்.

இவ்வாறு அவுஸ்ரேலியாவைத் தளமாகக் கொண்ட Red Flag ஊடகத்தில் TREVOR GRANT எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

இராணுவ மனோநிலையுடன் கூடிய மிகக்கொடிய ஆட்சி தற்போதும் சிறிலங்காவில் தொடர்வதாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளதானது, இந்தியா மற்றும் அமெரிக்காவின் மறைமுக உதவியுடன் ஆட்சிக்கு வந்த சிறிலங்காவின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் தொடர்பான மக்களின் நம்பிக்கையை தகர்க்கச் செய்துள்ளது.

முள்ளிவாய்க்கால் கரையோரத்தில் 70,000 வரையான அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட உள்நாட்டுப் போரானது ஏழு ஆண்டுகளுக்கு முன்னர்  முடிவிற்கு வந்தாலும் கூட, தமிழ் மக்கள் மீதான சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்பு யுத்தம் இன்னமும் முடிவிற்கு வரவில்லை.

நீதி மற்றும் நல்லிணக்கம் போன்றன நாட்டில் நிலைநாட்டப்படும் என சிறிசேன வாக்குறுதி வழங்கிய போதிலும், இராணுவம் என்பது சிறிலங்கா அரசாங்கத்திற்கு இன்னமும் மிக முக்கிய ஒன்றாகக் காணப்படுகிறது.

குறிப்பாக 2009ன் ஆரம்பத்தில் சிறிலங்காவின் தரை, கடல் மற்றும் வான் படையினர் ஒன்றாக இணைக்கப்பட்டு தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டும் எஞ்சியவர்கள் பாடசாலைகள், வைத்தியசாலைகள், கோயில்கள் மற்றும் திறந்த வெளிகளில் இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களை அடைந்த போது சிறிலங்கா இராணுவத்தினர் எவ்வளவு முக்கியமாக விளங்கினார்களோ அதேயளவு முக்கியத்துவத்தையே உள்நாட்டுப் போர் முடிவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும் தற்போதும் இவர்கள் பெற்றுக்கொள்கின்றனர் என்பதே உண்மை.

சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த மீறல்களில் ஈடுபட்ட மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் மற்றும் போர்க் கால இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர்  நாட்டின் முதன்மைப் பதவிகளில்அமர்த்தப்பட்டனர்.  உண்மையில் இவர்கள் இருவரும் சிறிலங்காவில் நீதி நிலைநாட்டப்பட்டிருந்தால் தற்போது ஹேக் நீதிமன்றின் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்கள்.

மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் இராணுவப் படைகளின் இரண்டாவது நிலைத் தளபதியாக நியமிக்கப்பட்டதுடன், பீல்ட் மார்சல் நிலைக்குத் தரமுயர்த்தப்பட்ட சரத் பொன்சேகா கடந்த மாதம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுப் பின்னர் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தீவிர யுத்த மீறல்களில் ஈடுபட்ட சிறிலங்கா  இராணுவத்தின் முதனிலைத் தளபதிகளாகச் செயற்பட்ட டயஸ் மற்றும் பொன்சேகா ஆகிய இருவரும் ‘போர்த் தவிர்ப்பு வலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த 300,000 தமிழ்ப் பொதுமக்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களாவர்.

சிறிலங்கா இராணுவத்தின் 57வது பிரிவின் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்ட டயஸ், போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் ஜேர்மனிக்கான சிறிலங்காத் தூதராக நியமிக்கப்பட்டார். இவர் மீதான யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுட்டிக்காட்டிய அனைத்துலக சமூகமானது இவர் மீது போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து இவர் இவரது இராஜதந்திரப் பதவியை இழக்க வேண்டியேற்பட்டது.

இதுமட்டுமல்லாது, இவர் மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் காரணமாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்கள் தமது நாடுகளுக்கான நுழைவிசைவை வழங்க மறுத்தன.  டயஸ் மீது அனைத்துலக சமூகத்தால் யுத்தக் குற்றம் சுமத்தப்பட்ட போதிலும், தீவிர சிங்களவர்கள் மத்தியில் யுத்தக் கதாநாயகனாக இவர் நோக்கப்படுகிறார்.

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மற்றும் இனவாத சிங்களவர்கள் மத்தியில் டயஸ் ஒரு கதாநாயகனாகத் திகழும் அதேவேளையில், போருக்குப் பின்னான காலப்பகுதியில் பொன்சேகா பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

குறிப்பாக இவர் 2010ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட்டார். இதனால் இவரது இராணுவ நிலை, பதக்கங்கள், விருதுகள் போன்றன முன்னாள் அதிபர் ராஜபக்சவின் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டதுடன் இவர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் சிறைவாசம் அனுபவித்தார்.

யுத்தத்தின் இறுதியில் சரணடைந்த புலி உறுப்பினர்களைக் கொலை செய்யுமாறு பாதுகாப்புச் செயலரும் அதிபரின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டிருந்ததாக சரத் பொன்சேகா நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். இதற்காக இவர் மேலும் மூன்று ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. எனினும், சரத் பொன்சேகா அழுத்தத்தின் காரணமாக இக்கூற்றைப் பின்வாங்கியதால் தனது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

தற்போது சரத் பொன்சேகா நாடாளுமன்றில் அங்கம் வகிப்பதுடன், பிராந்திய அபிவிருத்திக்கான அமைச்சராகவும் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். எனினும் இவர் தனது கைகளில் 70,000 வரையான அப்பாவித் தமிழ் மக்களின் இரத்தக்கறையைக் கொண்டுள்ளார் என்பதை அனைத்துலக ஊடகங்களில் ஒருபோதும் கூறமுன்வரவில்லை.

இந்த விடயம் சிறிலங்காவின் புதிய அதிபருக்கும் பொருந்தும். ஏனெனில் இவர் தனது தேர்தல் பரப்புரையின் போது போரின் இறுதிக்கட்டத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சராகச் செயற்பட்டதாக தற்புகழ்ச்சியுடன் தெரிவித்தார். அத்துடன் ராஜபக்சாக்கள், பொன்சேகா, டயஸ் மற்றும் சிறிலங்கா அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் போன்று சிறிசேனவும் போர்க் காலத்தில் கட்டளைகளை வழங்கியதன் மூலம் போர்க் குற்றங்களில் ஈடுபட்டார் என்பதே உண்மை.

இந்நிலையில் அனைத்துலக நீதிபதிகள் அடங்கிய போர்க் குற்ற விசாரணைக் குழுவை அமைப்பதற்கு தடையாக சிறிசேன உள்ளார் என்பது ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல. சில மாதங்களின் முன்னர் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வின் போது அனைத்துலக நீதிபதிகளை போர்க் குற்ற விசாரணைக்கு அனுமதிப்பதாக சிறிசேன தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது இவர் தன்னால் வழங்கப்பட்ட வாக்குறுதியை நிராகரிக்கிறார் என்பதிலிருந்து இவரது நிலைப்பாடு என்ன என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

சிறிலங்காவின் அதிபரின் பெயரில் மாற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர, வேறெதிலும் மாற்றங்கள் ஏற்படவில்லை என்பதே உண்மை. சிறிசேன தற்போது தான் ஓடிஒளிந்து கொள்வதற்கான துளை ஒன்றைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்.

இதைவிட, மேற்குலகின் அதிகாரத்துவ நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் நடுத்தர அதிகாரங்களைக் கொண்ட அவுஸ்திரேலியா போன்றன சிறிலங்காவில் சிறந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அனைத்துலக சமூகத்திற்கு பொய்யுரைத்து வருகின்றன. இந்த நாடுகள் தமது சொந்த பூகோள-அரசியல் நலன்களை அடைந்து கொள்வதற்காகவே இலங்கைத் தீவு தொடர்பாக பொய்ப் பரப்புரை செய்கின்றன என்பது வெட்கம்கெட்ட செயலாகும்.

அமெரிக்கா போன்ற நாடுகள் சிறிலங்கா மற்றும் அதன் பிராந்தியம் மீதான சீனாவின் செல்வாக்கைக் குறைப்பதற்காகவும் அவுஸ்திரேலியாவானது தனது கடற்பரப்பிற்குள் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நுழைவதைத் தடுப்பதற்காகவுமே சிறிலங்கா தொடர்பாக பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

போர்க் குற்றவாளிகளைத் தாம் பாதுகாக்கிறோம் என்பதை இந்த நாடுகள் கவனத்திற் கொள்ளவில்லை. 70 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இனப்படுகொலைக்கு அனைத்துலக சமூகமும் தனது ஆதரவைத் தொடர்ந்தும் வழங்கி வருகிறது என்பதற்கு இது பிறிதொரு எடுத்துக்காட்டாகும்.

ஆறுமுனைப் போட்டி: யாருக்கு இலாபம்? –ஆர்.மணி

$
0
0

tn-party-leadersஇப்போதுள்ள நிலையே நீடித்தால், வரும் மே 16 ம் தேதி சட்டமன்றத் தேர்தல் தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் முழுக்க, முழுக்க வித்தியாசமான தேர்தல்தான். காரணம், முதல் முறையாக தமிழ் நாடு ஆறுமுனைப் போட்டியை சந்திக்கப் போகிறது.

இன்றைய நிலையில் களத்தில் உள்ள கட்சிகள்: 1. அஇஅதிமுக 2. திமுக (காங்கிரஸ்+ இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) 3. மக்கள் நலக் கூட்டணி 4. தேமுதிக 5. நாம் தமிழர் 6. பாமக 7. பாஜக 8. தமாகா இவற்றில் தமாகா, பாமக இரண்டுமே ஏதோ ஒரு கட்சிக் கூட்டணியில் ஐக்கியமாக வாய்ப்புகள் அதிகம் என்பதால் ஆறுமுனைப் போட்டியாக கருத்தில் கொள்வோம்.

மற்றோர் முக்கியமான, இதுவரையில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் மாநிலம் பார்த்தறியாத விஷயம் ஆளும் கட்சிக்கு எதிராக பெரியளவில் மக்களிடம் எதிரப்பலைகள் இல்லாதது (2001 லும் இப்படி எதிர்ப்பலை இல்லாத சூழல் திமுகவுக்கு இருந்ததை மறப்பதற்கில்லை!).

வியாழக்கிழமை தேமுதிக மகளிர் அணி மாநாட்டில் பேசிய விஜயகாந்த் வரும் தேர்தலில் தான் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்து விட்டார். விஜயகாந்த் திமுக பக்கம் போகப் போகிறார், 59 சீட்டுக்கள் அவருக்கு ஒதுக்கப் பட்டுவிட்டதாக கடந்த வாரம் அவிழ்த்து விடப் பட்ட கட்டுக் கதைகளுக்கு எல்லாம் தன்னுடைய 12 நொடி பதிலில் அவர் பதிலளித்தார். ஆம். கேப்டன் தன்னுடைய முடிவை அறிவித்தது வெறும் 12 நொடிகளில் தான்.

நாட்டின் முன்னணி ஆங்கில தொலைக் காட்சியின் சென்னை செய்தியாளர் என்னிடம் இப்படிச் சொன்னார்: “தன்னுடைய முடிவை மிகவும் தெளிவாக, 12 நொடிகளில் கேப்டன் அறிவித்து விட்டார். வழக்கமாக தலைவர்களின் பேச்சுக்களை துல்லியமாக ‘கட்’ செய்து அவர்களது ‘பைட்’ எனப்படும் அந்த ரத்தினச் சுருக்கமான வார்த்தைகளை போடுவது எங்களுக்கு எல்லாம் பெரிய தலைவலிதான். ஆனால் வியாழக் கிழமை கேப்டன் எங்களுக்கு பெரிய வேலை எதுவும் வைக்கவில்லை”.

விஜயகாந்தின் பேச்சில் இதுவரையில் காணாத ஏதோ ஒரு விதமான உறுதி அல்லது தெளிவு என்று வைத்துக் கொள்ளுங்கள் இருந்தது… தேர்தல்களுக்கு இன்னமும் இரண்டு மாதங்கள் இருப்பதால் அவர் தன்னுடைய பதிலை சொல்லுவதற்கு மேலும் கால அவகாசம் எடுத்துக் கொள்ளுவாரென்றும் கூறப்பட்டது. அவரது வியாழக்கிழமை பேச்சில் ஒரு விதமான கோபப் பட்டவரின் காயமும், வருத்தமும் கூட தெரிந்ததுதான்.

‘நான் காசு வாங்கி விட்டேன் என்று கூறுகிறார்கள். இப்போது முடிவை அறிவித்து விட்டேன். இதற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்’ என்று கேட்டதுதான் முக்கியமானது.

கடந்த வாரம் விஜயகாந்த் 59 சீட்டுக்களுக்கு ஒப்புக் கொண்டு விட்டார் என்று பரப்ப பட்ட செய்திதான் அவரது திடீர் முடிவுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. பேச்சு வார்த்தைகள் முக்கிய கட்டத்தில் இருக்கும் போதே இந்த வதந்தியை யார், ஏன், எதற்காக பரப்பினார்கள் என்பது தெரியவில்லை.

திமுக தேமுதிக கூட்டணி ஏற்படுவதை பிடிக்காதவர்கள், அதுவும் திமுக வுக்கு உள்ளேயிருப்பவர்கள் தான் இதனை செய்திருக்கலாம் என்றே நம்பப்படுகிறது. இதனை ஏன் செய்தார்கள், இது ஆர்வக் கோளாறா அல்லது வேறு ஆழமான உள் நோக்கங்கள் கொண்டதா என்றும் தெரியவில்லை. மொத்தத்தில் திமுக கோட்டை விட்டது. முகத்தில் கரியைப் பூசிக் கொண்டு நின்று கொண்டிருக்கிறது.

விஜயகாந்தின் முடிவு திமுகவுக்கு பலத்த அடி என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். சராசரி திமுக தொண்டனுக்கு மட்டுமல்ல, அதன் தலைமைக்கும் கூட இது பெரியதோர் ஏமாற்றமே. காரணம் தெரிந்தோ, தெரியாமலோ தேமுதிக வந்தால் தாங்கள் நிச்சயம் வெற்றி பெற்று விடலாம் என்றே எண்ணிக் கொண்டிருந்தவர்கள் இன்று செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள்.

‘பழம் கனிந்து விட்டது. எப்போது பாலில் விழும் என்று தெரியாது’ என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியபோது கிட்டத்தட்ட கூட்டணி உறுதி என்ற எண்ணம்தான் எல்லோருக்குமே ஏற்பட்டது. மற்றவர்கள் என்ன வேண்டுமானால் பேசலாம். ஆனால் கருணாநிதியே சொல்கிறார் என்றால் அது நிச்சயம் உண்மையாகத்தான் இருக்கும் என்றுதான் பரவலாக நினைத்தனர். ஆனால் மூன்றே நாட்களில் நிலைமை தலை கீழாக மாறியது.

விஜயகாந்த் கூட்டணிக்கு வந்தாலும் திமுக வெற்றி பெற்று விடும் என்றெல்லாம் யாரும் உறுதியாக கூறி விட முடியாதுதான். காரணம் கடந்த சில வாரங்களாக விஜயகாந்தின் பச்சையான மாடு பிடி அரசியலும், செய்தியாளர்களை பொது வெளியில் அவர் காறி உமிழ்வதும், அதனை அவரது மனைவி சிலாகித்து, இதுதான் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் என்று நியாயப் படுத்துவதும், எத்தகைய விளைவுகளை தேமுதிக வின் வாக்கு வங்கியில் ஏற்படுத்தியிருக்கும் என்பதனை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் பிரச்சனை அதுவல்ல. விஜயகாந்த் எந்தளவுக்கு வேண்டுமானாலும் ஒரு எதிர்மறையான சக்தியாக இருந்து விட்டுப் போகட்டும். பொது வெளியில் அவரது நடத்தை எந்தளவுக்கு வேண்டுமானாலும் மக்கள் மன்றத்தில் அவருக்கு எதிர்மறையான உணர்வை ஏற்படுத்தட்டும். அது பற்றியெல்லாம் திமுக வுக்கு கவலையில்லை. திமுக வுக்கு தேவை தேமுதிக வின் வாக்கு வங்கி. அது ஐந்து சதவிகிதமோ அல்லது ஆறு சதவிகிதமோ, அதுமட்டும்தான் தேவை. மனதளவில் திமுக வினரிடம் ஏற்பட்ட இந்த உணர்வுதான் இன்று பலத்த சேதாரத்தைச் சந்தித்துள்ளது.

தேமுதிக வந்தால் நிச்சயம் வென்று விடலாம் என்றே கனவு கொண்டிருந்தவர்கள் இன்று கேப்டனின் முடிவு வேறு மாதிரியானதாக மாறி விட்டதால், கருணாநிதியின் பாஷையில் சொன்னால் ‘ஆப்பசைத்த அது வாக’, பரிதாப கோலத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

ஆறுமுனைப் போட்டியில் யாருக்கு லாபம் என்பதற்கு பதில் மிகவும் சுலபமானது. ஆளும் அஇஅதிமுக வுக்குத்தான் இதில் இலாபம். காரணம் எப்போதுமே அஇஅதிமுக வின் வாக்கு வங்கியானது திமுக வின் வாக்கு வங்கியை விட சற்றே அதிகமானது. 2014 ல் அஇஅதிமுக வின் வாக்கு வங்கி 44 சதவிகிதமாக இருந்தது. இன்று அது 36 முதல் 40 சதவிகிதம் என்று கூறப்படுகிறது. திமுக வின் வாக்கு வங்கி 28 முதல் 30 சதவிகிதமாகும். இது இரண்டும் சற்றே கூடக் குறைய இருந்தாலும், இருவருக்குமான வித்திசாயம் குறைந்தது ஆறு சதவிதிதம்.

மேலும் தேமுதிக இல்லாததால் திமுக வெற்றி பெறாது என்ற எண்ணம் பரவலாகவே ஏற்பட்டு விட்டதால் அதுவும் வெற்றி பெறும் கூட்டணிக்கே வாக்களிக்க விரும்பும் குறிப்பிட்ட சதவிகித்தினரின் வாக்குகளையும் இன்று திமுக வுக்கு கொண்டு வர வாய்ப்பில்லைதான். தேமுதிகவைப் பற்றி திமுகவினர் உள்ளும், புறமும் ஏற்படுத்திய பிம்பம் தான் இன்று அவர்களுக்கு எதிராகவே திரும்பி யிருக்கிறது.

மற்றொன்று, இந்த நிமிடம் வரையில் ஆளும் கட்சிக்கு எதிராக பெரியளவில் எதிர்ப்பலை இல்லாதது. இது 1996 மற்றும் ஓரளவுக்கு 2011 ஐ ஒப்பிட்டுப் பார்த்தால்தான் நன்கு விளங்கும். அந்தளவுக்கு கண்டிப்பாக இப்போது அரசுக்கு எதிரான எதிர்ப்பலை இல்லை. இரண்டு திராவிடக் கட்சிகளுமே கூட்டணிகள் மூலம்தான் ஆட்சியைப் கைப்பற்றியிருக்கிறார்கள். எம்ஜிஆரே 1977 ல் சிபிஐ மற்றும் சில கட்சிகளுடனும், 1980 இரண்டு கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் ஜனதா கட்சி, குமரி அனந்தனின் காகாதேகா வுடனும், 1984 ல் காங்கிரசுடனும் சேர்ந்தே ஆட்சியை க் கைப்பற்றினார்.

ஜெயலலிதா 1991, 2001 மற்றும் 2011 ல் கூட்டணிகளுடன் சேர்ந்துதான் ஆட்சியைப் பிடித்தார். கருணாநிதியாலும் கூட்டணிகள் துணையுடன்தான் இதனைச் சாதிக்க முடிந்தது, 1989ல் மட்டும் இரட்டை இலை சின்னம் இல்லாமல் அஇஅதிமுக இரண்டாக பிளவுப் பட்டுக் கிடந்த போது திமுக வென்றது. ஆனால் இரண்டே மாதங்களில் பிளவுண்டிருந்த அஇஅதிமுக மீண்டும் ஒன்றிணைந்து இரட்டை இலையை பெற்று விட்ட பின்னர் நடைபெற்ற மதுரை கிழக்கு மற்றும் மருங்காபுரி இடைத் தேர்தல்களில் திமுக தோற்றது.

ஆகவே கடந்த கால வரலாற்றை வைத்துப் பார்த்தால் பல முனைப் போட்டியில் யாருக்கு சாதகம் என்பது தெளிவாகவே தெரியும். திமுக கோட்டை விட்டு விட்டது. பாஜக என்ன செய்யப் போகிறதென்று தெரியவில்லை. கேப்டனை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ளுபவர்கள் கூட்டணிக்கு வரலாம் என்கிறார் விஜயகாந்த் மனைவி பிரேமலதா. ஆனால் இதற்கும் வாய்ப்பு குறைவு என்றுதான் படுகிறது. காரணம் வியாழக்கிழமை தனது உரையில் கேப்டன் நான்கு முறை தான் தனித்துப் போட்டியிடப் போவதாக கூறியதுடன், வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக ஏழு பேர் கொண்ட குழுவையும் சுதீஷ் தலைமையில் நியமித்து விட்டார்.

ஆகவே இதற்கு மேலும் இந்த முடிவில் மாற்றம் ஏற்படும் என்று தெரியவில்லை. ஒரு விதத்தில் எல்லோருமே தனியாக நிற்பதும் நல்லதுதான். காரணம் அவரவர் சக்தி நன்றாகவே வெளியில் தெரிந்து விடும். ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்களின் ஆர்வக் கோளாறும், ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களைப் பற்றித் தாங்களே கொண்டிருக்கும் அதீதமான சுய பிம்பங்களும், மதிப்பீடுகளும் மீண்டும் ஜெயலலிதாவை அரியணையில் அமர வைக்கலாம். அப்படி நிகழ்ந்தால் அதற்காக ஜெயலலிதா நிச்சயம் எதிர்கட்சிகளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்!

- ஆர்.மணி

வழிமூலம் – oneindia

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம்கொள் –பா. செயப்பிரகாசம்

$
0
0

tamil nadu“ஆதலினால் காதல் செய்வீா் உலகத்தீரே” என்றான் பாரதி.சொன்னவன் மஹாகவியா, மக்கள் கவிஞனா- யாராகவும் இருக்கட்டும், அவனையும் தீர்த்துக் கட்டுவோமென கையில் வீச்சரிவாள்களுடன், கத்தி கப்படாக்களுடன் அலைந்து கொண்டிருக்கிறார்கள் சாதி விசுவாசிகள்.

காதலால்  தனிமனிதனுக்கு- கூட்டுச் சமூதாயத்துக்கு கிட்டும் பலாபலன்களைக்  வரிசையிட்டிருப்பான் கவிதையில் பாரதி. காதலினால் மனத்தில் உறுதி உண்டாகும் என்பது  கவிஞன் வார்த்தைகளுக்குள் இறங்கிக் கிடக்கிறது.    காதலினால்   துளிஉறுதியும் உண்டாக   இடம்  தரக்கூடாது என்று கங்கணம் கட்டி, காதலுக்குப்   பாடைகட்டிக் கொல்லும் வழி போகின்றனர் ஊரினிலே காதலென்றால் உறுமும் ஒருகூட்டம்.

பூ மலர்ந்தால் பிஞ்சு கட்டும்: பிஞ்சு கட்டினால் காய் வரும்: காய் பழுத்தால் கனியாகும். காதல்பூ மலர்ந்து கனியாகிறபோது விதைகள்   உண்டாகின்றன. விதைகள் குடும்ப விருட்சமாய் விரிகின்றன. இந்தப் பெருமரத்தின் நிழல் சகல தடைகளையும் உடைத் தெறிந்து வரும் மாண்பாளா் அனைவரையும்   அனைத்துக் கொள்ளும்;  காதல்செய்வதால் உண்டாகும் இந்த ஆரோக்கியமான பெருமரச் சமுதாயத்தின் நிழலில்  தாமும் உரம்பெற்றுப் புதியன படைக்கப்   புறப்படுவார்கள்.

பூ இருந்தால் தானே  பெருமரம் உருவாகும், பெருமரம் இருந்தால்தானே உறுதிபெறுவார்கள்.   பூவிலேயே உதிர்த்து விடுதல் நல்லது. பூஉதிர்க்கச் செய்யும்    தொடக்கப் புள்ளியில் குறிவைக்கின்றன,    உயிர்உலுக்கிச்  சரிக்கின்றன சாதி ஆணவக் கொலைகள்.

கல்தோன்றி, மண் தோன்றாக் காலத்தே தோன்றியவன் தமிழன் – சரிதான்; யாதும் ஊரே, யாவரும் கேளிர்- தமிழன் மந்திரம் ; சாதி இரண்டோழிய வேறில்லை என்றவள் தமிழச்சி- எல்லாம் சரி! படோடோபமாய் மேடையில் எதை எதை  உதிர்க்கிறோமோ, அந்தப் பலூன்களை உடைத்து “இங்கே ஒரே ஒரு தமிழன் மட்டுமே உண்டு. சாதித் தமிழன் ” என்று   சாதியின் பெயரில் ஆணவக் கொலை  செய்கிறவனை எதில் சோ்ப்பீா்கள்?  வன்னியத் தமிழன், வணங்கா மறவர் தமிழன், நாடார் தமிழன்,செட்டியார் தமிழன், நாயுடு தமிழன், கவுண்டத் தமிழன், கோணார்த் தமிழன்,முதலியார் தமிழன் –எத்தனை தமிழர்கள் இங்கு உரிமை கொண்டாட.! இவர்கள் எல்லோருக்கும் ஒரேயொரு குறிக்கொள்- எல்லோரும் ஒன்றிணைவாயும், தனித்தனியாயும் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளை, வாழ்வியலை அங்கீகரிக்க மாட்டார்கள்  என்பதே.

தருமபுரி இளவரசன், ஓம்லூர் கோகுல்ராஜ் ,   உடுமலைப் பேட்டை சங்கர்    என்று கடந்த   இரண்டாண்டுகளில் தமிழ்நாட்டில் 81 ஆணவக் கொலைகள்; இல்லை, 105 என்கிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருட்டிணசாமி. உத்தரப் பிரதேசம், பீகாருக்கு அடுத்த நிலையில் தமிழகத்தில்தான் அதிகக் கொலைகள்.தேசியக் குற்ற ஆவணப் பதிவகம் தந்த விவரப் பட்டியல் அடிப்படையில், உச்சநீதிமன்றம் ஒவ்வொருமாநிலத்திலும் நடந்த கவுரவக் கொலைகள் பற்றி அறிக்கை கேட்டது.தமிழ்நாடு தவிர மற்ற அனைத்து மாநிலங்களும்  அறிக்கை அளித்தன.   “தமிழ்நாட்டில் கவுரவக் கொலைகளே நடக்கவில்லை;பின்னர் எப்படி அறிக்கை தருவது?” என்று சட்டமன்றத்திலேயே முழுப்பூசணிக்காய் முழுங்கினார் அ.தி. மு.க .அவைமுன்னவர், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

பட்டப்பகல் வெள்ளை வெயிலின் கீழே –  மக்கள் நடமாட்டமுள்ள பேருந்து நிலையத்தின் எதிரில் – ஐவர் கும்பலால் சங்கா் என்ற பொறியியல் பட்டதாரி இளைஞா் கொலை செய்யப்படுகிறார். அவர் ஒரு தலித்; கவுசல்யா இந்து  உயா் சாதிப் பெண்.   இருவரும் பொள்ளாச்சி பொறியியல் கல்லூரியில் கற்கையில் ஒருவர் மீது ஒருவர் விருப்பம் கொள்கிறார்கள்.  காதல் என்பது மனிதமனத்தில் பிறக்கும் ஒரு இயல்பூக்க உணா்வு.  பெண்ணும் ஆணும்     மனித உயிரி; சாதி, மதம், மொழி, இனம் என்று பாராமல், வயதுவந்ததும் அந்த உயிரிக்குள் இயல்பூக்க உணா்வு எழுகிறது.எழாமல்   கருகவைக்க  வேண்டும்;காதல் செய்வதும் திருமணம் செய்வதும்  சொந்த சாதிதாண்டி, வேறு   சாதிக்குள் நடந்ததால் இருவரையும் கொலை செய்வோமென பின் தொடர்கிறார்கள். ஏற்கனவே கவுசல்யாவின் பெற்றோரும் உறவினர்களும் சங்கரின் வீட்டுக்கே வந்து மூன்றுமுறை கொலைமிரட்டல் விட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் ஆண்டு தவறாமல் 900   கொலைகள் நடக்கின்றன.இதில் 65 விழுக்காடு சாதி ஆணவக் கொலைகள்.எவிடென்ஸ் கதிரின் கூற்றுப்படி, தமிழகத்தில் 2013- ஜூலை முதல் 81 ஆணவக் கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. கொல்லப்பட்டோரில்  80 சதவீதம் பேர் பெண்கள்:  20 சதவீதத்தினர்  தலித் இளைஞர்களாக இருக்கிறார்கள். தலித்துகளை ஒடுக்குவது  மட்டுமல்ல,  பெண்ணை அச்சுறுத்தி அடக்கி வைக்கும்  அபாய மணியை  சாதி அமைப்பினர் ஒலித்துக் காட்டுகிறார்கள்.

தெற்குச் சீமையில் குறிப்பிட்ட வட்டாரத்தில் ராணிமங்கம்மா காலத்துச் சாலை ஒன்றிருந்தது ; அந்த மனிதாய அரசி நட்டுவைத்த புளியமரங்கள் அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகர் வரை வரிசையாக நின்றன; மரங்கள்   காய்த்து, கனிந்து, புளி கொடுத்து  ஓய்ந்து விட்டாலும், நிழல் தந்துகொண்டிருந்தன;   ஒரு இரவில் எவரும் அறியாமல் மரத்தின் அடிகிளறி அமிலத்தை ஊற்றினார்கள் பாதகர்கள். பட்டுப்போன மரங்கள் மறுமாதம் ஏலத்துக்கு வந்தன.

சாதி வெறி உள்ளில் கொதிக்க, காதல்வேரில் அமிலம் ஊற்றி பட்டுப்போகச் செய்ய முயலுவார்கள். காதலைத் துண்டிக்கும்  முயற்சி தோற்றுப் போய்விடும் வேளையில், உயிரோடு கருக்குவார்கள். தன்னை விட்டு வீட்டுப் பெண்,சாதிப் பெண் மீறிப் போய்விடக்கூடாது என்கிற ஆணாதிக்கத்தின் மொழி இது. சாதிச் சங்கத்தை நடத்துகிறவா்களெல்லாம் யார்? ஆண்கள் தாம்.

“புறச் சமூகத்திலிருந்து வரும் ஆதிக்கம், தனக்குள்ளேயிருக்கும் ஆதிக்கம், தன்னில் நிலவும் அறியாமை – ஆகிய மூன்று மலைகளை ஒரு ஆண் முதுகில் சுமக்கிறான்;   ஒரு பெண் நான்காவதாய் ஒரு மலையைச் சுமக்கிறாள். அது ஆண் ஆதிக்கம்” என்கிற ஒரு வாசகம் உண்டு.

மார்ச் 8 மகளிர் நாள். கொண்டாட்டங்களால் சடங்கு செவ்வனே நிறைவேறிற்று; தலைவிகள் தமக்குத் தாமே மருடம் சூட்டிக் கொள்ளல், புகழ் மாலைகள் என முந்தைய ஆண்டுகளினும் கூடுதலாய் விழா இரைச்சல் அமோகமாய் விளைந்தது. அதுபாட்டுக்கு அது நடக்கட்டும்;  இதுபாட்டுக்கு இது நடக்கும் என்று மார்ச் 13- ஆம் நாள் உடுமலைப் பேட்டை பேருந்து நிலையத்தில் “  கொலையாளா்கள்” வெறிகொண்டு ஆடினார்கள்.   தலித் இளைஞன் சங்கர் இறந்து போக, வெட்டுப்பட்ட   உயா்சாதி இந்துப் பெண் கவுசல்யா உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.

தம் சாதிப் பெண்டிர் கலாசாலைகளுக்குப் போவதினால் அல்லவா காதல் விருப்பம் கொள்கிறார்கள். பணியிடங்கள், அலுவலகம் என்னும் உலகத் தொடா்புகளால் தானே இந்த விருப்பம் உருவாகிறது. கல்வியும் கூடாது, வேலைக்கும் வெளிப்படக் கூடாது என்று “வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும்  விந்தை மனிதா்கள் ” உருவாகியிருக்கிறார்கள். கலப்பு மணம் கூடவே கூடாது என்று எண்ணுகிற சிந்திப்பு   சாதிய அமைப்புக்களில் மட்டுமல்ல, ஒவ்வொரு வீட்டுக்குள்ளும்,  ஒவ்வொரு ஆணுக்குள்ளும்  வாழுகிறது என்பதை உடுமலைப்பேட்டை கொலையில்   சரணடைந்துள்ள பெண்ணின் தந்தை காட்டியிருக்கிறார்.

அச்சம் தவிர்  – பாரதி மனித குலத்துக்கு வழங்கிய   ஆத்திசூடி;

“அச்சம் கொள்” – குறிப்பாய் தம்மகளிர் கூட்டத்துக்கு, தலித்குலத்துக்கு சாதி அமைப்புகள் தரும் புதிய  “  ஆத்திசூடி” .

” காதல் கொள்- சொந்த சாதிக்குள்;

கட்டுப்படு- உன்சாதிக்கு;

காதல், கலப்புமணம் என்ற  கற்பனைகளுக்குள் நீந்தாதே.

அழிக்கப்படுவாய்”- என்று கொலை மூலம், கவுசல்யாவை மட்டுமல்ல, சொந்த சாதிப் பெண்கள் அனவரையும்  அச்சுறுத்தி   வைக்கிறார்கள்.   கொல்லப்படுவது சொந்த ரத்தமாக இருந்தாலும் கவலையில்லை.

சாதிஆணவக் கொலைகள் வேறுஎந்த சாதியினரையும் நோக்கி நடத்தப் படுவதில்லை; தாழ்த்தப்பட்ட மக்களை நோக்கி மட்டுமே நடத்தப்படுவது ஏன்?

இருக்கிற நிலைமைகளை அனுமதிக்க மறுப்பவர்கள் கீழே. நிலைமைகளைத் துளியும் மாற்ற விரும்பாதவர்கள் மேலே.

நேற்றிருந்த ஹரிஜனங்கள், தாழ்த்தப்பட்ட அட்டவணை சாதியினர் இன்றில்லை; இவர்கள் இப்போது தலித்துகள் : தாழ்த்தப்பட்டோராய் இருந்து தலித்துகளாய் எழுச்சி கொண்டிருக்கும் இந்த உயரம், ஆதிக்க மனம்கொண்ட சாதியினரைத்  தூங்கவிடாமல் செய்கிறது. சாதியம் கடந்த மனித உறவு வேண்டாம்;  சாதிய உறவு மட்டுமே வேண்டுமென எண்ணுகிற  இவர்கள் முதலில் கைவைப்பது தம்மினப் பெண்டிரைத்தான். உரிமையற்ற பிராணிகளாக பெண்களை வைத்திருப்பது என்பது பா.ம.க- வின் ராமதாஸ் தொடங்கிவைத்தது. உடுமலைப்பேடையில் நடத்திய சாதி ஆணவகொலை பற்றிக் கருத்துக் கேட்டபோது, செய்தியாளர்களை ஒருபார்வை பார்த்துவிட்டு எழுந்துபோன ராமதாஸின் முகத்தையும்,  மருமகனைக் கொன்றுவிட்டு, மகளைக் கொல்லும் கொலைமுயற்சியில்   கைதாகி காவலிலிருக்கும் தந்தை சின்னசாமியின் முகதையும் ஒப்பிட்டுப் பாருங்கள். கொலைசெய்த எந்தச் சலனமும் தென்படாத அந்த முகம்- “ எனக்கு சாமியை விட சாதி தான் பெரிசு” என்று சொல்லும் அந்தமுகம்- இந்த முகங்களின் கூட்டம் தான் சாதி அரசியல் கட்சிகள். ஒவ்வொரு சாதி அமைப்பும் இதில் உச்சத்திற்குப் போயுள்ளன.   இந்தச் சேதியின் சாரத்தை மண்டலம் மண்டலமாய்ப் பிரித்து தத்தம் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் மற்ற சாதித் தலைமைகளுக்கும்  கடத்துகிறார்கள்.

சாதிஆணவக் கொலைகளுக்காய் நீளும் கரங்கள்தாம் – கூட்டணி அமைக்கும் கரங்களாகவும் நீளுகின்றன என்ற உண்மையை மறைக்க வேண்டியதில்லை.தி.மு.க, அ.தி.மு.க ஆகிய பிரதான கட்சிகள் ஆணவக்கொலைகளின் ஆதார சக்திகளான   சாதிக்கட்சிகளை, குஞ்சுகளை தமது செட்டைகளுக்குள் அரவணைக்கும் தாய்க்கோழிகள் போல் அடக்கிக் காக்க முயல்கின்றன.  சங்கரின், கவுசல்யாவின் பச்சை ரத்தம் உடுமைலைபேட்டை நகரவீதியில் காயாமலிருக்கிறபோதே, கொங்கு வேளாளர் கட்சித் தலைவன் தனியரசோடு  அ.தி.மு.க. கூட்டணி ஒப்பந்தம் போடுகிறது. மற்றொரு சாதிக்கட்சியான ’பார்வர்டு பிளாக்குடன்’ கூட்டு வைக்கிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்ற முத்திரையுடன் ,வன்னியர் சங்கத்தின் பிரிவான வேல்முருகனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தலித்துகளுக்கு எதிரான வன்மத்தை மட்டுமே கொள்கையாகக் கொண்ட பா.ம.க.வின் கூட்டுக்காக பா.ஜ.க. பேச்சு வார்த்தை செய்து கொண்டு காத்திருக்கிறது.

தி.மு.க.   சாதி ஆணவக் கொலையை   இன்னும் தொண்டையை விரித்துக் கண்டிக்கவில்லை. 1967- ல் ஆட்சிபீடமேறியதும், ஏற்கனவே கைவசம் வைத்திருந்த ”பெரியார் பாதை” யை தி.மு.க. நிரந்தரமாக மூடிவிட்டது.தேர்தல் வந்தால் அப்போது தி.மு.க.வின் சாதிமுகம் அப்பட்டமாகக் கழன்று தொங்குகிறது.தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஒடுக்குமுறையாக இந்தப் படுகொலையை அவர்கள் காணவில்லை; ”தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ,ஒழுங்கு எவ்வளவு மோசமாகிவிட்டது என்பதின் உச்சகட்ட கொடூரம்தான் உடுமலை சம்பவம்” என்று சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகக் காணுகிறார் தி.மு.க. பொருளாளர்  மு.க.ஸ்டாலின். (16-03-2016 )     ” அனைத்து தரப்பு மக்களிடமும் நல்லிணக்கம் நிலவ தி.மு.க. பாடுபடுகிறது” என சாதிவெறிக் கொலையாளர்களையும், பலியாகும் தாழ்த்தப் பட்ட இனத்து மக்களையும் சமமாகப் பார்க்கும் பார்வையின் உள்ளார்த்தம் புரிகிறது.   ”இன்னும்  தயக்கம் ஏன்?எமது பக்கம் வாருங்கள்” என்று சாதிக் கட்சிகளுக்கு விடுக்கும் அழைப்புத்தான் இது.

சாதி ஒழிப்பு இல்லாமல் சாதிய விடுதலை சாத்தியமில்லை.குறிப்பாக தாழ்த்தப்பட்டமக்கள் என்ற இழிவு இல்லாமல் செய்கிறபோது, சாதிப்பிரிவுகள் தன்னாலே தூர்ந்து போகும்.கடைசிக்கும் கடைசியாய்,கீழினுக்கும் கீழாய் இருக்கும் தாழ்த்தபட்டவன்   இல்லாமல் ஆகிறபோது ,மேலிருக்கும் அடையாளங்களும் அற்றுப்போகும்.ஆனால் சாதி வேற்றுமை பாராட்டக்கூடாது என்று உபதேசிக்கும் கட்சித்தலைமைகளும் சாதியை ஒழிப்போம் என்று பேசுவதில்லை;  தேர்தல்வெற்றி சாதிக்கட்சிகளின், குழுக்களின் வாக்குவங்கியில்   தங்கியுள்ளது என்பது காரணம். “நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்” என்று கண்ணன் உபதேசம் செய்த கீதையை எவராவது தூக்கி எறியத் தயாரா?

கேரளாவைச் சேர்ந்த ஒரு பொதுவுடமைக் கட்சித்தலைவர் கியூபா சென்றார். கியூபாவின் புரட்சியாளர்களின்  தலைவரைச்   சந்தித்த  பின்னர் “இந்தியாவின்பெருமை” என்று கூறி கியூபா புரட்சியாளனுக்கு ஒரு நூல் வழங்கினார்.

நூல் – கீதோபதேசம்

பெற்றுக்கொண்டவர் – ஃபிடல் கேஸ்ட்ரோ.

வழங்கியவர் –   இந்திய மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் கேரள முதலமைச்சராயிருந்தவருமான ஈ.கே.நயினார்.

கீதோபதேசக் கடவுள் கண்ணன் சொல்கிறான்   “நானே வர்ணங்களைப் படைத்தேன்.”

கீதையின் வர்ணாசிரம போதனை, முற்போக்காளர்  என்று சொல்லப்படுவோரும் மயங்குகிற அளவு கருவிலேயே நஞ்சுக் கொடி சுற்றி இருக்கிறது. நஞ்சுக்கொடி சுற்றிய கரு   மூச்சுத்திணறுவது போல், மக்கள் சமுதாயத்தை மூச்சுத் திணற அடிக்கிற காட்சிகள் இந்த தத்துவ போதனையினால் தொடருகின்றன.

சாதி மறுப்புத் திருமணங்கள் தொடர்பில் டில்லியிலிருக்கிற உச்ச நீதி மன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது ;

“சாதி முறை என்பது நாட்டின் மீதான ஒரு சாபக் கேடாகும். சாதிமுறையை எவ்வளவு சீக்கிரம் அழிக்கிறோமோ, அவ்வளவு சீக்கிரம் நல்லது. உண்மையிலேயே, நாம் எல்லோரும் ஒன்றுபட்டு நாட்டின் முன்னுள்ள எல்லா சவால்களையும் சந்திக்க வேண்டிய வேளையில், சாதி நாட்டைக் கூறு போட்டுக் கொண்டிருக்கிறது.   சாதிக்கலப்புத் திருமணம் என்பது சாதிமுறையை ஒழிக்க வழிவகுக்கும் என்பதால், அவை நாட்டு நலனுக்கானவை.   சாதிக் கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் ஆண்களையும் பெண்களையும் வன்முறைகளால் பயமுறுத்தவதாகவும், வன்முறைகள் அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுவதுமான அமைதி குலைக்கும் செய்திகள் நாட்டின் பலபகுதிகளிலிருந்து எங்களுக்கு வந்தவண்ணம் உள்ளன…

“தாங்களாகவே விரும்பி சாதிக் கலப்பு மற்றும் மதக் கலப்புத் திருமணம் செய்துகொள்வோரை கொல்லும் கெளரவக்   கொலைகளில் கெளரவம் ஏதுமில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமாயின் அச்செயல்கள் கடும்தண்டனைக்குரிய கொடிய பிரபுத்துவமனங் கொண்டவர்களால் நிகழ்த்தப்படும் காட்டுமிராண்டித் தனமான, வெட்கக் கேடான கொலைகள் தானே தவிர, வேறொன்றுமில்லை ”

உச்சநீதிமன்றம் காட்டிய வெளிச்சத்தின் கீழ் தருமபுரி இளவரசன் – திவ்யா, ஓமலூர் கோகுல்ராஜ், குமராலிங்கபுரம் சங்கர்- கவுசல்யா காதலைப் புதைத்த கொலையாளிகளை அடையாளம் காணமுடியும்.தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியும் தருமபுரியாக உருவெடுத்து  இளவரசன்கள்- திவ்யாக்களின் கதைகள் தொடருகின்றன.

சாதிமுறையை எவ்வளவு சீக்கிரம் அழிக்கிறோமா அவ்வளவு சீக்கிரம் நல்லது என்கிறார்கள் நீதிபதிகள். சாதிமுறையை அழிக்காமல் எவ்வளவு காலம் பத்திரப்படுத்த முடியுமோ, அவ்வளவு காலம் நமக்கு நல்லது என   சாதிக்கொரு கட்சிகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன.உச்சநீதிமன்றம் எங்கோ இருக்கிறது; சாதி உள்ளுக்குள், இதயதினுள்ளேயே இருக்கிறது. அருகில் அரிவாள்   இருக்கிறது.

நிரந்தரமான தீர்வு என்பது இறுதிஎல்லை; சாதி ஒழிப்பு என்பதை அனைத்துக் கட்சிகளும் அரசியல் கோட்பாடாக, செயல்பாடாகக் கொள்ள வேண்டும்,இது தொடருவதினூடாக சாதி ஆணவக்கொலைகளைத் தடை செய்யச் சட்டம் இயற்றவேண்டும்   – தற்காலிகத் தீர்வாக சட்டமன்றத் தேர்தல் முன்வந்து நிற்கிறது.சமூக ஆர்வலர்கள்,சமூகச் சிந்தனையாளர்கள் மக்களுடன் கூட்டமைத்து ,சாதிய அடையாளம் தாங்கிய அரசியல்கட்சிகளை நிராகரிப்பதும்  ஒரு தீர்வு.

- பா. செயப்பிரகாசம்

இனிமேலும் பொறுத்துக் கொள்வாரா இந்தியத் தூதுவர்? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

$
0
0

y.k.sinhaமகிந்தவைச் சூழ தற்போது இந்திய எதிர்ப்பாளர்கள் உள்ள நிலையில், எதிர்காலத்தில் இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதில் மகிந்த பெரும் நெருக்கடியை எதிர்நோக்குவார்.

இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் உபுல் ஜோசப் பெர்னான்டோ. இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் எவ்வாறு இந்தியாவுடன் தொடர்பைப் பேணியிருந்தது என்பது தொடர்பாகவும் இது தொடர்பில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் போன்ற முன்னாள் அமைச்சர்களின் கருத்துக்கள் மற்றும் கோட்பாடுகள் எவ்வளவு தூரம் முரண்பாடானவையாக உள்ளன என்பது தொடர்பாகவும் கொழும்பு மற்றும் புதுடெல்லிக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை இந்த அமைச்சர்கள் எவ்வளவு தூரம் தமது சுயநல அரசியலுக்காகப் பயன்படுத்தினர் என்பது தொடர்பாகவும் இங்கு ஆராயப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பைப் பேணிய தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு எதிராக இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் புதுடில்லிக்கான சிறிலங்கா உயர் ஆணையாளராகச் செயற்பட்ட பிரசாத் காரியவசம் அழுத்தம் கொடுத்திருந்தார். காரியவசத்தின் இந்த அழுத்தமானது இந்திய மத்திய அரசாங்கத்தைக் குழப்பத்திற்கு உள்ளாக்கியது. காரியவசத்தால் விடுக்கப்பட்ட இந்த அறிக்கைக்கு முரணாக, காரியவசத்தால் விடுக்கப்பட்ட இந்த அறிக்கை கொழும்பு அரசாங்கத்தின் நலன்களை அடிப்படையாகக் கொண்டது என ராஜபக்ச அரசாங்கம் பதிலளித்தது.

இந்தியாவுடனான பொருளாதார தொழினுட்ப கூட்டு உடன்படிக்கையை எதிர்த்து சிறிலங்காவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு எதிராக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஆணையாளர் வை.கே.சின்ஹா மிகத் தீவிரமான அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார். இந்தியாவுடனான பரந்த பொருளாதார கூட்டு உடன்படிக்கையை ஆதரித்த அதே அரசியல்வாதிகள் தற்போது பொருளாதார தொழினுட்ப கூட்டு உடன்படிக்கையை எதிர்க்கின்றமை தன்னை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளதாக இந்தியாவின் உயர் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் ஆணையாளர்களில் ஒருவரான ஜே.என்.டிக்சித் போன்றே சின்ஹாவும் தற்போது சர்ச்சைக்குரிய செயற்பாடுகளில் ஈடுபட முயற்சிப்பதாக, பரந்த பொருளாதார கூட்டு உடன்படிக்கையை முன்னர் ஆதரவளித்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பதிலளித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிற்கும் இடையில் 1987 யூலையில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னரும் அதற்கு முன்னரும் டிக்சித் சர்ச்சைக்குரிய பங்கு வகித்திருந்தார்.

கொழும்பில் உயர் ஆணையாளர்களாகப் பணியாற்றிய சிலர் பின்னர் இந்தியாவின் வெளியுறவுச் செயலர்களாகக் கடமையாற்றியுள்ளனர். வி.வை.குண்டேவியா, ஜே.என்.டிக்சித், சிவ்சங்கர் மேனன் மற்றும் நிருபமா ராவ் ஆகியோரே கொழும்பில் உயர் ஆணையாளர்களாகவும் பின்னர் இந்திய வெளியுறவுச் செயலர்களாகவும் பணியாற்றியவர்களாவர்.

கொழும்பில் பணியாற்றிய இந்திய உயர் ஆணையாளர்களில் டிக்சித் மற்றும் நிருபமா ஆகிய இருவரும்  சர்ச்சைக்குரிய பங்கை வகித்திருந்தனர். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் நிர்மாணி டிக்சித் ஆவார். நிருபமா ராவ் சிறிலங்காவின் உள்விவகாரங்களில் தலையிட்டதுடன் சிறிலங்காவின் அப்போதைய சுற்றுலாத்துறை அமைச்சர் அனுர பண்டாரநாயக்கவின் கடுமையான கண்டனங்களுக்கும் உட்பட்டிருந்தார்.

அப்போதைய அரசாங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரண்டினதும் விமர்சனங்களை டிக்சித் மற்றும் நிருபமா ஆகிய இருவரும் சந்தித்தனர். ஆனால் இந்தியா இவ்விருவரையும் காப்பாற்றியது. ஏனெனில் இவர்கள் இந்தியாவின் அறிவுறுத்தல்களையே செயற்படுத்தியிருந்தனர். கொழும்பில் இவ்விருவரும் தமது பதவிக்காலத்தை முடித்து இந்தியாவிற்குத் திரும்பிய பின்னர் இவர்கள் இந்திய வெளியுறவுச் செயலர்களாக பதவி உயர்த்தப்பட்டனர்.

இவ்வாறானதொரு நிலையில், தற்போது சிறிலங்காவிற்கான இந்திய உயர் ஆணையாளராகப் பதவி வகிக்கும் வை.கே.சின்ஹா கூடிய விரைவில் இந்திய வெளியுறவுச் செயலராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

சின்ஹா சர்ச்சைக்குரிய குணவியல்புகளைக் கொண்டிருப்பது போல் தெரியவில்லை. இவர் மிகவும் அமைதியான ஒருவராகவே காணப்படுகிறார். சிறிலங்காவின் இந்திய உயர் ஆணையாளராகச் செயற்பட்ட அசோக் காந்தாவை அடுத்தே சின்ஹா  கொழும்பிற்கு வருகை தந்தார். இவரது வருகையின் பின்னர் மகிந்தவின் ஆட்சியும் கைமாறியது.

அசோக் காந்தாவை  திருப்பி அழைக்குமாறு   இந்தியாவுக்கு மகிந்த மறைமுகமாக அழுத்தம் கொடுக்கப்பட்ட போதிலும், கொழும்பில் தனது கடமைகளை நிறைவு செய்யும் வரை அவரை இந்தியா திருப்பி அழைக்கவில்லை.  அசோக் காந்தாவைத் தொடர்ந்து கொழும்பிற்கான இந்திய உயர் ஆணையாளராக நியமிக்கப்பட்ட சின்ஹா, மகிந்த அரசாங்கத்துடன் சில சிக்கலான முக்கிய விடயங்கள் தொடர்பாக பேச்சுக்களை நடத்தாது அமைதி காத்தார்.

தனது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு இந்தியப் புலனாய்வு அதிகாரி ஒருவர் முயற்சி செய்வதாக மகிந்த அரசாங்கத்தால் பழிசுமத்தப்பட்ட போதிலும், மகிந்த ஒருபோதும் சின்ஹாவையும் கொழும்பிலுள்ள அவரது உயர் ஆணையகத்தையும் பழிசுமத்தவில்லை. நரேந்திர மோடி கொழும்பிற்கு வருகை தந்த போது, மகிந்தவின் வேண்டுகோளுக்கு இணங்க, மகிந்தவிற்கும் மோடிக்கும் இடையிலான பேச்சுக்களுக்கு சின்ஹாவே அனுசரணையாளராகச் செயற்பட்டார்.

கூட்டு எதிர்க்கட்சி

ஜி.பி.எஸ் வரிச்சலுகை வழங்கப்படும் ஒரேயொரு தென்னாசிய நாடு சிறிலங்கா என பேராசிரியர் பீரிஸ் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த ஏற்பாடுகளின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 7200 ஏற்றுமதிப் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். இதனைப் பயன்படுத்துமாறு இந்திய நிறுவனங்களுக்கு சிறிலங்கா அழைப்பு விடுத்ததுடன் ஐரோப்பாவிற்கான ஒரு பாதையாக சிறிலங்கா அமைய வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

 ‘இந்த வரிச்சலுகை 2008ல் காலாவதியாகிய போதிலும் இதற்கான காலப்பகுதியை 2011வரை அதிகரிப்பதற்கான முயற்சியில் சிறிலங்கா ஈடுபட்டது’ சிறிலங்காவிற்குச் சேவையாற்றச் சென்ற TATA, Bajaj, Hero Honda, TVS,  தாஜ் விடுதிகள் மற்றும் அப்பலோ வைத்தியசாலை போன்றன சிறிலங்காவில் மிகவும் வெற்றிகரமான சேவைகளை ஆற்றியதாகவும் இவை சிறிலங்காவில் முதலீடு செய்துள்ளதாகவும் பீரிஸ் தெரிவித்தார். இந்தியா மற்றும் சிறிலங்கா ஆகிய இரண்டு நாடுகளும் தத்தமது நாடுகளின் வளங்களைக் கூட்டாகப் பயன்படுத்த வேண்டும் என பீரிஸ் தெரிவித்திருந்தார். – (ஐலண்ட் 2008-01-20)

இந்தியாவுடனான பரந்த பொருளாதார உடன்படிக்கையை ஆதரித்த பீரிஸ் தற்போது அதனை எதிர்ப்பதை அனுபவம் வாய்ந்த சின்ஹாவினால் சகித்துக் கொண்டிருக்க முடியாது. அதாவது பீரிஸ் போன்ற சிறிலங்காவின் அரசியல்வாதிகள் பரந்த பொருளாதார கூட்டு உடன்படிக்கை தொடர்பாக தமது சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக இந்தியாவை ஒரு துடுப்பாட்டப் பந்தாகப் பயன்படுத்துவதை இனியும் சின்ஹாவிவால் நிச்சயமாகப் பொறுத்துக் கொள்ள முடியாது.

இந்தியாவுடனான பரந்த பொருளாதார உடன்படிக்கைக்கு அப்பால், சீனாவுடன் மகிந்த அரசாங்கம் பல்வேறு உடன்படிக்கைகளை மேற்கொண்டது. சீனாவுடன் வர்த்தக சார் உடன்பாடு ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக மைத்திரி-ரணில் அரசாங்கம் கூறுகின்றது. கொழும்பின் இந்த நகர்வு தொடர்பாக சிறிலங்காவின் கூட்டு எதிரணியானது எந்தவொரு எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை. மகிந்தவால் கொழும்புத் துறைமுக நகரம் உருவாக்கப்படுவதற்கான அனுமதி சீனாவுக்கு வழங்கப்பட்ட போது இது தொடர்பில் எவரும் வாய்திறக்கவில்லை. இத்திட்டத்தை தற்போது எதிரணியில் அங்கம் வகிக்கும் ஜி.எல்.பீரிஸ் மற்றும் அவரது ஆதரவளர்கள் அனைவரும் ஆதரித்திருந்தனர்.

இந்தியாவுடன் எந்தவொரு திட்டங்கள் கைச்சாத்திடப்படும் போதும் சிறிலங்காவின் எதிரணியினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். ஆனால் மகிந்தவின் செல்வாக்கிற்கு உட்பட்ட சீனாவுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு இவர்கள் ஒருபோதும் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை என்பது மிகத் தெளிவாகும். மைத்திரி-ரணில் அரசாங்கம் ஆட்சியை நடத்த ஆரம்பித்த போது சீனாவை விமர்சித்தனர். இந்நிலையில் சிறிலங்காவிற்கு உதவி வழங்குவதை சீனா மீள் பரிசீலனை செய்ய வேண்டியேற்படும் என சீனத் தூதுவர் அச்சுறுத்தியிருந்தார்.

சின்ஹாவின் அச்சுறுத்தல் அறிக்கையைத் தொடர்ந்து சில திருத்தங்களுடன் எட்கா உடன்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும் என மகிந்த கோரிக்கை விடுத்தார். சின்ஹாவின் ‘சிங்கக் குரலுக்கு’ மகிந்த அஞ்சுகிறார் போலும். தான் ஆட்சிக்கு வருவதற்கு மட்டுமல்லாது, தனக்கெதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் மோடிக் குற்றங்களிலிருந்து வெளிவருவதற்கு தனக்கு இந்தியாவின் உதவி தேவைப்படும் என்பதை மகிந்த உணர்ந்துள்ளார்.

இந்திய உயர் ஆணையாளராக கொழும்பில் செயற்பட்ட நிருபமா ராவுக்கு எதிராக அனுர பண்டாரநாயக்க குற்றச்சாட்டை முன்வைத்த போது, அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மகிந்த கட்டளை வழங்கினார். சின்ஹா ஒரு அமைதியான ஆணையாளராக இருந்தாலும் கூட, எதிர்க்கட்சியினது நடவடிக்கை,  சின்ஹாவைக் கோபத்திற்கு உள்ளாக்கியிருக்கலாம் . மகிந்தவைச் சூழ தற்போது இந்திய எதிர்ப்பாளர்கள் உள்ள நிலையில், எதிர்காலத்தில் இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதில் மகிந்த பெரும் நெருக்கடியை எதிர்நோக்குவார்.

சரத் பொன்சேகாவைப் புகழ்ந்த விக்னேஸ்வரன்

$
0
0

field-marshan-sarath-fonseka (1)சரத் பொன்சேகா தனது சுயநலனுக்காகவே அனைத்துலக விசாரணைக்கு ஆதரவளித்துள்ளார். இவர் முன்னைய அரசாங்கத்தில் இராணுவ நீதிமன்றால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதற்குப் பழிதீர்க்கும் முகமாகவே  அனைத்துலக விசாரணைக்கான ஆதரவை வழங்கியுள்ளார்.

இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் Manekshaw எழுதியுள்ள பத்தியில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நாடாளுமன்றில் ஆற்றிய கன்னி உரையின் போது, அனைத்துலக தலையீட்டுடனேயே போர்க் குற்றங்கள் மீதான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்ததை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பாராட்டியுள்ளார்.

இதுமட்டுமல்லாது, சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் நிறைவில் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் அடங்கிய பல நூறு போராளிகள் கொல்லப்பட்ட ‘வெள்ளைக் கொடி’ விவகாரம் தொடர்பாக விசாரணை நடாத்தப்பட வேண்டும் எனவும் பீல்ட் மார்சல் அழைப்பு விடுத்துள்ளார்.

2010 அதிபர் தேர்தலில் போட்டியிட்ட பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தற்போது பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் என்ற பதவியுடன் சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

ஜெனரல் டக்ளஸ் மக் ஆர்தர் மற்றும் பிரித்தானியாவின் பீல்ட் மார்சல் மொன்ரகொமெறி ஆகியோர் பங்கெடுத்த இரண்டாம் உலக யுத்தமானது வெற்றிகரமாக முடிவிற்குக் கொண்டு வரப்பட்ட பின்னர், ‘ஐக்’ என நன்கு அறியப்பட்ட அமெரிக்க ஜெனரல் ட்வைட் ஐசனோவர் என்பவர் 1953ல் அமெரிக்காவில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமெரிக்காவின் 34வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் 1961 வரை அமெரிக்க அதிபராகப் பதவி வகித்தார். ட்வைட் ஐசனோவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு இரண்டு காரணங்கள் மிக முக்கியமானவையாகும். அதாவது இரண்டாம் உலக யுத்தம் மற்றும் அடல்ப் ஹிட்லர் ஆகிய இரண்டையும் வெற்றி கொள்வதற்காக ஐசனோவர் தனது தலைமைத்துவத்தை வழங்கினார் என்பதற்கு நன்றி பாராட்டியே அமெரிக்கர்களால் இவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2010ல் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது, இவர் ‘ஐக்’ என ஊடகங்களால் விபரிக்கப்பட்டார். அதாவது மூன்று பத்தாண்டுகளாக இலங்கைத் தீவில் நிலைத்திருந்த யுத்தத்தை வெற்றிகரமாக வெற்றி கொண்டதன் பின்னர் சரத் பொன்சேகா அதிபர் தேர்தலில் போட்டியிட்டமையால் ஊடக வட்டங்களில் இவர் ‘ஐக்’ எனப் போற்றப்பட்டார்.

வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் பிரசன்னத்தைக் குறைக்க வேண்டும் எனப் பொதுவாகத் தனது பேச்சுக்களில் கடின தொனியில் வலியுறுத்தும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கடந்த வாரம் வலிகாமம் வடக்கைச் சொந்த இடமாகக் கொண்டுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான நிலச் சான்றுகளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன  வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது நாடாளுமன்றில் சரத் பொன்சேகா ஆற்றிய உரை தொடர்பாகத் தான் பெருமை கொள்வதாக அறிவித்தார்.

2010ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் மகிந்த ராஜபக்ச பெற்றுக் கொண்ட வாக்குகளை விட சரத் பொன்சேகா பெற்றுக் கொண்ட வாக்குகள் மிகவும் அதிகமாகக் காணப்பட்டதாக விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்படுவதை எதிர்க்காது இதனை சரத் பொன்சேகா ஆதரித்ததன் மூலம் உண்மையில் தான்  ஒரு இராணுவ வீரன் என்பதை நிரூபித்துள்ளதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார். பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தனது தொழிற்பண்பை உறுதிப்படுத்தியிருந்தார். இதனாலேயே மக்கள் 2010 இடம்பெற்ற அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்து வாக்களித்திருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கும் மேலாக, புலிகளின் தலையீட்டால் 2005ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலைப் பகிஸ்கரித்த வடக்கு மாகாண மக்கள் இதே தவறை 2010 தேர்தலிலும் இழைக்க விரும்பவில்லை. இதனால் இவர்கள் 2010ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்து வாக்களித்தனர்.

இதன் பின்னர் 2015ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடித்த இந்த வாக்காளர்கள் மைத்திரிபால சிறிசேனவை நாட்டின் அதிபராக நியமித்தனர். சிறிலங்காவின் உச்சநீதிமன்றில் நீதிபதியாகப் பதவி வகித்த விக்னேஸ்வரன், தனது பாடசாலைப் பருவத்தில் கொழும்பு றோயல் கல்லூரியின் இளவல் (கேடற்) படைப்பிரிவின் உறுப்பினராகச் செயற்பட்டிருந்தார். முதலமைச்சர் தனது பாடசாலைக் காலத்தை நிறைவு செய்த பின்னர் இளவற் படையணியின் உறுப்பினர் என்ற தகைமையுடன் சிறிலங்கா இராணுவத்தில் இணைந்திருந்தால் தற்போது அவர் ஒரு மூத்த அதிகாரியாக இருந்திருப்பார்.

பீல்ட் மார்சல் என்பது இராணுவத்தின் உயர்நிலையாகும். அனைத்துலக ரீதியில் மதிப்பளிக்கப்பட்ட பிரித்தானியாவின் பீல்ட் மார்சல் மொன்ரகொமறி மற்றும் இந்தியாவின் பீல்ட் மார்சல் சாம் மானெக்சா ஆகியோர் தமது தலைமைத்துவப் பண்புகளை வெளிப்படுத்தியதன் காரணமாகவே இராணுவ உயர் நிலைகளைப் பெற்றனர். பீல்ட் மார்சல் மொன்ரகொமறி இரண்டாம் உலக யுத்தத்தின் சிறந்த கதாநாயகர்களில் ஒருவராவார். இந்தியாவின் பீல்ட் மார்சல் மானெக்சா, 1970ல் இடம்பெற்ற இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தில் பாகிஸ்தானைத் தோற்கடிப்பதில் மிகப்பாரிய பங்காற்றியிருந்தார்.

ஆகவே பீல்ட் மார்சல்கள் தமது நாடுகளின் எதிரிகளுக்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்டு வெற்றியீட்டியதால் உலகப் புகழ்பெற்றனர். இதேபோன்று தனது நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை வெற்றிகரமாக முடிவிற்குக் கொண்டு வந்தவர் என்ற வகையில் பீல்ட் மார்சல் பட்டத்தைப் பெற்ற முதலாவது இராணுவத் தலைவராக சரத் பொன்சேகா விளங்குகிறார்.

போரின் போது இடம்பெற்றதாக நம்பப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்படுவதைத் தான் எதிர்க்கவில்லை என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தனது நாடாளுமன்றக் கன்னி உரையில் குறிப்பிட்டிருந்தார். தனது இராணுவத் தலைமைத்துவத்தின் கீழ் இடம்பெற்ற அனைத்து யுத்த நடவடிக்கைகளும் போர்ச்சட்டத்தின் பிரகாரமே மேற்கொள்ளப்பட்டதாகவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் சரத் பொன்சேகா தனது சுயநலனுக்காகவே அனைத்துலக விசாரணைக்கு ஆதரவளித்துள்ளார். அதாவது இவர் முன்னைய அரசாங்கத்தில் நிலவிய நீதி முறைமையின் கீழ் தண்டிக்கப்பட்டதுடன், இராணுவ நீதிமன்றாலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதற்குப் பழிதீர்க்கும் முகமாகவே சரத் பொன்சேகா தற்போது அனைத்துலக விசாரணைக்கான தனது ஆதரவை வழங்கியுள்ளார். அனைத்துலக விசாரணைக்குத் தனது ஆதரவை வழங்கியதோடு மட்டுமல்லாது குற்றவாளிகளை இனங்கண்டு அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக விசாரணைகள் தொடர்பான பீல்ட் மார்சல் பொன்சேகாவின் நிலைப்பாட்டை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புகழ்ந்துரைத்ததன் மூலம், தென்னிலங்கையில் உள்ள சரியாகச் சிந்திக்கின்ற மக்களின் கருத்துக்களை வரவேற்பதுடன், சமாதானம் மற்றும் மீளிணக்கப்பாடு ஆகியவற்றை நாட்டில் நிலைநிறுத்துவதற்கான தனது விருப்பத்தையும் இவர் வெளியிட்டுள்ளார்.

கி.பி.அரவிந்தன் எனும் ஆளுமையின் 1ஆவது ஆண்டு நினைவாக… –நேர்காணல்: பகுதி 1

$
0
0

ki-pi-annaஈழ விடுதலைப் போராட்ட முன்னோடி,கவிஞர், எழுத்தாளர் கி.பி.அரவிந்தன் அவர்களுடன் 2014இல் மேற்கொள்ளப்பட்ட ஓர் உரையாடல்.  நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா.

கி.பி.அரவிந்தன் என்ற ஆளுமை உலகத் தமிழர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட கவிஞர், எழுத்தாளர், ஒரு இலக்கியப் படைப்பாளி என்பதற்கப்பால் – ஓரு சமூகப் போராளி என்ற பரிமாணம் அவருக்கு உண்டு. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர். மாணவப் பருவத்திலிருந்து போராட்ட களத்தில் நின்றவர். ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தவரும் தமிழீழ விடுதலைக்காக முதலாவதாகக் களப்பலியான தற்கொடையாளர் தியாகி பொன் சிவகுமாரனுடன் செயற்பட்ட அவரது தோழர். சிறிலங்காவின் 1972 அரசமைப்புச் சட்டத்தை எதிர்த்துப் போராடி சிறை சென்றவர்களில் ஒருவர்.

தொடர்ச்சியாக ஈரோஸ் அமைப்பில் இணைந்து அதன் அரசியல் மற்றும் ஊடக, எழுத்துப் பணிகளில் பங்காற்றியவர். 1990களிலிருந்து புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த போதும் தொடர்ச்சியாக இலக்கிய மற்றும் ஊடகத் தளங்களில் காத்திரமாக இயங்கிக் கொண்டிருந்தவர். அவருடைய கவிதைத் தொகுப்பொன்று 2015 நடுப்பகுதியில்; பிரெஞ்சில்; மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. ‘ஓர் உறைபனிக் காலக் கட்டியக்காரன்’ என்பது அந்நூலின் தமிழ்த் தலைப்பு.

பிரான்ஸ் பல்கலைக்கழகம் ஒன்றில் விரிவுரையாளராகப் பணிபுரியும் மொழியியலாளரும் உயர்கல்வி ஆய்வாளருமான அப்பாசாமி  முருகையன்; கி.பி.அரவிந்தன் அவர்களுடைய 30 கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார்.

அந்தப் பின்னணியில் 2014இல், அதாவது அவர் காலமாவதற்கு 8 மாதங்களுக்கு முன்னர், நோர்வே தமிழ்3 வானொலிக்காக இந்த உரையாடல் அவரோடு மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்3 வானொலிக்காக 2014 ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்டு நோர்வே தமிழ்3 வானொலியில் ஒலிபரப்பப்பட்டு. பின்னர் youtube தளத்திலும் பதிவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கி.பி அரவிந்தன் மறைவிற்கு முன்னர், இறுதியாக ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் இது என்ற அடிப்படையில் இது முக்கியத்துவம் பெறுகிறது. அவரது கவிதைகள் பிரேஞ் மொழியாக்கம் செய்யப்பட்டு நூலுருப் பெற்ற பின்னணியில் தொடங்கும் உரையாடல், ஆரம்பகாலப் போராட்டப் பங்களிப்பிலிருந்து, கலை இலக்கிய, சமூகச் செயற்பாடுகள், புலம்பெயர் வாழ்வியல், தாயக-தமிழக-புலம்பெயர் அரசியல், இளைய தலைமுறை எனப் பல்வேறு கருத்துகளை உள்ளடக்கி விரிந்து சென்றது என்ற வகையிலும் இதன் உள்ளடக்கம் பெறுமதியுடையதாகின்றது.

அவருடைய அனுபவங்களின் ஊடாக விடுதலைப் போராட்டத்தினது முக்கிய வரலாற்றுப் பக்கங்களையும், புலம்பெயர் வாழ்வியல் பற்றிய காத்திரமான பார்வையையும் பதிவாக்க முடியும் என்ற நம்பிக்கையில் மேற்கொள்ளப்பட்ட உரையாடல் இது. அவருடைய முதலாவது ஆண்டு நிறைவில், அவரது நினைவுகளுக்குச் சமர்ப்பணமாய் எழுத்து வடிவில் இந்நேர்காணலை வெளியிடுவது பொருத்தமும் பெறுமதியும் மிக்கதெனக் கருதுகின்றோம்.

ஒலிவடிவ நேர்காணலை எழுத்துருவாக்கித் தந்த மொழிபெயர்ப்பாளரும் புதினப்பலகையின் செய்தியாளருமான நித்யபாரதிக்கு மனமார்ந்த நன்றிகள்.

இனி நேர்காணலுக்குள் செல்வோம்:

உங்களுடைய கவிதைத் தொகுப்பொன்று அண்மையில் பிரென்ஞ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. உறைபனிக்காலக் கட்டியக்காரன் என்பது அதன் தலைப்பாக உள்ளது. இதன் பின்னணி இந்த முயற்சிக்கு எப்படி அடிகோலப்பட்டது, இது எப்படி சாத்தியமாயிற்று என்பது தொடர்பாக பகிர்ந்து கொள்ள முடியுமா?

நூல் வெளியீட்டிலிருந்து, இந்த நூல் பற்றியதான தகவல்களுடன் இந்த நேர்காணலை ஆரம்பிப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஓர் உறைபனிக்காலக் கட்டியக்காரன் பிரென்ஞ் தலைப்பினுடைய தமிழ் மொழிபெயர்ப்பே தவிர இந்தத் தலைப்பு நூலிலிருந்து இடம்பெறவில்லை. அதாவது பிரென்ஞ் தலைப்பு “Le messager de l’hiver “. அதாவது ‘குளிர்காலம் பற்றியதான தகவல் தெரிவிப்பவன்’ என்பதே இதன் நேரடியான மொழிபெயர்ப்பு. ஆனால் ஊடகங்களுக்கு அந்த நூல் பற்றி அறிவிக்க வேண்டும் என்கின்ற போது, நண்பர்கள் அதனை ‘ஓர் உறைபனிக் காலக் கட்டியக்காரன்’ என மொழிபெயர்த்து தமிழில் இவ்வாறு தலைப்பிட்டனர்.

ஆனால் நூலில் எங்கேயும் ஓர் உறைபனிக்காலக் கட்டியக்காரன் என்ற தலைப்போ சொற்றொடரோ இடம்பெறவில்லை என்பது முக்கியமான விடயம். இந்தக் கவிதை நூலில் என்னுடைய ஏறத்தாழ முப்பது கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. நான் கடந்த காலங்களில் என்னுடைய கவிதைகள் மூன்று தொகுப்பாக வந்துள்ளன. அதாவது 2000ம் ஆண்டு வரைக்குமாக எழுதப்பட்ட கவிதைகள். மூன்று தொகுப்பிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 30 கவிதைகளே பிரென்ஞ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு,’Le messager de l’hiver’  என்ற தலைப்பின் கீழ் நூலாக வெளிவந்துள்ளது.

எந்த வகையான உந்துதலால் இந்த மொழிபெயர்ப்பு நிகழ்ந்தது,எந்தப் பின்னணியில் கவிதைகள் மொழிபெயர்ப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன?

kipi1என்னுடையமூன்றாவது கவிதைத் தொகுப்பு 1999ம் ஆண்டு வெளிவந்த ‘கனவின் மீதி’ தொகுப்பிற்கு பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் அணிந்துரை வழங்கியிருந்தார். இந்த அணிந்துரையில் அவர் முக்கியமான விடயத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய சொற்களிலேயே சொல்ல வேண்டுமாயின் ‘கி.பி அரவிந்தனுக்கு மாத்திரம் நல்லதொரு மொழிபெயர்ப்பாளர் கிடைப்பாரேயானால் அவருடைய வாசகர் வட்டம் நிச்சயம் விரியும். ஒரு நாட்டில் வாழ்கின்ற ஒரு இனத்தின் – ஒரு அகதியின் அவலத்தை இனத்தின் அவலமாக, நாட்டின் அவலமாக, உலகின் அவலமாகக் காட்டுகின்ற திறமை அரவிந்தனுக்கு கைவந்துள்ளது என்று கருதுகிறேன்’ என தனது அணிந்துரையில் குறிப்பிட்டிருந்தார்.

இத்தொகுப்பை நான் பல நண்பர்களிடம் வழங்கியபோது எனது நண்பராகிய அப்பாசாமி முருகையன் அவர்களுக்கு பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் வார்த்தை பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது.

“பிரென்ஞ் மொழியில் நான் பேராசிரியராக இருக்கிறேன். இந்நிலையில் நான் ஏன் இந்தக் கவிதைகளை மொழிபெயர்க்கக் கூடாது” என அப்பாசாமி முருகையன் அவர்கள் கருதினார். அவர்தான் என்னிடம் எனது கவிதைகளை பிரென்ஞ் மொழியில் மொழிபெயர்ப்பது தொடர்பான உரையாடலை ஆரம்பித்தார். ‘இந்தக் கவிதை நூல்களை நான் மொழிபெயர்க்க விரும்புகிறேன். உங்களுடைய உதவியை வழங்க வேண்டும்’ என அப்பாசாமி முருகையன் என்னிடம் கேட்டார். தாராளமாக உதவுவதாக நானும் அவரிடம் கூறினேன். இந்த வகையில் இருவருமாகச் சேர்ந்து இதனை உருவாக்கினோம். அதாவது முருகையனினுடைய வார்த்தையில் கூறுவதானால்,

“கடந்த முப்பது ஆண்டுகளாக பாரீஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, பண்பாடு பற்றிய இலக்கியம் பற்றிய இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான ஓர் அறிமுகப்பாடத்தை  நடாத்தி வருகிறேன். இப்பாடத்திட்டத்தில் இரண்டு சிறப்புக் கூறுகிறேன். முதலாவது தமிழ் இலக்கியத் தரவுகளை மையமாக கருப்பொருளாகக் கொண்டு மொழிப்பண்பாட்டைக் கற்றல், இரண்டாவதாக புலம்பெயர் மொழி பண்பாடு மற்றும் இலக்கியம் பற்றிய ஆய்விற்கு வழிவகுத்தல். இந்தவகையில் கி.பி.அரவிந்தனின் கவிதைகள் பலவற்றை இந்தப் பட்டறைகளிலும் மேலும் எனது பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலும் மொழிபண்பாடு பற்றிய ஆய்வு விளக்கங்களுக்காகவும் மொழிபெயர்ப்புப் பயிற்சிக்காகவும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. இச்சூழல்களில் கி.பி.அரவிந்தனின் கவிதைகளை மொழிபெயர்ப்பதற்கான வாய்ப்புக் கிட்டியது.” என்று கூறியிருக்கின்றார் முருகையன்.

தொடக்க காலத்தில் பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு கற்பிக்கும் போது   என்னுடைய கவிதைகளை மொழிபெயர்த்து ஒரு பரீட்சார்த்தமாக மாணவர்களுக்கு பிரென்ஞ், தமிழ் இரண்டு மொழிகளிலும் கற்பித்தஅவரது பரிச்சயம், தொடர்ச்சியாக எனது கவிதைகளை மொழிபெயர்ப்பதற்கு உந்துதலாக அமைந்தது என்பதால் இதனை அவர் ஒரு வேலைத்திட்டமாக முன்னெடுக்கலாம் என முடிவு செய்தே என்னுடைய உதவியைக் கோரியிருந்தார். அதற்கு நானும் சம்மதித்தேன்.

உங்களுடைய கவிதைத் தொகுப்புக்களான ‘இனியொரு வைகறை’ ‘முகங்கொள்’ மற்றும் ‘கனவின் மீதி’ ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புக்களிலிருந்து முப்பது கவிதைகள், மொழியாக்க கவிதைகளுக்கான உள்ளடக்கமாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் கவிதைகளின் உள்ளடக்கத் தெரிவுகள் இடம்பெற்றன என்பது பற்றிக் கூறமுடியுமா?

புலம்பெயர் நாட்டிற்கு வந்துசேரும் ஒருவர் எதிர்கொள்ளும் அனுபவங்கள் பற்றியதான கவிதைகளையும் அதேவேளை, அவர் தாயகத்தில் எதிர்கொண்ட பிரச்சினைகள் –  அதாவது ஏன் அவர் புலம்பெயர வேண்டியேற்பட்டது என்பதற்கான காரணங்களை அடிப்படையாகக் கொண்ட கவிதைகள் தேர்வுசெய்யப்பட்டு அவற்றுள் சிறப்பான கவிதைகளை நாங்கள் மொழிபெயர்க்கத் தீர்மானித்தோம். இந்த அடிப்படையில் மூன்று தொகுப்புக்களிலும் இடம்பெற்ற கிட்டத்தட்ட 70 கவிதைகளில் 30 கவிதைகளைத் தெரிவு செய்தோம். புலம்பெயர் வாழ்வியல் அனுபவமும், தாயகத்தில் கவிஞர் எதிர்கொண்ட அனுபவங்களையும் – அதாவது அவர் அந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்குக் காரணமாக இருந்த புறநிலைகள் பற்றி அவர் எழுதிய கவிதைகளின் ஊடாகவும் அந்த நிலைமைகளைக் கூறும் வகையில் இந்தத் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

தெரிவுப்பணி முடிக்கப்பட்டு முருகையனின் நண்பர்களின் உதவியுடன் கூட்டு முயற்சியாக பிரென்ஞ் மொழிக் கவிஞர்களின் உதவியுடனும் மொழிபெயர்ப்புக்கள் சரிபார்க்கப்பட்டு – ஒரு பிரென்ஞ் வெளியீட்டு நிறுவனத்தின் ஊடாக கடந்த ஜூன் 3ம் (2014) திகதி இந்த நூலின் வெளியீட்டு விழா பாரிசில் மிக சிறப்பாக இடம்பெற்றது. பெரும்பாலும் பிரென்ஞ் புலமைசார் கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், பிரென்ஞ்-தமிழ் தெரிந்த பிரென்ஞ்-தமிழோடு உறவு கொண்ட ஆராய்ச்சியாளர்கள் எனப் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். உண்மையில் இந்த நிகழ்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றது. அதற்கான காணொளி மற்றும் ஒளிப்படத் தொகுப்புக்கள் கூட பல இடங்களில் பலரால் வெளியிடப்பட்டன. இத் தொகுப்புக்களின் ஊடாக இந்த நிகழ்வின் சிறப்புக்களை கண்டுணர முடியும்.

பேராசிரியர் க.சிவத்தம்பி அவர்களுடைய பாராட்டும் அவர் கூறிய கருத்தும், மொழியியலாளர்அப்பாசாமி முருகையன் அவர்களின்முனைப்பு மிக்க ஈடுபாடும் மொழிபெயர்ப்பிற்கான உந்துதலாக அமைந்தது என்றீர்கள்.புலம்பெயர் கவிஞன் ஒருவனுடைய வாழ்வியல் அனுபவங்கள் மற்றும் புலப்பெயர்விற்கான காரணங்களைப் பதிவு செய்யும் அதேவேளை புலம்பெயர் வாழ்வியல் சார்ந்த ஒரு வரலாற்றைப் பதிவு எனவும் எடுத்துக் கொள்ளலாமா? இந்த மொழிபெயர்ப்பின் பயன்பாட்டு முக்கியத்துவம் என்ன?

ki.piநிச்சயமாக, இது ஒரு வகையிலே, மூன்றாம் உலக நாடுகளிலிருந்து புலம்பெயரும் மனிதன், ஐரோப்பிய முதலாம் உலக செழிப்பு மிக்க நாடொன்றுக்குள் நுழையும் போது அவன் எதிர்கொள்ளும் அதிர்ச்சிகள்,அதாவது கலாசார அதிர்ச்சிகள், பண்பாட்டு அதிர்ச்சிகள் அல்லது அந்நாட்டின் சூழல் பற்றிய நிலைமைகள் அல்லது அவன் இங்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் போன்ற பல்வேறு விடயங்கள் உள்ளன.

கவிதைகளில் அவர் கண்டுகொண்ட விடயம் யாதெனில் பல புலம்பெயர் சமூகங்களின் அனுபவங்கள் இத்தமிழ்க் கவிதைகளின் ஊடாக வெளிவந்துள்ளது என்பது அவருக்கு ஆச்சரியமாக உள்ளது. அதாவது பலருடைய அனுபவங்களுடன் இவை ஒத்துப்போகக் கூடியதாக உள்ளன. இந்த அனுபவங்கள் அவ்வாறானதாகவே இருக்க முடியும். புலம்பெயர்ந்தவர்கள் எல்லோரினதும் அனுபவங்கள் ஒரே தரத்தினதாகவே இருக்கும் என்றே நான் நிச்சயமாக நினைக்கிறேன்.

புலம்பெயர்ந்தவர்கள் மொழிப் பரிச்சயமான இடங்களுக்குப் புலம்பெயர்வதற்கும் மொழி தெரியாத, கலாசார அறிமுகமில்லாத ஒரு நாட்டிற்குப் புலம்பெயர்வதற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. எமது இலங்கை போன்ற நாடுகள் ஆங்கில வலயத்தைச் சேர்ந்தவை. அவர்கள் ஆங்கில வலயத்தை நோக்கிப் புலம்பெயரும் போது அவர்கள் சந்திக்கின்ற பிரச்சினைகள் கலாசார ரீதியானதாக இருந்தாலும் மொழி ரீதியானதாகவோஇருந்தாலும் அவர்கள் அவ்வகையான அதிர்ச்சிகளை எதிர்கொள்வதில்லை. ஆனால் ஆங்கில வலயமல்லாத பிரெஞ், நோர்வேஜிய அல்லது டெனிஸ், டச்சு மற்றும் ஜேர்மன் போன்ற ஆங்கில மொழியையே பேசத் தயங்குகின்ற மொழி மற்றும் கலாசார பின்னணியைக் கொண்ட  தேசிய இனங்கள் மத்தியில் நாங்கள் புலம்பெயர்ந்து வரும்போது நாம் கொள்கின்ற அதிர்ச்சி இன்னமும் அதிகமாக இருக்கும்.

இந்தவகையில், நான் பிரான்சுக்கு வந்துசேர்ந்ததன் பின்னர் சந்தித்த விடயங்கள் பொதுவானதாக ஒரு மொழி சாராத எந்த நாட்டிலிருந்தும் வந்திருக்கக்கூடிய புலம்பெயர்ந்தவர்களின் பொது அனுபவங்கள் அதற்குள் தெறித்துள்ளது என்பது மொழிபெயர்ப்பாளரின் கருத்தாகும்.ஆதலால் இந்தக் கவிதைக்கு ஊடாக இது ஒரு காலகட்டத்தின் பதிவு. ஏறக்குறைய 90ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட எனது பதிவுகளாக இவை காணப்படுகின்றன என்பது இங்கு முக்கியமான விடயமாகும். தற்போது 2014. இன்னமும் 10 வருடங்களுக்குப் பின்னால் எமது இளம் தலைமுறையினர் தமது மூத்த தலைமுறையினர் இங்கு எவ்வகையில் வந்தார்கள், எவ்வகையாக இந்த சமூகத்தை எதிர்கொண்டார்கள், அவர்கள் சந்தித்த பிரச்சினைகள் என்ன என்பது பற்றி அவர்கள் பிரென்ஞ் மொழியில் இந்தக் கவிதைகளைப் படிக்கும் போது நிச்சயமாக அவர்களுக்கு அதைத் தெரிவிப்பதான ஒரு வரலாற்றுப் பதிவாக, வரலாற்று ஆவணமாக, ஒரு தடயமாக இருக்கும். முன்னர் எமது சமூகம் இப்படித்தான் பிரச்சினைகளைச் சந்தித்தார்கள் என்பதையும்  இவற்றின் ஊடாகத் தான் நாங்கள் வளர்ந்திருக்கிறோம் என்பதையும் இளம்தலைமுறையினருக்கு அறிவிப்பதற்கு வசதியாக இந்த மொழிபெயர்ப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்த நூல் அறிமுக நிகழ்வு பிரென்ஞ் பதிப்பகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நிகழ்வு எவ்வாறு வடிவமைக்கப்பட்டிருந்தது?  உங்களுடன் தனிப்பட்ட முறையில் உரையாடும் போது, இது வித்தியாசமான முறையில் மிகவும் கவரத்தக்கதாக நூல் அறிமுகம் இடம்பெற்றதாகக் குறிப்பிட்டீர்கள்.; தமிழ்ச் இலக்கியத் தளங்களில் நடைபெறுகின்ற நூல் அறிமுக விமர்சன நிகழ்வுகளிற்கும் பிரென்ஞ் சமூகத்தின் இலக்கிய நூல் அறிமுக நிகழ்ச்சிகளுக்கும் இடையில் ஏதாவது வேறுபாட்டைக் காணக்கூடியதாக இருந்ததா?

இது பகிர்ந்து கொள்ளக் கூடிய விடயம் தான். நானும் எனது வாழ்வில் முதற்தடவையாக பிரென்ஞ் வெளியீட்டு நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டேன். நாங்கள் மரபு ரீதியாக நடாத்திக் கொண்டிருக்கும் நூல் வெளியீடு மற்றும் நூல் அறிமுக விழாவிற்கும் பிரென்ஞ் நூல் வெளியீட்டு விழாவிற்கும் இடையில் சில வேறுபாடுகளைக் காண முடிந்தது. மிக அதிகமான பேச்சாளர்களை அந்த மேடையில் உள்வாங்காது இருந்தமை முதலாவது வேறுபாடாகும்.

அதாவது ஒரு நிகழ்ச்சி நடத்துனர், நூலாசிரியர், மொழிபெயர்ப்பாளர் ஆகியோருடன் அந்த நூலிற்குள் இருக்கும் பகுதியைப் படித்துக் காட்டுவதற்கு ஒருவர் ஆகிய மூன்று அல்லது நான்கு பேருக்குள் மட்டுமே இந்த நிகழ்வை அவர்கள் ஒழுங்குபடுத்துகிறார்கள். மீதிப்பேர் முன்னிருந்து அவற்றைக் கவனிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த நிகழ்வு இரண்டு மணி நேரம் மட்டுமே நடைபெற்றதை நான் அவதானித்தேன். ஏறத்தாழ 60-70 பேர் கொண்ட ஒரு சிற்றரங்கிற்குள் இடம்பெற்ற இந்த நிகழ்வில், இதனை ஒழுங்குபடுத்தியவர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆகிய மூன்று பேர் மட்டுமே நாங்கள் மேடையில் இருந்தோம். அந்த நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தியவரே இந்த நூலின் உட்பகுதியைப் படித்தார். நூல் பற்றிய விமர்சனம் இங்கு கொண்டு வரப்படவில்லை. அதற்காக யாரும் நியமிக்கப்படவில்லை.

முதலில் அறிமுகம் ஒன்றைச் செய்தார்கள். அதாவது இந்த நூல் வெளிவந்துள்ளது. இந்த நூலின் பெயர் என்ன, இதன் ஆசிரியர் யார் போன்றவற்றை விழாவை ஒழுங்குபடுத்தியவர் தெரிவித்தார். இதன் பின்னர் இதன் மொழிபெயர்ப்பாளர் தனது மொழிபெயர்ப்பு அனுபவங்கள் மற்றும் இந்த நூலைத் தயாரித்த முறை தொடர்பாகவும் எடுத்துக்கூறினார். இந்த நூலாசிரியர் என்ற வகையில் நான் இந்தக் கவிதைகளை எவ்வாறு எழுதினேன் என்பது தொடர்பாகவும் கூறினேன். இந்தமூவரினதும் கருத்துரைகள் மட்டுமே இடம்பெற்றன. அதன் பின்னர் இந்த நூலில் உள்ள நான்கு கவிதைகளை நிகழ்ச்சி ஒழுங்குபடுத்தியவர் தெரிவு செய்து வைத்திருந்தார். அதனைத் தான் வாசிக்கவுள்ளதாகவும் இதன் தமிழ் மொழிபெயர்ப்பை ஆசிரியர் வாசிப்பார் எனவும் தெரிவித்தார். முதலாவது கவிதையை வாசிக்க அதன் தமிழ் வடிவத்தை நான் ஆசிரியர் என்ற வகையில் வாசித்தேன்.

இது வேறு வகை நூலாக இருந்தால் அதிலிருந்து சில பக்கங்கள் தெரிவு செய்யப்பட்டு படிக்கப்படும். கட்டுரையாயின் ஒரு அத்தியாயம் படிக்கப்படும். இவ்வாறு நூலிற்குள் இருந்துதான் ஒரு விடயத்தை அவர்கள் பார்வையாளர்கள் முன் வைக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் இதில் படிக்கப்பட்ட கவிதைகள், முன்னாள் நிகழ்த்தப்பட்ட அறிமுக உரைகள் இவைகளை வைத்துக் கொண்டு பார்வையாளர்களுக்கும் நூலாசிரியர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், மொழிபெயர்ப்பாளர் ஆகியோருக்கிடையில் உரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. படிக்கப்பட்ட கவிதைகளில் தங்களுக்குப் பிடித்த பகுதி என்ன, தங்களுக்குப் பிடிக்காமல் போன பகுதி என்ன, உங்களுடைய வரலாற்றில் இந்தக் கவிதைகள் எவ்வாறானதாக உள்ளன என்பது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

உதாரணமாக இதில் படிக்கப்பட்ட நான்கு கவிதைகளில் ஒன்றான காலம் கனிகிறது என்கின்ற கவிதை சிவகுமாரன் பற்றியதாகும். அது நான்காவதாகப் படிக்கப்பட்டது. அந்தக் கவிதையை பிரென்ஞ் மொழியில் நிகழ்ச்சி ஒழுங்குபடுத்தியவர் படித்தார். அதன் தமிழ் வடிவத்தை நான் படித்தேன். அந்தக் கவிதையிலிருந்தே உரையாடல் ஆரம்பமாகியது.

அந்த நண்பர் எத்தனையாம் ஆண்டு இறந்தார் என அவர்கள் என்னிடம் கேட்டார்கள். 1974ம் ஆண்டு என நான் கூறினேன்.  அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 74ம் ஆண்டு சயனைட் அருந்தி இறந்தாரா எனக் கேட்டனர் அதற்கு நான் “ஆம் சயனைட் அருந்தி இறந்தார்” எனக் கூறினேன். அவர்களுக்கு இது புதுச்செய்தி. ஏனெனில் பொதுவாகவே 1983 இற்குப் பின்னால் தான் இலங்கையில் பிரச்சினை இருப்பதாகவும், அதற்குப் பின்னால் தான் அங்கு போராட்டங்கள் வெடித்ததாகவும்,தமிழீழ விடுதலைப் புலிகள் தான் இதனை நடாத்தியதாகவும் மட்டுமே பொதுப்புத்தி இருக்கின்ற நிலையில் என்னுடைய கவிதை 74ம் ஆண்டு இறந்து போன நண்பனைப் பற்றியதான பகிர்தலுடன் இருந்தபோது அது அவர்களது அதிர்ச்சியை மேலாக்கியது.

பின்னர் இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர், கதிரைகளை ஓரமாக வைத்துவிட்டு நின்றுகொண்டு தமக்கிடையே உரையாடினார்கள். அத்துடன் ஆசிரியருடனான உரையாடல், புத்தகம் வாங்குதல், புத்தகங்களில் கையெழுத்து வாங்குதல் போன்றன இடம்பெற்றன. இந்த நூலை வாங்கிய அவ்வளவு பேரும் என்னிடம் கையெழுத்து வாங்கினார்கள் என்பது மிக முக்கியமான விடயம்.

இரண்டாவதாக, நான் நோய்நிலையில் இருந்த நிலையிலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதில் நான் திருப்தியடைவதற்கும் என்னை மகிழ்ச்சிப்படுத்தியதுமான விடயம் என்னவெனில் புத்தகம் வாங்கியவர்கள் அனைவரும் என்னிடம் கையெழுத்துப் பெற்ற போது ‘உங்களது மொழி நாங்கள் இதுவரை கேட்டதில்லை ஆயினும் மிகவும் அழகாக, அதைக் கேட்க இதமாக இருந்ததாகக்’ கூறினார்கள்.  எனது மொழி அவர்களைச் சென்றடைந்தது என்பதும் அவர்களுக்கு அது சுவையாக இருந்தது என்பதும் உண்மையில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. அந்த நூல் வெளிவந்ததை விடவும் தமிழில் அந்தக் கவிதைகளை வாசித்தது என்பதும் அதற்கு ஊடாக தமிழ் மொழி பற்றிய அவர்கள் பெற்றுக்கொண்ட அனுபவம் எனக்கு மகிழ்ச்சியளித்தது.

எங்களுடைய நிகழ்வுகளில் இவை நேரெதிராக இருக்கும். நாங்கள் நூலை வாசிக்காத பார்வையாளர்களை முன்னுக்கு கொண்டு வந்து வைத்துவிட்டு ஒருவரிடம் நூலைக் கொடுத்து வாசிக்குமாறு கேட்போம். அவர் 10-15 நிமிடம் உரையாற்றும் போது பார்வையாளர்கள் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு கேட்டுக் கொண்டு இருப்பார்கள். அதாவது நூல் தொடர்பான முன்னுணர்வு இல்லாது யாரோ ஒருவர் வாசிக்க அவர் கூறும் நூல் பற்றியதான கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு நிகழ்ச்சி முடிவடைந்தவுடன் விரும்பினால் புத்தகத்தை வாங்கிக்கொண்டு அப்படியே கிளம்பிச் செல்வது. இங்கே ஆசிரியருக்கோ, மேடையில் நிகழ்த்தப்பட்டவைக்கோ, பார்வையாளர்களுக்கும் இடையில் எவ்வித உறவோ உரையாடலோ நிகழ்வதற்கான வாய்ப்பு எமது மேடை அமைப்பில் மற்றும் நிகழ்ச்சி அமைப்பில் இல்லை.

சிலவேளைகளில் கடைசியில் ஒரு சாட்டாக கேள்வி உள்ளவர்கள் கேளுங்கள் எனச் சொல்லப்படும் வழக்கம் உண்டு. ஆனால் கேள்வி உள்ளவர்கள் எப்படிக் கேட்பார்கள். ஏனெனில் இவர்கள் அந்தப் புத்தகத்தைப் படித்திருக்கமாட்டார்கள். மேடையில் பேசியவர் மட்டும் புத்தகத்தை வாசித்து விட்டுப் பேசியிருப்பார். ஆகவே பார்வையாளர்கள் எங்கிருந்து கேள்வி எடுக்க முடியும்? நூலிலிருந்து ஒரு பகுதியைப் பார்வையாளருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்கின்ற விடயம் எனக்கு இந்த நிகழ்ச்சிக்கு ஊடாகக் கிடைத்தது. இதை ஒரு முக்கிய விடயமாக நான் கருதுகிறேன்.

இது ஒரு முக்கியமான விடயமாகவும் முக்கியமான நிகழ்ச்சியாகவுமே பார்க்க முடியும்.அந்த வகையில் ஒருவழித் தொடர்பாடலாக இல்லாது, வாசகர்கள், இலக்கிய கர்த்தாக்கள் போன்றோர் பரஸ்பரம் உரையாடிக் கொள்ளக் கூடிய, கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் தளமாக இருப்பதும் அவரவர் தங்களுடைய வாசிப்பு அனுபவத்தின் ஊடாகப் புரிந்து கொள்வதற்கான வெளி அங்கே இருப்பதுவும் முக்கியமான விடயமாகவே நோக்கப்பட வேண்டும்.

உங்களுடைய மொழிபெயர்ப்பு நூல் என்பது புலம்பெயர் இளைய தலைமுறையினருக்கும் இலக்கிய கர்த்தாக்களுக்கும் இடையில் ஒரு தூண்டுதலாக அமையும். இரு மொழி பண்பாட்டு சமூக சூழலில் புலம்பெயர் சூழலில் மொழிபெயர்ப்பு என்பது முக்கியத்துவம் பெறுகிறது. வாழும் நாட்டு மொழியில் எமது படைப்புக்களை வெளிப்படுத்துவதும் அத்தோடு நேரடியாக வாழும் நாட்டு மொழிகளில் படைப்பதுவும் எழுதுவதும் முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. இது சார்ந்த உங்களுடைய பார்வையைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

இலக்கியம் என்பது நிச்சயமாக இரு தளங்களில் நிகழ்த்தப்பட வேண்டும் என்பது உண்மை. அதாவது தமிழர்களுக்கான இலக்கியம், மற்றையது தமிழ் அறிமுக இலக்கியம் என இரண்டு வகைப்படுகிறது. அரசியலிலும் இவ்விரு பிரிவும் முக்கியமானது என நான் நினைக்கிறேன். தமிழர்களுக்கான அரசியல், தமிழர் அரசியல் என இரண்டு வகையான பிரிவுகள் உள்ளது போன்று தமிழர்களுக்கான இலக்கியம், தமிழர் இலக்கியம் என இரண்டு விடயங்கள் காணப்படுகின்றன. தமிழர்களுக்கான இலக்கியம் என்பது தமிழில் எழுதுவதாகும். தமிழில் தமிழ் சமூகத்தை நோக்கி எழுதுதல், தமிழ் சமூகத்திற்குள் எங்களது ஆக்கங்கள், படைப்புக்களை தமிழில் கூறுவதாகும்.

அடுத்த கட்டமாக எமது தமிழ் இலக்கியத்தை ஏனைய மொழிப் பண்பாட்டு வட்டத்திற்குள் கொண்டு செல்வதாகும். அதாவது மொழிபெயர்த்தல் அல்லது அந்த மொழியிலேயே எழுதுதல். அதாவது நோர்வேயில் நொஸ்க் என்ற மொழி இருக்குதென்றால் அந்த மொழியை நீங்கள் படித்திருந்தால் அந்த மொழியில் தமிழர்களின் பிரச்சினையை வெளிக்கொண்டு வருதல் அல்லது நீங்கள் தமிழில் கூறியதை நொஸ்க் மொழியில் மொழிபெயர்த்தலாகும். இந்த இரண்டு வகைச் செயற்பாடுகளும் இன்று மிக முக்கியமானதாகக் காணப்படுகிறது. ஆனால் நாங்கள் இன்று வழிதெரியாத நிலையில் எவ்வகையாக சமூகங்களை அணுகுதல், சமூகங்களுக்கு இடையில் எம்மை எவ்வாறு அறிமுகப்படுத்துதல் என்னும் விடயத்தில் நேரடி அரசியல் என்பதை விட இலக்கிய வழியின் ஊடாகக் கதவைத் திறத்தல் மிக மிக முக்கியமானது. காலத்திற்கு மிகவும் தேவையானது என்பதே எனது கருத்தாகும்.

(தொடரும்)


கி.பி.அரவிந்தன் எனும் ஆளுமையின் 1ஆவது ஆண்டு நினைவாக… – நேர்காணல்: பகுதி 2

$
0
0

ki.piஈழ விடுதலைப் போராட்ட முன்னோடி,கவிஞர், எழுத்தாளர் கி.பி.அரவிந்தன் அவர்களுடன் 2014இல் மேற்கொள்ளப்பட்ட ஓர் உரையாடல்.   –  நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா.

கி.பி அரவிந்தன்இறுதியாக ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் இது என்ற அடிப்படையில் இது முக்கியத்துவம் பெறுகிறது. அவரது கவிதைகள் பிரேஞ் மொழியாக்கம் செய்யப்பட்டு நூலுருப் பெற்ற பின்னணியில் தொடங்கும் உரையாடல், ஆரம்பகாலப் போராட்டப் பங்களிப்பிலிருந்து, கலை இலக்கிய, சமூகச் செயற்பாடுகள், புலம்பெயர் வாழ்வியல், தாயக-தமிழக-புலம்பெயர் அரசியல், இளைய தலைமுறை எனப் பல்வேறு கருத்துகளை உள்ளடக்கி விரிந்து சென்றது என்ற வகையிலும் இதன் உள்ளடக்கம் பெறுமதியுடையதாகின்றது.

அவருடைய அனுபவங்களின் ஊடாக விடுதலைப் போராட்டத்தினது முக்கிய வரலாற்றுப் பக்கங்களையும், புலம்பெயர் வாழ்வியல் பற்றிய காத்திரமான பார்வையையும் பதிவாக்க முடியும் என்ற நம்பிக்கையில் மேற்கொள்ளப்பட்ட உரையாடல் இது. அவருடைய முதலாவது ஆண்டு நிறைவில், அவரது நினைவுகளுக்குச் சமர்ப்பணமாய் எழுத்து வடிவில் இந்நேர்காணலை வெளியிடுவது பொருத்தமும் பெறுமதியும் மிக்கதெனக் கருதுகின்றோம்.

*****

‘தமிழர்களுக்கான இலக்கியம்’,‘தமிழர் இலக்கியம்’,‘தமிழர்களுக்கான அரசியல்’,‘தமிழர் அரசியல்’ என்ற சொல்லாடல்கள் மூலம் அவற்றின் வேறுபாட்டையும் தேவைகளையும் விளக்கமாகக் கூறினீர்கள். உங்களுடைய வாசிப்பனுபவம், இளமைக்காலத்தில் இலக்கிய ஆர்வம் முகிழ்த்த, வளர்ந்து சூழல் எப்படி அமைந்தது என்று கூறுங்கள்?

அடிப்படையில் நான் ஒரு இலக்கியவாதி இல்லை என்பதை இங்கு முதலில் கூறவேண்டும். அடிப்படையில் நான் ஒரு சமூகத்தை நேசிக்கின்ற, சமூகப் பிரச்சினைகளைக் களைய விரும்புகின்ற, சமூகத்திற்கான நேசம் மிக்க சமூகப் போராளியாகத் தான் என்னை அடையாளப்படுத்த விரும்பினேன். அவ்வகையான செயற்பாடுகள் தான் எனது தொடக்கமாகவும் இருந்தன. சிறு வயதிலிருந்தே என்னுடன் வாசிப்புப் பழக்கமும்,இலக்கிய ரீதியான பரிச்சயமும் இருந்தது. இதற்குக் காரணம் எனது வீட்டுச் சூழலாக இருக்கலாம். எனது ஆரம்பகாலம் அதாவது அரிவரி,முதலாம் வகுப்பு,இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்புகளில் நான் என்னுடைய தாய்மாமன் வீட்டிலிருந்து தான் கல்வி கற்றேன். எனது அப்பா, அம்மாவுடன் இருந்ததைவிட அதிகமாக நெடுந்தீவிலிருந்த மாமா வீட்டிலிருந்து எனது தொடக்கக் கல்வியைக் கற்றேன்.

அந்தத் தீவிற்கு ஒரு நாளைக்கு ஒரு முறை தான் தோணி வரும். அதில் தான் தபால் மற்றும் மரக்கறி உட்பட்ட பொருட்கள் வரும். அதில் தான் பேப்பரும் வரும். என்னுடைய மாமா வீரகேசரி இதழின் தொடர் சந்தாதாரர். பிரதான வீதியை அடைய வீட்டியிலிருந்து சற்றுத்தூரம் நடந்து வரவேண்டும். பதினொரு மணியளவில் பிரதான வீதியில் மாமா வந்து நின்று விடுவார். தபாற்காரர் பேப்பரை எனது மாமாவின் கையில் கொடுத்து விட்டுப் போவார். அவர் அங்கிருந்து அந்தப் பேப்பரை வாசித்தபடியே வீட்டிற்கு வந்தடைவார். கடைசியில் அந்தப் பேப்பர் எஙகு அச்சிடப்பட்டது என்பதையும் மத்தியான சாப்பாட்டிற்கு முன்னர் வாசித்து முடித்து விடுவார். இது எனக்குள் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தியது. அத்தோடு எனது தாய்மாமன் மற்றும் எனது தாய், தந்தையர் கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஊரில் கத்தோலிக்க சமூகத்தவர்கள் பத்திரிகைகள் வெளியிடுவார்கள். ‘சத்தியவேதப் பாதுகாவலன்’ என்ற வாரப் பத்திரிகை இருந்தது. அதேபோன்று‘இருதய தூதன்’ என்கின்ற மாதப் பத்திரிகை இருந்தது. இவற்றையும் மாமா சந்தா செலுத்தித் தான் பெற்றுக் கொள்வார்.இவை ஒருவகையான் வாசிப்புப் பழக்கத்தை எனக்குள் ஏற்படுத்தியிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

பின்னாளில் அதாவது நான் ஐந்தாம், ஆறாம் வகுப்புப் படிக்கும் போது எனது சொந்த வீட்டில் ஐயா (அப்பாவை ஐயா என்றே அழைப்பேன்) மற்றும் அம்மா போன்றவர்கள் தமக்கென ‘சூட்கேசுகள்’ வைத்திருந்தார்கள். இந்த சூட்கேசுகளை நாங்கள் ஆராய வெளிக்கிட்ட போது ஐயாவினுடைய சூட்கேசுக்குள் திராவிட இயக்கப் புத்தகங்களை நான் முதன் முதலாகக் கண்டேன். சி.பி.சிற்றரசு, கே.ஏ.மதியழகன், அறிஞர் அண்ணாத்துரை, கலைஞர் மு.கருணாநிதி போன்றவர்களினதும் ‘திராவிடப் பண்ணை’ என்கின்ற ஒரு வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்ட புத்தகங்களையும் நான் கண்டேன். தந்தை பெரியாரின் நூல்கள் எனப் பல்வேறு நூல்களைப் பார்த்த பின்னர் இவை தொடர்பாக நான் ஐயாவுடன் கதைத்த போது, ‘நான் ஒரு நாத்திகவாதியாக இளவயதில் இருந்தேன்’ எனக் கூறினார். ஆனால் நாங்கள் பார்க்கும் போது அவர் ஒரு பக்திமானாக இருந்தார் என்பது வேறுகதை. இவ்வாறான விடயங்களுடன், நான் படித்த பாடசாலை, நாங்கள் நகரத்திற்கு குடிபெயர்ந்த பின்னர் யாழ்ப்பாண நூலகம் ஒரு 5-10 நிமிட நடை தூரத்தில்இருந்தமை போன்ற பல்வேறு விடயங்கள் சேர்ந்து வாசிப்புப் பழக்கத்தை எனக்குள் வளர்த்தன. ஆனால் இவைகள் எல்லாம் பெரிதளவில் என்னை எழுதுவதற்குத் தூண்டியது எனச் சொல்ல முடியாது.

சரி. அப்படியெனில் உங்களை எழுதத் தூண்டிய சூழல்களும் காரணிகளும் எத்தகையன?

kipiசென்னைக்கு நான் 1978ம் ஆண்டு சென்றபோது அங்கு நான் உரையாடுவதற்கு அரசியல் அல்லாத விடயங்கள் தேவைப்பட்டன. தொடர்ந்தும் அரசியலையே பேச முடியாது. போராட்டத்திற்கு அப்பால் என்ன விடயம் உள்ளது. அப்போது தான் எனக்கு இலக்கியம் பற்றியதான, இலக்கியம் மீதான ஆர்வம், திசைதிருப்பல் போன்றன நிகழ்ந்தது. ஈழத்து இலக்கியம் பற்றியதான ஆர்வம் ஏற்பட்டது. அதை நாங்கள் இங்கு அறிமுகம் செய்து அதற்கு ஊடாக உரையாட வேண்டும் என்கின்ற தேவை ஏற்பட்டது. அப்போதே நான் உண்மையாக இலக்கிய வாசிப்பிற்கும் இலக்கிய ரீதியான பயிற்சிக்கும் இலக்கிய ரீதியான அறிமுகத்திற்கும் வந்தேன். அதேவேளையில் நான் சார்ந்த இயக்கத்தின் சார்பாக நான் ஒரு வெளியீட்டுப் பிரிவுக்கும் பொறுப்பாளனாக இருந்ததால் பத்திரிகை, மாத இதழ், வார இதழ், துண்டுப்பிரசுரங்கள், சிறுநூல்கள் போன்றவற்றை வெளியிட வேண்டிய தேவை வரும்போது தவிர்க்க முடியாமல் இந்தத் துறையைச் சார்ந்த தமிழ்நாட்டு நண்பர்களோடு உறவாடவும் அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அவர்களது உதவியைப் பெறுவதற்காகவும் தொடர்பைப் பேணிய போதே இலக்கிய ரீதியான விடைகள் வந்தன.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னால் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் எனச் சொல்லப்பட்ட பின்னர், நான் நேரடியாக இயக்கத்தை விட்டு விலகி வீடு சென்று சரணடைந்தேன். இங்கு சரணடைந்தேன் என்று தான் கூறவேண்டும். நான் வீட்டை விட்டு வீராவேசமாகப் புறப்பட்டு பின்னர் சரணடைந்தேன். 1988, 1989, 1990 பிறேமதாசாவின் கால கட்டம்.அந்த நேரம் இந்திய இராணுவம் வெளியேறுகிறது. மீண்டும் இலங்கை இராணுவத்தின் பிரச்சினை ஏற்படுகிறது. இவற்றை நான் நேரில் அனுபவித்த போது அவை குறித்து எனது தமிழ்நாட்டு நண்பர்களுக்கு நிலைமைகளைச் சொல்வதற்காக எழுதிய கவிதைகள் தான் முதலாவதாக ‘இனியொரு வைகறை’ என்கின்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது. அதிலிருந்து தான் நான் கூடுதலாக எழுத ஆரம்பித்தேன்.

உங்களுடைய இளமைக்கால வாசிப்பு ஈடுபாடு, இலக்கியப் பரிச்சயம் உண்டான பின்னணி, எழுத்துப் பணியை நோக்கி நீங்கள் உங்களை எவ்வாறு வளர்த்துக் கொண்டீர்கள், அதற்கு தமிழக இலக்கியச் சூழல் எவ்வாறு துணைநின்றது என்பன தொடர்பாக நீங்கள் பகிர்ந்து கொண்டீர்கள்.உங்களது இலக்கியப் பணிகள் தொடர்பாகப் பேசிக்கொள்ளலாம் என்ற வகையில் நீங்கள் முன்னர் ‘அப்பால் தமிழ்’ என்ற இலக்கிய இணைய இதழ் உட்பட்ட பல சஞ்சிகைகளை நெறிப்படுத்தினீர்கள். தற்போது புதினப்பலகை செய்தி இணையத்தின் நெறியாளராகவும், காக்கைச் சிறகினிலே மாத இதழின் நெறியாளர்களில் ஒருவராகவும் இருக்கிறீர்கள். இந்தப் பணிகள் தொடர்பாக ஏதாவது பகிர்ந்து கொள்ள முடியுமா?

நான் புலம்பெயர்ந்து பிரான்ஸ் வந்தபோது இங்கிருந்தவாறு தாயகம் சார்ந்து சிந்திக்கும் போதும், இங்கு எதிர்கொண்ட சிக்கல்களின் போதும் எழுத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டேன், சஞ்சிகைகளின் பக்கம் ஈர்க்கப்பட்டேன். எனது கருத்துக்களை வெளிக்கொணர்வதற்கான சஞ்சிகைகளை கொண்டு வரவேண்டும் என நினைத்தேன். அதன் முதற்படியாக, நண்பர்கள்; சேர்ந்து ‘மௌனம்’ என்ற காலாண்டு இதழை நடத்தினோம். அதனுடைய தொடர்ச்சியாகத் தான் ‘அப்பால் தமிழ்’ என்பதை நிறுவினோம். ‘அப்பால் தமிழ்’ என்பது ஈழத்து இலக்கியத்திற்கான முதற்படி என நான் நினைக்கிறேன். இதனை நான் முழுமையாக உரிமை கோர விரும்பவில்லை. முழுமையான ஈழத்தமிழர்களுக்கான ஒரு இலக்கிய இணைய இதழாக ‘அப்பால் தமிழ்’ அப்போது இருந்தது என்பது எனது கருத்து. சிலவேளைகளில் எனது கருத்து தவறாக இருக்கலாம்.

அந்த நேரத்தில் வேறு இதழ்களும் இருந்தன. ஏராளமான தமிழ்நாட்டு இலக்கிய இணைய இதழ்கள் இருந்தபோது ‘அப்பால் தமிழ்’ என்பது அதற்கு மாறுபட்டதாக இருந்தது. அந்த இணைய வழியாக நாங்கள் ஈழத்து எழுத்தாளர்கள் பலருடைய நாவல்கள், குறிப்பாக அ.பாலமனோகரனின் நாவல்கள் போன்றவற்றை வாசகர்களுக்குத் தொடர் நாவலாக வெளியிட்டு அதனை அறிமுகப்படுத்தி வைத்தோம். பல்வேறு ஈழத்து எழுத்தாளர்கள் பற்றிய நூல் வெளியீடுகள்,ஈழத்து ஓவியங்கள் போன்ற பல விடயங்களை நாங்கள் அதனூடாக வெளியிட்டோம். ஆனால் பின்னர் இது தொடர்பில் பெரியளவில் ஒத்துழைப்புக்கள் கிடைக்காது போனது. தனித்து நானே செய்ய வேண்டிய ஒரு சூழல் வந்தபோது அது அப்படியே செயலிழந்து போனது. மீண்டும் இப்போது அது புதுப்பிக்கப்படவில்லை. ஆனால் அப்பால் தமிழ் பக்கத்திற்குள் நுழைவீர்களானால் பழைய இதழ்களைப் பார்க்கலாம். பார்க்கவே முடியாதபடி அது மூடப்பட்டிருந்தது. ஆனால் அதனை உயிர்ப்பித்து விடுமாறு பல நண்பர்கள் கூறினார்கள். இப்போது அதனை நாங்கள் திறந்திருக்கிறோம். எதிர்காலத்தில் அதனைச் செய்யலாம்.

இந்தவேளையில் தான் 2009ல் எமது முள்ளிவாய்க்கால் துன்பியல் நிகழ்வினால் எல்லோரும் பரிதவித்துக் கொண்டிருந்த நிலையில், அந்த நேரத்திலிருந்து வெளிச் சூழல்கள் அதாவது புலம்பெயர் வாழ் தமிழர்கள் மத்தியில் காணப்பட்ட அரசியல் அராஜகம் என்பதும் நாட்டாண்மை என்பதும் மேலோங்கி ஊடகங்களை மூடுவதும், அவற்றின் மீது நித்தம் சேறுவரி இறைத்ததும் இடம்பெற்றது. இந்தவேளையிலேயே நாங்கள் புதினப்பலகையை ஆரம்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதில் செய்திகளை மாத்திரம் வழங்குதல், சரியான செய்திகளை வழங்குதல், எவ்விதமான சார்புநிலையும் இல்லாது, யாரையும் தூக்கிப்பிடிக்காது, யார் மீதும்; சேறுவாருதல் இல்லாமல், செய்திகளை மட்டும் வழங்குவதென்ற நோக்கம் இருந்தது. அதாவது இலங்கை சார்ந்தும் தென்னாசியா சார்ந்த பிரச்சினைகளை மையப்படுத்தியும் அதேவேளையில், எங்களைப் பற்றி உலக அரங்கில் ஏனைய பத்திரிகையாளர்கள் என்னத்தைச் சொல்கின்றனர் மற்றும் அவர்களுடைய கண்ணோட்டம் என்ன என்பதை எங்களுடைய தமிழர்களுக்குத் திருப்பிச் சொல்ல வேண்டும் என்பதை மையமாகக் கொண்டே புதினப்பலகை என்கின்ற இணையத்தை நாங்கள் தொடங்கினோம்.

பல ஆர்வமுள்ள நண்பர்கள் சேர்ந்து இதனை ஆரம்பித்தோம். தொடர்ந்தும் அது இன்று இயங்கிக் கொண்டிருக்கிறது. பொதுவாக இது ஒரு செய்தித்தளமாகப் பலராலும் விரும்பிப் பார்க்கப்படும் தளமாக காணப்படுகிறது. இந்த நிலையில் தான் தமிழ்நாட்டில் எமது விருப்பத்திற்கு மாறான அரசியலை அதாவது எமது அரசியலைத் தங்களுடைய கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டிருக்கின்ற சிலருடைய அடாவடித்தனம் தாங்கமுடியாத நிலை உணரப்பட்டது.அவர்கள் எங்களைத் தீர்மானிப்பவர்களாகவும் எமது விருப்பம் என்ன என்பதை அவர்களே சொல்கின்றவர்களாகவும் மாறிப்போன மிக மோசமான சூழலில் தான் தமிழ்நாட்டிலுள்ள நண்பர்கள் சிலருடன் இணைந்து காக்கைச் சிறகினிலே என்கின்ற இலக்கிய இதழை கொண்டுவர விரும்பினோம். நாங்கள் ஒரு பரிவர்த்தனையாக அதாவது புலம்பெயர் சமூகத்திற்கும் தமிழ்நாட்டு சமூகத்திற்கும் பரிவர்த்தனை இலக்கிய இதழாக இதனைச் செய்கிறோம். அதேவேளை அரசியல் ரீதியாக தேவையான நல்ல கருத்துக்கள்இருந்தால் அவற்றை ஆய்வுக்குரிய கருத்துக்களாக முன்வைப்பதற்கான தளம் எமக்கு எப்போதும் தேவை என்ற அடிப்படையிலேயே ‘காக்கைச் சிறகினிலே’ இதழைக் கடந்த மூன்று ஆண்டுகளாக அவர்கள் கேட்டதற்கிணங்க அதன் நெறியாளராகவும் இருக்கிறேன்.

தொடர்ச்சியாக அரசியல், சமூகம், புலம்பெயர் வாழ்வியல் சார்ந்த பல்வேறு தளங்களில் உங்கள் அனுபவம் சார்ந்த நிகழ்வுகளையும் கருத்துக்களையும் தொடர்ச்சியாக அடுத்த பகுதியில் பதிவு செய்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். தியாகி பொன் சிவகுமாரனின் போராட்ட செயற்பாடுகள் பற்றிய உங்களது நினைவுக் குறிப்பிலிருந்து சில விடயங்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

ki-pi-annaசிறிலங்கா மே 22, 1972ல் குடியரசாக அறிவிக்கப்பட்ட போது அதனை ஒரு கரிநாளாக அறிவித்து அன்றைய தமிழ்த் தலைமைகள் ஒரு அறவழிப் போராட்டம் ஒன்றை நடாத்தினார்கள். அந்த அறவழிப் போராட்டத்தில் மாணவனாக இருந்த நானும் கலந்து கொண்டேன். அதில் கலந்து கொண்ட வகையில் முதலில் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களில் நானும் ஒருவன். அதாவது முத்துக்குமாரசாமி, மனோகரன், நான் ஆகிய மூன்று பேருமே முதலில் கைது செய்யப்பட்டோம். மாணவர்களைப் பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டாம் என்று கூறும் நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வதாகக் கூறி காவற்துறையினர் எம்மைக் கைதுசெய்தனர்.

மே 18ம் திகதி எம்மை காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்ற போது ஏற்கனவே அங்கே சிவகுமாரன் பிறிதொரு காரணத்திற்காக கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.  ஆனால் அவருக்கான வழக்கு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றதால் ஒவ்வொரு தவணையும் அவர் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டு நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்ட பின்னர் மீண்டும் அனுராதபுரத்திற்கு கொண்டு வரப்பட்டார். இவர் யாழ்ப்பாணச் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்படுவதாக நாங்கள் ஒருநாள் அறிந்தோம். அப்போது நாங்கள் ஏறத்தாழ 70 பேர் மண்டபம் ஒன்றிற்குள் அடைக்கப்பட்டிருந்தோம். அந்த மண்டபத்தைத் தாண்டித்தான் அவரை அழைத்துச் செல்ல வேண்டும். நாங்கள் அங்கு இருக்கிறோம் என்பதை சிவகுமாரும் அறிந்திருந்தார். அவர் கம்பிக்கு வெளியே நின்றவாறு எங்களுடன் பேசினார். அப்போது தான் நான் முதற்தடவையாக சிவகுமாரனுடன் கதைத்தேன். அதற்கு முன்னர் நான் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். அவர் ஒரு கதாநாயகன் எனப் பல தகவல்களை நான் ஏற்கனவே அறிந்திருந்தேன். அவர் ஒரு வியப்பான மனிதனாக எனக்குள் நிறைந்திருந்தார். இவ்வாறான ஒருவரை நான் நேரடியாகச் சந்தித்த போது, அவர் மிகவும் மென்மையான, அமைதியான, முகத்திலே மலர்ச்சியும் சிரிப்பும் கொண்ட ஒரு இளைஞனாகத் தான் அவர் எனக்குத் தென்பட்டார்.

அன்றிலிருந்து தொடங்கிய நட்பு அவர் 1974 யூன் 05ம் திகதி மரணிக்கும் வரையில் மிகவும் நெருக்கமாகவும், தோழமையாகவும் அரசியல் நெருக்கமாகவும் இருந்தது. குறிப்பாக 1974ம் ஆண்டு தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்ற போது நாங்கள் தொண்டர்களாகச் செயற்பட்டோம். எமது தொண்டர்கள் பிரிவிற்கு சிவகுமாரன் தலைமை வகித்தார். நாங்கள் தொண்டர்களாக செயற்பட்ட போது 1974 ஜனவரி 10ம் திகதி கூட்டத்தின் இறுதிநாளன்று  துக்ககரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றது. அதாவது ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர். காவற்துறையினரின் அடிதடிப் பிரயோகத்திலேயே இவர்கள் இறந்தனர். இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவரைப் பழிவாங்கி அவருக்குத் தண்டனை வழங்க வேண்டும் என நாங்கள் முடிவெடுத்தோம். அதன் பின்னால் அதில் முக்கிய சூத்திரதாரியாக விளங்கியவர் அன்றைய காவற்துறை ஆணையாளர் ஏ.எஸ்.பி சந்திரசேகரா. அவரைப் பழிவாங்குவதே எமது நோக்காக இருந்தது. இவரைப் பழிவாங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். இந்த நிலையில் தான் சிவகுமாரன் மிக மிக உச்ச கட்டத் தேடுதல் நிலைமைக்கு உள்ளாகி, ஏறத்தாழ உரும்பிராய்க் கிராமம் முதற்தடவையாக 700 காவற்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை நடாத்தப்பட்டது. ஏற்கனவே நாம் இதனை அறிந்திருந்ததால் வேறொரு கிராமத்தில் தலைமறைவாக இருந்தோம்.

இவர் மீதான தேடுதல் வேட்டை மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதால் சிவகுமாரனை நாட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்கின்ற முயற்சியில் நாம் இறங்கினோம். அந்த முயற்சிக்கு எமக்குப் பணம் தேவைப்பட்டது. அன்றைய நிலையில் நாங்கள் பலரையும் அதாவது தமிழ்த் தலைவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் போன்றோரை பண உதவி செய்யுமாறு கோரிய போதும் அவர்கள் எவரும் இதற்கு உதவ முன்வரவில்லை. இதனால் நாங்கள் நிதியைப் பறித்தெடுத்தல் என்கின்ற முயற்சியில் இறங்கினோம். அந்த முயற்சிகள் எமக்குத் தோல்வியைத் தந்தன. இதன்போது நாங்கள் காவற்துறையின் சுற்றிவளைப்பிற்கு உள்ளாகினோம். இதிலிருந்து எம்மால் தப்பிச் செல்ல முடியாததால் சிவகுமாரன் முதன் முதலில் சயனைட் அருந்தி வீரமரணத்தை அடைந்தார். நாங்கள் மூவர் இதிலிருந்து தப்பித்தோம். அவர்களுக்கு சிவகுமாரனை மட்டுமே தெரிந்திருந்ததால் அவர்கள் அவரைக் குறிவைத்தே தமது தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன் காரணத்தாலேயே நாங்கள் சனத்தோடு சனமாக வெளியேற முடிந்தது. ஏற்கனவே சிவகுமார் தனக்குத் தேவையான சயனைட்டை சென்ற் குப்பி ஒன்றிற்குள் அடைத்து வைத்திருந்தார். அதேவேளையில் அவர் ஒரு கத்தியும் வைத்திருப்பார். அந்தக் கத்தியில் சயனைட் தடவப்பட்டு நன்கு காய்ந்திருந்தது. இந்தக் கத்தியால் ஒருவருக்கு கீறு விழுந்தாலே அவர் உடனே சாவைத் தழுவக்கூடிய நிலையிலேயே காணப்பட்டது. இந்தக் கத்தியை அவர் எப்போதும் தனது இடுப்பிலேயே வைத்திருப்பார்.

சிவகுமாரன் அவர்களுடைய மரணம் அன்றைய காலகட்டத்தில் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது?

சிவகுமாரனின் மரணம் அன்றைய காலகட்டத்தில் முதலாவது களப்பலி எனக் கூறலாம். 1970களுக்குப் பின்னர் எழுச்சி பெற்ற ஒரு இளம்தலைமுறையினர் மத்தியில் ஒரு இளைஞன் ஒருவன் களப்பலியாகி விட்டான் என்கின்ற செய்தியை வழங்கியது. இளைஞர்கள் மட்டுமல்ல, பொதுவாகத் தமிழ்த் தேசியம் பேசும் மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சி அலையையும் அனுதாப மற்றும் உணர்வு அலையையும் ஏற்படுத்தியது. அவரது தொடர்ச்சியான துணிச்சல், சமூகத்தின் மீதான நேசமும் அவரது அர்ப்பணிக்கின்ற தியாக மனப்பான்மையையும் கொண்ட ஒரு முன்னுதாரணமாக, முதல் வித்தாக இந்த அரசியல் வரலாற்றில் கருதப்படுகிறார்.

(தொடரும் – 3வது பகுதியோடு நிறைவுறும்!)

ஒலிவடிவ நேர்காணலை எழுத்துருவாக்கித் தந்த மொழிபெயர்ப்பாளரும் புதினப்பலகையின் செய்தியாளருமான நித்யபாரதிக்கு மனமார்ந்த நன்றிகள்.

சிறிலங்காவின் இழந்துபோன தலைமுறை –பாகிஸ்தான் ஊடகர்

$
0
0

sri-lankas-war-widows (1)பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்துள்ள தமிழ்ச் சமூகமானது, போருக்குப் பின்னான தற்போதைய சூழலில் இராணுவத்தினரின் பிரசன்னங்களையும் தலையீட்டையும் சகித்து வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இவ்வாறு பாகிஸ்தானில் இருந்து வெளியாகும்  daily times நாளிதழில், இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளரான Mubashir Noor எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தமானது ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுற்ற போதிலும் இன்றும் இந்த நாட்டைப் பிரிக்கின்ற சமூகப் பிரச்சினைகளைக் காணலாம். சிறிலங்கா வாழ் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பல்வேறு யுத்தக் குற்றங்களை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசு மீது இன்றும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் வெறுப்புடனேயே உள்ளனர்.

போரானது இரண்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்ததன் விளைவாக ஏற்பட்ட பல்வேறு வடுக்கள் மற்றும் உளப்பாதிப்புக்கள் போன்றன இன்றும் தமிழ் இளையோர்கள் மத்தியில் தாக்கத்தைச் செலுத்துகின்றன. இவர்கள் சிறிலங்காவின் பாதிக்கப்பட்ட தலைமுறையினராக வாழ்கின்றனர்.

சிறிலங்காவின் முன்னாள் படைவீரர்களை மலேசியாவிற்கு அழைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவது தொடர்பான மலேசியாவின் உள்விவகார அமைச்சின் திட்டத்தை எதிர்த்து மார்ச் 08, 2016 அன்று மலேசிய இந்திய காங்கிரசின் இளையோர் பணிப்பாளர் சிவராஜ் சந்திரன் தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தார். ‘ஏனெனில் இத்திட்டமானது உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் உணர்வலைகளை மதிக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நீண்ட கால யுத்தத்தின் போது தமிழ்ப் பொது மக்களைப் படுகொலை செய்த சிறிலங்காப் படையினரைத் தமிழ் மக்கள் மிகத் தீவிரமாக வெறுக்கின்றனர்’ என சந்திரன் விளக்கினார்.

முறிவுற்ற சிறிலங்காவை ஒன்றிணைத்துப் பணியாற்றுவேன் என்கின்ற தேர்தல் வாக்குறுதியை மதித்தே கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் மைத்திரிபால சிறிசேன அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.

சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தமானது உத்தியோகபூர்வமாக 1983ல் ஆரம்பமாகியது. ஆனால் இந்தப் பிரச்சினைக்கான மூலவேர் மூன்றரை நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதாகும். கிட்டத்தட்ட கி.மு1500 ஆண்டுகளில், வடக்கிலிருந்து ஆரிய ஆக்கிரமிப்பாளர்கள் இந்திய உபகண்டத்தின் ஊடாக திராவிடர்களை நோக்கிப் படையெடுத்தனர். சிறிலங்காவில் வாழும் பௌத்த சிங்களவர்கள் ஆரியர்களின் வழித்தோன்றல்கள் எனவும் தமிழ் மக்கள் புராதன திராவிடர்களின் வழித்தோன்றல்கள் எனவும் கூறப்படுகின்றது. அன்றைய காலத்திலிருந்தே இவ்விரு சமூகத்தவர்களுக்கும் இடையில் முரண்பாடுகளும் முறிவுகளும் ஏற்படத் தொடங்கின. இது சிறிலங்கா 1948ல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் மேலும் தீவிரம் பெற்றது.

இனங்களுக்கிடையில் பாரபட்சங்கள் நிலவிய போதே இது யுத்தமாக வெடித்தது. 1972ல், சிங்கள அரசியல்வாதிகள் வரலாற்று ரீதியாக சிறிலங்கா கொண்டிருந்த சிலோன் என்கின்ற பெயரை மாற்றியதுடன் பௌத்த மதத்தை அரச மதமாகப் பிரகடனப்படுத்தினார்கள். இதுவே தமிழ் மக்கள் மத்தியில் ஆயுதப் போராட்டம் ஒன்று வெடிப்பதற்குக் காரணமாகியது.

புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்த இடங்களைச் சேர்ந்த இளைஞர்கள் சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட நலிந்த மக்கள் சமூகத்தினராக இருந்தனர். புலிகள் அமைப்பும் சிறிலங்கா அரசாங்கமும் இவர்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தினர். தமிழீழ விடுதலைப் புலிகளால் சிறுவர்கள் ஆட்சேர்க்கப்பட்டு போர்க் களத்தில் நிறுத்தப்பட்டனர். தமது கட்டுப்பாட்டிலிருந்த குடும்பங்களிலிருந்து ஒரு பிள்ளை என்கின்ற விகிதத்தில் புலிகள் அமைப்பால் படைக்கு ஆட்சேர்க்கப்பட்டனர். 1998ல் கிளிநொச்சியில் இடம்பெற்ற தனியொரு யுத்தத்தில் 500 இற்கும் மேற்பட்ட புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிறுவர் போராளிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

இன்றும் கூட சிறிலங்காத் தமிழ் இளையோர்கள் தமது உடல் உறுப்புக்களை இழந்து மனவடுக்களுடன் வாழ்வதைக் காணலாம். கடந்த இருண்ட யுகத்தின் போது தாம் பிறந்ததை நினைத்து இவர்கள் வருந்துகின்றனர். பிறிதொரு பிரிவினர் புகைப்பிடித்தல் மற்றும் தெருக்களில் செல்லும் பெண்களை கேலிசெய்தல் போன்ற கெட்ட பழக்கவழக்கங்களுக்கு ஆட்பட்டுள்ளனர் என்பதும் இங்கு வேதனையான விடயமாகும். போதைப் பொருட் பாவனையும் சிறிலங்காவின் முன்னாள் போர் வலயத்தில் தற்போது அதிகரித்துள்ளது. இவ்வாறான பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்துள்ள தமிழ்ச் சமூகமானது, போருக்குப் பின்னான தற்போதைய சூழலில் இராணுவத்தினரின் பிரசன்னங்களையும் தலையீட்டையும் சகித்து வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தேர்தல் பரப்புரையின் போது, தனது முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் தந்திரோபாயம் மிக்க அரசியலை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டில் அமைதியை நிலைநாட்டுவேன் என சிறிசேன வாக்குறுதி வழங்கியிருந்தார். எனினும், மே 2015ல் அமெரிக்காவின் ஒக்லாண்ட் நிறுவகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் ‘சிறிலங்காவில் வேறுபட்ட தோற்றப்பாட்டின் கீழ் அமைதிப் போர் தற்போதும் தொடர்கின்றது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாது சிறிலங்கா அரசாங்கமானது தொடர்ந்தும் தமிழ் மக்களின் சொந்த இடங்களில் அவர்களைக் குடியேற்றுவதில் தாமதத்தை ஏற்படுத்துவதாகவும், உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்த சிறிலங்கா இராணுவத்தினர் அதில் சொகுசு விடுதிகள் மற்றும் சூதாட்ட விடுதிகளை அமைத்து இவற்றின் மூலம் வருமானம் ஈட்டிவருவதாகவும் அமெரிக்காவின் ஒக்லண்ட் நிறுவகத்தின் அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிறிசேனவின் தற்போதைய ஆட்சியில் பொருளாதாரமானது 7.4 வீதமாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் தொடர்ந்தும் ஐந்து பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன்களால் மொத்தத் தேசிய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

காலம் கடக்கும் போது தமிழ் மக்களுக்கு உண்டான வடுக்கள் மாறினாலும் கூட, சிறிலங்காவில் இடம்பெறும் இனத்துவ அரசியலானது தொடர்ந்தும் இடம்பெறும். இது தொடர்பில் சிறிசேன தனது வாக்குறுதிகளுக்கு அமைவாகச் செயற்படுவரேயானால் மட்டுமே இது முடிவிற்கு வரும். இல்லாவிட்டால் சிறிலங்கா வாழ் தமிழ் இளையோர் தொடர்ந்தும் பல்வேறு பாதிப்புக்களுக்கு முகங்கொடுப்பதுடன், ஒரு நலிவடைந்த தரப்பாகவே வாழவேண்டியேற்படும்.

கி.பி.அரவிந்தன் எனும் ஆளுமையின் 1ஆவது ஆண்டு நினைவாக… – நேர்காணல்: பகுதி 3

$
0
0

ki-pi-1st yearஈழ விடுதலைப் போராட்ட முன்னோடி,கவிஞர், எழுத்தாளர் கி.பி.அரவிந்தன் அவர்களுடன் 2014இல் மேற்கொள்ளப்பட்ட ஓர் உரையாடல்.  நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா.

கி.பி அரவிந்தன் இறுதியாக ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் இது என்ற அடிப்படையில் இது முக்கியத்துவம் பெறுகிறது. அவரது கவிதைகள் பிரென்ஞ் மொழியாக்கம் செய்யப்பட்டு நூலுருப் பெற்ற பின்னணியில் தொடங்கும் உரையாடல், ஆரம்பகாலப் போராட்டப் பங்களிப்பிலிருந்து, கலை இலக்கிய, சமூகச் செயற்பாடுகள், புலம்பெயர் வாழ்வியல், தாயக-தமிழக-புலம்பெயர் அரசியல், இளைய தலைமுறை எனப் பல்வேறு கருத்துகளை உள்ளடக்கி விரிந்து சென்றது என்ற வகையிலும் இதன் உள்ளடக்கம் பெறுமதியுடையதாகின்றது.

அவருடைய அனுபவங்களின் ஊடாக விடுதலைப் போராட்டத்தினது முக்கிய வரலாற்றுப் பக்கங்களையும், புலம்பெயர் வாழ்வியல் பற்றிய காத்திரமான பார்வையையும் பதிவாக்க முடியும் என்ற நம்பிக்கையில் மேற்கொள்ளப்பட்ட உரையாடல் இது. அவருடைய முதலாவது ஆண்டு நிறைவில், அவரது நினைவுகளுக்குச் சமர்ப்பணமாய் எழுத்து வடிவில் இந்நேர்காணலை வெளியிடுவது பொருத்தமும் பெறுமதியும் மிக்கதெனக் கருதுகின்றோம்.

**********

இளைஞர்களின் போராட்ட எழுச்சியின் குறியீடாகவும் விடுதலை அரசியலின் குறியீடாகவும் சிவகுமாரன் அவர்கள் இன்றுவரை விளங்குகிறார். அவர் தன்னைத் தியாகம் செய்து 40 ஆண்டுகள் கடந்திருக்கும் சூழலில அவர் பற்றிய உங்கள் நினைவுமீட்பும் பகிர்வும் பெறுமதி வாய்ந்ததாக இருக்கின்றது. அவருடைய வீரச்சாவிற்குப் பின்னர் உங்களுடைய அரசியல் பணிகள் என்று பார்க்கும் போது, குறிப்பாக தமிழ்நாட்டில் நீங்கள் செயற்பட்டிருக்கிறீர்கள்.ஈரோஸ் அமைப்பில் இணைந்து செயற்பட்டிருக்கிறீர்கள்.அந்தச் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமாகக் கூறமுடியுமா?

ki-pi-bookஇது ஒரு தன்வரலாறாகப் போய்விடும் என நான் நினைக்கிறேன். இவையெல்லாம் மிகவும் நீண்ட வரலாறு என்பதனால் இதனைச் சுருக்கமாகக் கூற விரும்புகிறேன். நான் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த பின்னர் கைதுசெய்யப்பட்டேன். 1977ம் ஆண்டுக் கலவரம் வருகிறது. இதன் போது அரசியல் கைதிகள் தடுப்பில் வைக்கப்பட்டமை தவறானது என்கின்ற ஒரு வழக்கு மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் ஜே.வி.பி உட்பட சிறையில் அடைக்கப்பட்ட பலரும் விடுதலை செய்யப்படுகின்றனர். இதில் நாங்களும் விடுதலையாகி வெளியில் வந்தோம்.எம்மீதான வழக்குகள் இருந்தன. ஆனால் நாங்கள் சிறையிலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புக் கிட்டியது. சிறையிலிருந்து வெளியேறிய பின்னர் ஈரோஸ் இயக்கத்துடனான தொடர்பு கிடைத்தது. 1978ல் நான் தமிழ்நாட்டிற்குச் சென்றேன்.

1978ம் ஆண்டுத் தொடக்கத்தில் நான் இலங்கையை விட்டுப் புறப்பட்டு மத்திய கிழக்கு நாட்டிற்குச் சென்று பி.எல்.ஓ (PLO) தலைமையுடனான சந்திப்பு நிகழ்கிறது. அவர்களுடன் மூன்று மாதம் தங்கியிருந்த பின்னர், மீண்டும் இலங்கைக்குத் திரும்பாமல் தமிழ்நாட்டிற்குச் சென்று அங்கே தங்கியிருந்தேன். ஏறத்தாழ 1978ம் ஆண்டிலிருந்து 1988ம் ஆண்டு வரையில் (இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னால் அங்கிருந்த பணியகங்கள் எல்லாம் மூடப்பட வேண்டும் எல்லோரும் அங்கிருந்து திரும்பிச் செல்ல வேண்டும் என இந்திய அரசாங்கம் சொல்லும் காலகட்டம் வரைக்கும்) அங்கு தங்கியிருந்தேன்.

அங்கிருந்து அரசியல் ரீதியான பல பணிகளை நான் மேற்கொண்டேன். தமிழ்நாட்டு மக்களுடனான உறவுகளை வளர்த்தல், தமிழ்நாட்டை ஒரு பின்தளமாகப் பயன்படுத்துதல், போன்ற விடயங்களிலும் தமிழ்நாடு எவ்வகையான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்பதை நாங்கள் அரசியற் தலைமைகளுக்கு மட்டுமல்லாது அதற்குக் கீழே பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் எனப் பல்வேறு தரப்பட்ட பொறுப்பிலே இருந்தவர்கள் மற்றும் கிராமத்து மக்கள், இளைஞர்கள் மத்தியில் கருத்துக்களைப் பரப்பும் பணியிலும் ஈடுபட்டோம். அடிமட்ட நிலையில் எமது போராட்டம் மற்றும் அதற்கான நியாயம் போன்றவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தோம்.

1978ம் ஆண்டு வரைக்கும் நான் இலங்கையில் இருந்தபோது அரசியல் ரீதியாகவும் கடுமையான ஒரு மனோநிலையும் கொண்டவனாகவும் இருந்தேன். தமிழ்நாட்டில் பணியாற்றத் தொடங்கிய பத்தாண்டு காலத்தில் தான் நான் ஒரு மாற்றத்தைக் கண்டேன். அதாவது எனது கவிதையில் குறிப்பிட்டது போன்று ‘அவர்களின் தோழணைவால் நான் கனிந்தேன்’ அந்தவகையில் நான் இன்றைக்கும் தமிழ்நாட்டிற்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். தமிழ்நாடு மீதான நம்பிக்கை உடையவனாகவும் தமிழ்நாட்டு மக்கள் மீதான அபரிமிதமான நேசம் கொண்டவனாகவும் நான் இருக்கின்றேன்.

இவையெல்லாம் ஒரு தன்வரலாறாகப் போய்விடும் என நீங்கள் அச்சப்பட்டாலும் கூட, இதற்கு ஊடாக நாங்கள் ஒரு காலத்தினுடைய வரலாற்றையும் போராட்ட செயற்பாட்டையும் பதிவு செய்ய வேண்டியது முக்கியம் என்கின்ற அடிப்படையில் அந்தக் கேள்வியைத் தங்களிடம் கேட்டிருந்தேன். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூன்று தசாப்தகால ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழர் அரசியலில் பெரும் ஒரு தலைமைத்துவ இடைவெளி தோன்றியுள்ளது, செயற்பாட்டுத் தேக்கம் நிலவுகின்றது என்பது பலரும் அறிந்த உண்மை. இந்த வகையில் ஆயுதப் போராட்டப் பாதையை முன்மொழிந்தவர்களில், ஆரம்ப காலகட்டங்களில் அதில் ஈடுபட்டவர் என்ற முறையில் ஆயுதப் போராட்டத்தின் வீழ்ச்சி என்பது ஆயுதப் போராட்ட வழிமுறை தொடர்பாக உங்களை வருந்த வைத்துள்ளதா?

நிச்சயமாக, அது பொதுவாகவே உலகத் தமிழர்களைப் பாதித்தது போலவே என்னையும் பாதித்தது. ஆனால் அதற்கு மேலால், இந்தப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் ஈடுபட்டவன் என்ற வகையில், மற்றவர்களுடைய வேதனையை விடவும் சற்றுக் கூடுதலான வேதனையை நான் அடைகிறேன். அதாவது கவலை, துன்பம் என்பதற்கு அப்பால் ஏன் நாங்கள் உயிர் வாழவேண்டும் என்ற கேள்வி என்னுள் குடைந்து கொண்டிருக்கிறது. அதாவது பத்தாண்டு காலம் ஊரில் பணியாற்றிய போதே செத்திருக்கலாமே, நாங்கள் எல்லாம் முன்னாடியே செத்திருக்கலாமே என்கின்ற மனோநிலையே எனக்கு அப்பொழுதெல்லாம் தோன்றியது. இதெல்லாம் அறிந்திருக்க வேண்டுமா? இதையெல்லாம் பார்த்திருக்க வேண்டுமா என்பதான மனோநிலை என்னிடம் மிகுந்திருந்தது. முள்ளிவாய்க்கால் என்பது ஒரு துன்பியல் பாடம் என்று சொல்லலாம். அது ஒரு துன்பியல் பாடலாகவே போயிற்று.

போராட்டம் எழுச்சியுறுவதும் வீழ்ச்சியுறுவதும் பின்னடைவைச் சந்திப்பதென்பதும் அது மிகவும் இயல்பான விடயமாகும். எல்லாம் வெற்றிகளாக அமைவதில்லை. முன்னடைவு வரும், பின்னடைவு வரும், சிறிதுகாலம் அது ஓய்வுநிலையில் இருக்கும், பின்னர் மீண்டும் எழுச்சி பெறும். ஆனால் எங்களுக்கு நடந்தது அவ்வகையானதல்ல. நாங்கள் வீழ்ச்சியடைந்து விட்டோம் என்றே எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் நாங்கள் வீழ்ச்சியடையவில்லை. நாங்கள் சிதறிவிட்டோம். உச்சி வரைக்கும் ஏறத்தெரிந்த எங்களுக்கு அதிலிருந்து இறங்குவதற்கு வழிதெரியாது உச்சியிலிருந்து தொப்பென்று விழுந்து விட்டோம். உண்மையாக நாங்கள் செங்குத்தாக விழுந்திருக்கிறோம். இது போன்று எங்கேயும் இடம்பெறவில்லை.

போருக்குப் பின்னால் ஒரு நிலைமை தோன்றும் போது அதிலிருந்து பின்வாங்குதல் தொடர்பாக வேறு போராட்டங்களில் முறைகள் உள்ளன. பாதுகாக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் உள்ளன. இங்கு சொல்வதற்கு எனக்குக் கடினமானதாக உள்ளது. ஏறத்தாழ இந்தப் போராட்டத்தின் இறுதியில், இந்தப் போராட்டம் முப்பதாண்டுகளாக வளர்த்த சிந்தனை, அறிவு, தந்திரோபாயம் என எங்களுடைய அனைத்து மூளைவலுவும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. எங்களுடைய மூளை எப்படியாகச் செயற்படும் என்கின்ற முறைமையைக் கூட நாங்கள் இன்றைக்கு எதிரியிடம் ஒப்படைத்திருக்கிறோம். இது மிக மிக சோகமான நிகழ்வு.  இது சாதாரண நிகழ்ச்சியாக முடிந்திருக்கின்றது என நாங்கள் நினைத்தாலும் கூட உண்மை அப்படியல்ல.  அவர்கள் எம்மிடமிருந்து பெற்றுக் கொண்டது மற்றும் எடுத்துக் கொண்டது என்பது வெறும் ஒரு போராட்டத்தை முறியடித்த வெற்றி மாத்திரம் அல்ல. இவையனைத்தையும் நாங்கள் மீண்டும் கட்டியெழுப்புவதென்பது இப்போதைக்கு சாத்தியமா அல்லது சாத்தியமற்றதா என்பதெல்லாம் வேறு விடயம். அதை நான் இங்கு பேசவரவில்லை. ஆனால் நடந்து முடிந்ததெல்லாம் இவ்வாறானதொரு துன்பியல் சம்பவமாகும்.

இந்தப் போராட்டம் வீழ்ச்சியடைந்தது என்பதற்கப்பால், அது சிதைக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருந்தீர்கள்.2009 இற்குப் பின்னான ஈழத்தமிழர் அரசியல் செயற்றிறன் கொண்டதாக அமைக்கப்படவில்லை என்பதும் வெளிப்படையான உண்மை. இந்த அடிப்படையில் 2009 இற்குப் பின்னரான தமிழர் அரசியலை எவ்வாறு நோக்குகிறீர்கள்? எப்படியான செயல்முன்னெடுப்புகள் அவசியமெனக் கருதுகிறீர்கள்?

ki-pi-book-norway (2)முன்வைக்கப்படுவதற்குப் பலரிடமும் பல யோசனைகள் உள்ளன. ஆனால் இது தொடர்பான திட்டங்களை முன்வைப்பதற்கு நான் தயாராக இல்லை. ஆனால் நான் நம்பிக்கையீனமாகக் கதைக்கிறேன் என நீங்கள் கருத வேண்டாம். நாங்கள் அடிப்படையிலேயே பல விடயங்களைக் கோட்டை விட்டுவிட்டோம் என்பதே உண்மை. நாங்கள் எங்களை மீள்பரிசீலனைக்கு உள்ளாக்கும் போது எந்தெந்த விடயங்களை உள்ளெடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியமானது.

முதலாவது இந்தத் தாயகம் பற்றியதான கோட்பாடு எங்களிடத்தில் உணர்வு ரீதியாக, அரசியல் ரீதியாக, மன ரீதியாக உருப்பெற்றிருக்கிறதா என்ற கேள்வியை நாங்கள் முதலாவதாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது பருத்தித்துறை முதல் பாணாந்துறை வரை அல்லது பொத்துவில் வரைக்குமான நீண்ட பகுதி அல்லது மன்னார் முதல் மட்டக்களப்பு வரையான நீண்ட நெடிய நிலப்பரப்புக்களில் வாழும் மக்களை ஒரு தேசியமாக, ஒரு தாயகத்திற்கான பண்பு கொண்டவர்களாக அமைக்கும் வகையில் எவ்வகையான திட்டங்களை, செயற்பாடுகளை மனப்போக்கைக் கொண்டிருந்தோம் என்பதை நாங்கள் எம்மிடம் முதலில் கேட்க வேண்டும். தாயகம் பற்றியதான அரசியல் அல்லது மனோநிலை மற்றும் உணர்வுநிலை என்பது இருந்தால் தான் சுயாட்சி பற்றியதான கருத்துரு தோன்ற முடியும். தோன்றி வளரமுடியும். இவை படிப்படியாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.அன்றைய அரசியல் தலைமைகள் இவற்றுக்கான விதைகளை விதைத்தாலும் அவர்கள் செய்தது தமிழருக்கான அரசியல் ஆகும். கொழும்பில் தாங்கள் செய்வதை அவர்கள் இங்கு வந்து வீராவேசமாகக் கதைத்துவிட்டுப் போகிறார்கள். இங்கு வந்து அவர்கள் தமது வாக்கு வங்கிகளுக்கு ஆதரவைப் பெற்றுக் கொள்வதிலேயே மிகக் கவனமாக இருந்தார்கள்.

தமது நாடாளுமன்ற ஆசனங்களைப் பெருக்கிக் கொள்வதிலும் கொள்வதிலும் அதற்கான பதவிகளை அனுபவித்துக் கொள்வதிலும் அவர்கள் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். ஆனால் மறுவளமாக தமது வடக்குக் கிழக்கு தமிழர் பிரதிநிதித்துவத்தைக் கோரி அதனை முன்னிலைப்படுத்தும் இத்தலைமைகள் வடக்கு கிழக்கு மக்களிடையேயான இணைப்பை அவர்களுடனான உறவை அவர்களுடனான பொருளாதார உறவாடலை அல்லது அவர்களுக்கிடையிலான சமூக ரீதியான உறவாடல் போன்றவற்றிற்காக என்ன பணி செய்தார்கள் அல்லது எந்தவகையான கட்டமைப்பை வைத்திருந்தார்கள் என்பதை நாங்கள் இன்று முக்கியமாகக் கேட்டுப் பார்க்க வேண்டும்.

அதைத் தொடர்ந்தும் வந்தவர்கள் அதனைச் செய்தார்களா அல்லது சிந்தனை செய்தார்களா என்பதை  நாம் பார்க்க வேண்டும். உதாரணமாக, நான் கூறுவது கசப்பாகக் கூட இருக்கலாம். அதாவது 2009 யுத்தம் முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாணத்து இளைஞனும் மட்டக்களப்புப் பெண்ணும் திருமணமாகியிருந்த நிலையில் அவர்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். பிரதேச ரீதியாக சாதி ரீதியாக செய்யப்பட்ட திருமணங்கள் இன்று உடைக்கப்பட்டுள்ளன. இவைகள் எல்லாம் வளராமல், வளர்த்தெடுக்கப்படாமல் மனரீதியாகக் கொண்டு செல்லப்படாமல் தாயகம், சுயாட்சி போன்றன தொடர்பாக நாங்கள் எவ்வாறு சிந்திக்க முடியும்?

இரண்டாவதாக தெளிந்ததொரு திட்டத்தை நாங்கள் எமக்குள் கொண்டிருக்கவில்லை. நாங்கள் குடாநாட்டுக்குள் மடங்கியிருந்த எண்ணத்தை மனப்போக்கை பொத்துவில் வரையான மக்களிடம் திணிக்கவும் அவர்களை அதுபோல் மாற்றவும் முயற்சித்தோமே தவிர, அவைகளை அனுசரித்தோமா? அவைகளை ஏற்றுக்கொண்டோமா? இவற்றைக் கேட்டுப் பார்த்து இவற்றுக்கான விடைகளைக் காணாத வரையில் அதாவது நான் நினைக்கிறேன் 2009 இற்குப் பின்னர் பத்தாண்டுகள் கடந்தாலும் இவை பற்றி நாங்கள் மூச்சுப்பெற முடியுமா என்பதெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை.

தாயக- புலம்பெயர் சமூகத்தில் தேசியம், தன்னாட்சி, அரசியல் உரிமை சார்ந்த விடயங்களில் மன ரீதியான விடுதலை என்பது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதை நீங்கள் விமர்சனக் கண்ணோட்டத்துடன் முன்வைத்தமை முக்கியமானதாக அமைகின்றது. ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகள் சார்ந்து தாயகம், தமிழகம், புலம்பெயர் நாடுகள் ஆகிய மூன்று தளங்களிலிருந்து எவ்வாறு முன்வைக்கப்பட வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

நாம் தமிழுக்காகப் போராடினோம்;, தமிழ்த் தேசத்திற்காகப் போராடினோம் என்பதற்காகவே வெளிநாடுகளில் எமக்கு அரசியல் அந்தஸ்து வழங்கப்பட்டு அரசியல் ரீதியாக நாங்கள் இங்கு ஏற்றுக்கொள்ளப்பட்டோம். பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள் சொன்ன காரணம் என்னவெனில் எங்களது மொழி தமிழ் என்பதாகும். எங்களுடைய மொழிக்காகவும் எங்களுடைய மொழி சார்ந்த தேசத்திற்காகவும் போராடினோம் என்பதாகும். நல்லது. இது ஒரு நல்ல விடயம். ஆனால் இந்த மொழிக்காகவும் மொழித் தேசத்திற்காகவும் போராடிய நாங்கள், புலம்பெயர்ந்து வந்ததன் பின்னர் இந்த மொழிக்கும் இந்த மொழித் தேசத்திற்காகவும் எவ்வகையான கட்டமைப்பை வெளிநாடுகளில் கொண்டிருந்தோம், எதைக் கொண்டிருக்கிறோம் என்பதை ஆராயவேண்டும்.

இங்கிருந்து நிதியைச் சேகரித்து அனுப்புவது மட்டும் போதுமானதா என்பது எனக்குத் தெரியவில்லை. இதற்கான எத்தகைய செயற்திட்டத்தை நாங்கள் வைத்திருக்கிறோம்? எதை நாங்கள் கொண்டிருக்கிறோம்? இங்கு வந்து வளர்கின்ற தலைமுறைக்கான என்ன திட்டத்தை நாங்கள் கொண்டிருக்கிறோம்? எதிர்கால முன்பாவனை கொண்டதான என்ன திட்டத்தை நாங்கள் இந்த சமூகமாகக் கொண்டிருக்கிறோம்? புலம்பெயர் சமூகம் உள்ளது. ஆனால் எத்தனை கதிரைகள் மூடிசூடிக்கொண்டிருக்கின்றன என்பது தெரியுமா? இத்தனை கதிரைகள் எமக்குத் தேவைதானா? விரல்விட்டு எண்ணினால் எட்டுக் கதிரைகளையும் கட்டிப்பிடித்துக் கொண்டு இருப்பவர்கள் தான் இருக்கிறார்கள். உதாரணமாக, நவிபிள்ளையைச் சந்திப்பதற்கு எமது தமிழ் சமூகத்திற்கு வாய்ப்பை அவர் வழங்கியிருந்தார். காலையில் ‘X’ என்ற அமைப்பு அவரைச் சந்தித்து விட்டு அமைதியாக வெளியேறிவிட்டார்கள். இதேபோன்று மத்தியானம் ‘Y’ என்ற அமைப்பு அவரைச் சந்தித்து  விட்டு அமைதியாக வெளியேறினார்கள். பின்னேரம் தேநீர் வேளையில் பிறிதொரு ‘Z ‘; என்ற அமைப்பு நவி பிள்ளையைச் சந்திக்கச் சென்றார்கள். இரவுச் சாப்பாட்டிற்கு ‘W’ என்ற அமைப்பு அவரைச் சந்திக்கிறது. இந்த நாலு பேரும் வெள்வேறு நேரங்களில் நவிபிள்ளையைச் சந்தித்துக் கதைத்துள்ளனர். இவர்கள் யாருக்காக எந்த முடிவை எடுத்தனர் என்பது இங்கு கேள்விக்குறியாகும். ஒரு வெளியுறவுக் கொள்கை தொடர்பாகக் கூட எமக்கிடையே இணக்கம் காணமுடியாத நாம், அதுபற்றியதான திட்டமிடலோ ஒழுங்கமைப்போ இணக்கமோ காணமுடியாதவர்களாக இங்கிருந்து கொண்டு அதை அமைப்போம், தமிழை உயர்த்திப் பிடிப்போம், தமிழ்த் தேசத்தைக் காப்போம் என யாருக்குப் பொய் சொல்லப் போறோம்? யாரை ஏமாற்றுகிறோம்? நாங்கள் எங்களையே ஏமாற்றிக் கொள்கிறோம். இவையெல்லாம் மீள்பரிசீலனைக்கு உள்ளாக்கப்படவில்லையானால், எமக்கு மீட்சி இல்லை. அதாவது 2009 வீழ்ச்சியை விட இன்றைக்கு நாங்கள் சிக்கியிருக்கும் நிலைமை தான் மிகவும் மோசமானது. ஏனெனில் நாங்கள் மிகப் பெரிய வலைக்குள் வீழ்ந்திருக்கிறோம். இந்த வலையை அறுத்து நாங்கள் எவ்வாறு மீளப்போகிறோம் என்பது தான் மிக முக்கியமான கேள்வி.

புலம்பெயர் வாழ்வியலில், தமிழரின் சமூக,பண்பாட்டு வாழ்வியல் தொடர்பாக நீங்கள் அக்கறை கொண்டவர். அதற்காகச் சிந்தித்தவர், பல்வேறு தளங்களில் செயற்பாடுகளை முன்னெடுத்தவர் என்ற வகையில், இளைய தலைமுறையினர் மத்தியில் இருமொழி, பண்பாட்டு வாழ்வியல் சூழலில் காணப்படும் சவால்கள் மற்றும் சாதகமான வாய்ப்புக்கள் பற்றி உங்கள் பார்வை?

ki-pi-annaஅதாவது பொதுவாகவே எமது சமூகமானது புலம்பெயர் வாழ்வியலில் ஏனைய சமூகங்களும் எதிர்கொள்ள நேர்கின்ற நெருக்கடியைத் தான் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை. ஆனால் நான் முதலில் கூறியது போன்று, எங்களிடத்தில் புலம்பெயர் சமூகம் பற்றியதாக அல்லது வளரும் தலைமுறை பற்றிய கண்ணோட்டமோ அல்லது ஒரு முன்னுணர்வுத் திட்டங்களோ அல்லது முன்னுணர்வு நிலைகளோ இல்லை. நாங்கள் சில விடயங்களைச் செய்தேயாக வேண்டும். அதாவது உதாரணத்திற்கு இன்று இரண்டாம் தலைமுறை வளர்கிறது. அதனுடைய மொழிப் பண்பாடு நிச்சயமாகக் குறைந்து கொண்டு செல்கிறது.  30 ஆண்டுகளுக்கு முன்னால் நாங்கள் ஊரிலிருந்த போது எங்களிடமிருந்த சொல்வளமும் மொழியாற்றலும் தற்போது 30 ஆண்டுகளின் பின்னர் சில சொற்கள் மறந்து போய்விட்டது. எந்த இடத்தில் இந்தச் சொல்லைப் பயன்படுத்துவது என்கின்ற தடுமாற்றம் எங்களுக்குள்ளும் ஏற்படத் தொடங்கி விட்டது.

இரண்டாவது தலைமுறை மற்றும் மூன்றாம் தலைமுறை இயல்பாக மொழிப் பாவனையில் குறைந்து கொண்டே செல்கிறது. ஆனால் இவர்கள் புலம்பெயர் சமூகத்திலுள்ள மொழிகளுக்கு ஊடாக எங்களுடைய பண்பாட்டை, எங்களுடைய மொழியின் சிறப்பை எங்களுடைய இலக்கியத்தின் செழுமையை உற்றுணர்வதற்கு வாய்ப்பு உண்டு. எமது சமூகம் பற்றி ஆய்வு செய்வதற்கு ஒரு இளைஞன் அல்லது ஒரு இளம்பெண் நினைத்தால் அவர்களை ஊக்குவிப்பதற்கும் அவர்களுக்கான நிதியை வழங்கவும் எங்களிடம் என்ன வகையான திட்டம் உள்ளது, வளம் உள்ளது, பொறிமுறை உள்ளது?  இந்தப் பிள்ளைகள் இது தொடர்பான ஆய்வுநிலைக்கு இறங்க விரும்பினால், யாரோ ஒரு பிள்ளை வந்து எம்மிடம் தமிழ் இலக்கியத்தைப் பற்றிக் கேட்டால் எம்மிடம் என்ன வகையான நூலகக் கட்டமைப்பைக் கொண்டிருக்கிறோம்? 30 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் எங்கேயாவது பெறுமதி மிக்க பொதுநூலகம் ஒன்றை அமைக்க எங்களால் முடிந்ததா? ஆவணக்காப்பகம் ஒன்றை நிறுவ எங்களால் முடிந்ததா?

இளைஞர்கள் ஆவணங்களைத் தேடி எங்கே செல்வார்கள்? அவர்களால் இது எப்படி முடியும்? மூத்த சமூகத்தினராகிய நாங்கள் அல்லவா இதனைச் செய்திருக்க வேண்டும்? எங்களுடைய இரண்டாம் தலைமுறைக்கு மொழி தெரியும். அதாவது எமது புலம்பெயர் வாழ் எமது தலைமுறைக்கு கிட்டத்தட்ட ஐந்து அல்லது ஆறு மொழிகள் தாராளமாகத் தெரியும்.  மொழி என்பது ஒரு அகப்பை போன்றது. அந்த மொழி எவ்வளவு தெரிந்திருந்தாலும், அந்த மொழியால் அள்ளுவதற்கு உங்கள் உள்ளுக்குள் விடயம் இருக்க வேண்டும். பானைக்குள் சோறிருந்தால் தான் அகப்பையால் அள்ளி நீங்கள் வெளியாலே வைக்கலாம். மொழி என்பது தனித்ததொரு சமூக அறிவோ அல்லது பண்பாட்டு அறிவோ அல்ல. மொழி பேசலாம். இது ஒரு ஊடகம். இங்கு ஊடுவதற்கு வழியிருக்கும். ஆனால் ஊடுவதை நீங்கள் இலக்கை நோக்கி நகர்த்த வேண்டுமாக இருந்தால் உங்களுடைய நிலையை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டுமானால், நீங்கள் உள்ளுக்குள் நிறைய விடயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் சமூகத்தின் நிலையால் நாங்கள் எமது அடுத்த தலைமுறையினருக்கு ஊட்டிய கல்விநிலை என்ன? அவர்கள் ஐரோப்பிய மொழிகளில் கல்வி ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கலாம். அது வேறு விடயம். இந்த தமிழ் சமூகம் தன்னுடைய இரண்டாவது மூன்றாவது தலைமுறையினருக்குக் கல்வி ஊட்டுவதற்கு என்ன வகையான முறைமையை, என்ன வகையான திட்டத்தை வைத்திருக்கிறது?

புலம்பெயர் சூழலில் இளம் தலைமுறையினர் மத்தியிலான மொழி பண்பாட்டு வாழ்வியலை மேம்படுத்துவதற்கான கட்டமைப்பு, அதற்குரிய வளங்கள் சமூக ரீதியில் ஒருங்கணைக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் நீங்கள் விமர்சனக் கண்ணோட்டத்துடன் முன்வைத்திருந்தீர்கள். பண்பாட்டு ரீதியிலான புரிதலை வளர்த்தெடுப்பதற்கு எவ்வாறான வாய்ப்புகள் உள்ளன?

kipiஎமது பண்பாடு பற்றிக் கூட எமக்குத் தெரியவில்லை. எது எமது தமிழ்ப் பண்பாடு என்பதை விளக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, பரத நாட்டியம் ஆடினால் அது எமது பண்பாடு, கலாசாரத்திலுள்ள கலை எனக் கூறுகிறோம். ஈழத்துக் கலையும் பரதநாட்டியம், தமிழ்நாட்டுக் கலையும் பரதநாட்டியம், இந்திய நாட்டுக் கலையும் பரதநாட்டியம் எனின், எது ஈழத்தின் கலை? எங்களவில் நாங்கள் சிலவற்றை முயற்சித்துள்ளோம். இப்போதைக்கு பொது அளவில் நானும் சார்ந்ததாக அண்மைக்காலமாக பொங்கல் என்பதைத் தமிழர்களின் அடையாள நாளாகவும் அதனை எமது பண்பாட்டின் அடையாளமாகவும்,தமிழர்களை இணைக்கும் நாளாகவும் இருக்கும் என்று நினைத்து கடந்த பத்து ஆண்டுகளாக நான் இருக்கும் பிரான்சில் அதனை முன்னெடுத்து வருகிறோம்.

கிட்டத்தட்ட சில இடங்களில் இது முன்னேறிக் கொண்டு வருகிறது. ஆனால் பல நாடுகளில் பொங்கல் என்கின்ற பண்பாட்டு அடையாள நாளைக் கூட பாட்டுக் கச்சேரிகளாகவும், ஒரு விளம்பர நிகழ்ச்சிகளாகவும் ஒரு கேளிக்கை நிகழ்ச்சியாகவும் மாற்ற விரும்புகிறார்கள். ஆனால் அண்மையில் நடந்த எமது பொங்கல் நிகழ்வுகளில் பண்பாட்டு உணவுகள், பண்பாட்டுப் பொருட்கள், எமது நூல்கள் பற்றியதான கண்காட்சி நிகழ்வுகள், எமது பண்பாட்டு உடைகள் போன்ற ஏராளமானவற்றைக் காட்சிகளாகவும் மேடைகளில் நிகழ்ச்சிகளாகவும் நடாத்தி வருகிறோம். நாங்கள் ஒருபோதும் பரதநாட்டியம் போன்ற எந்தவொரு கலைகளையும் தமிழ் அடையாளக் கலைகளாக ஏற்றுக்கொள்ளவில்லை. எமது பண்பாடு சார்ந்த மக்கள் கலைகளை மட்டுமே நாங்கள் ஏற்றுக்கொண்டோம். அதாவது ஈழத்துக் கூத்துக்களை மேடையேற்றினோம். இவ்வருடம் நாங்கள் வசந்தன் கூத்து, சிலம்பாட்டம் போன்றவற்றை மேடையேற்றியுள்ளோம். எமது பண்பாட்டை அறிமுகப்படுத்தக் கூடிய இவ்வகையான கலைகளை நாங்கள் மேடையேற்றியுள்ளோம்.

இவ்வருடம் பிரான்சில் நடைபெற்ற பொங்கல் விழாவானது பறை ஆட்டத்துடன் ஆரம்பமாகியது. இது மிகவும் முக்கியமானது. பறை என்பது எமது தோல் கருவிகளில் மிகவும் ஆதிகாலத்திலிருந்து பயன்படுத்தப்படும் கருவியாகும். அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் கூட இன்று அந்தக் கருவியைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். இந்த ஒரு விடயத்தையாவது நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.ஆனால் இன்னமும் பலவற்றைச் செய்யவேண்டும். தனித்து அல்லது சின்னச் சின்னக் குழுவாக இதனைச் செய்ய முடியாது. இதனை சமூகமாக, அறிவார்ந்த சமூகத்தவர்கள், படித்தவர்கள், அறிவாளிகள், சமூக நேயம் மிக்கவர்கள், சமூக அக்கறை கொண்ட பலரும் சேர்ந்து இவற்றை முன்னெடுத்தால் தான் இவை நிலைத்து நிற்க முடியும்.

(நிறைவு)

  • ஒலிவடிவ நேர்காணலை எழுத்துருவாக்கித் தந்த மொழிபெயர்ப்பாளரும் புதினப்பலகையின் செய்தியாளருமான நித்யபாரதிக்கு மனமார்ந்த நன்றிகள்.

நீதித்துறையை அச்சுறுத்த முனையும் ராஜபக்சாக்கள் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

$
0
0

mahinda-meeting (1)யோசித கைதுசெய்யப்பட்ட போது, இவரது கைதை எதிர்த்து நாடு முழுவதும் பாரிய மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படும் என மகிந்த கருதினார். ஆனால் இவரது இந்த நம்பிக்கையானது பகற்கனவாக முடிந்துபோனது.

இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

ராஜபக்சாக்கள் மற்றும் மைத்திரி-ரணில் அரசாங்கத்திற்கு இடையிலான முறுகல்நிலையானது தற்போது உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் ராஜபக்சாக்களின் ஊழல், மோசடிகள் அனைத்தும் வெளிக்கொணரப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் தெரிவித்துள்ளதுடன் ராஜபக்சாக்கள் அவர்களது வழக்கறிஞர்களுடன் தயாராக இருக்குமாறும் பிரதமர் எச்சரித்துள்ளார்.

ரணில் இந்த எச்சரிக்கையை விடுப்பதற்கு முன்னரும் கூட, தமக்கெதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சட்ட ஆலோசனைகளைப் பெறுவதில் ராஜபக்சாக்கள் நேரத்தைச் செலவிட்டுள்ளனர். சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக மக்களைத் திசைதிருப்பி விடுவதன் மூலம் நீதிச்சேவை மீதான அச்சத்தை ஏற்படுத்துவது மட்டுமே ராஜபக்சாக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய ஒரேயொரு வழி என சட்ட ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான ஒரு சட்ட ஆலோசனையின் விளைவாகவே ‘ஹைட் பார்க்’ பேரணி இடம்பெற்றது.

யோசித கைதுசெய்யப்பட்ட போது, இவரது கைதை எதிர்த்து நாடு முழுவதும் பாரிய மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படும் என மகிந்த கருதினார். ஆனால் இவரது இந்த நம்பிக்கையானது பகற்கனவாக முடிந்துபோனது. முதலாவது நாள் யோசித நீதிமன்றுக்குக் கொண்டு வரப்பட்ட போது, அங்கு ராஜபக்சாவின் விசுவாசிகளில் ஒரு சிலர் மட்டுமே சமூகம் தந்திருந்தனர். இதன்பின்னர் எப்போதெல்லாம் யோசித நீதிமன்றுக்கு அழைத்து வரப்படுகின்ற போதிலெல்லாம், ராஜபக்சாவின் சொற்ப விசுவாசிகளை மட்டுமே அங்கு காணமுடிந்தது. அப்போதுதான் தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டால் இந்த நிலைதான் காணப்படும் என்கின்ற உண்மையை மகிந்த உணர்ந்து கொண்டதுடன் இவருக்கு பீதி ஏற்பட்டது.

mahinda-meeting (3)

ஆகவே, ‘ஹைட் பார்க்’ பேரணியானது  நீதித்துறைக்கு எச்சரிக்கை சமிக்கையை அனுப்புவதை நோக்காகக் கொண்டே மகிந்தவால் திட்டமிடப்பட்டது. தற்போதைய அரசாங்கத்தை விட நீதிச்சேவை மீதே மகிந்த அதிக அச்சம் கொண்டிருந்தார். மக்களை சிறையில் அடைக்கவோ அல்லது தடுத்து வைக்கவோ வேண்டாம் எனவும் இதனால் அவர்கள் துன்பப்படுவார்கள் எனவும் மகிந்த இந்தப் பேரணியில் தெரிவித்திருந்தார். இது நீதிச்சேவை மீதான மறைமுகமான அச்சுறுத்தலாகவே நோக்கப்படுகிறது.

ஹைட் பார்க் பேரணியானது பாரிய நிதிச் செலவில் மகிந்த விசுவாசிகளால் ஒழுங்குபடுத்தப்பட்டது. மக்களைக் கொண்டு செல்வதற்கான பேரூந்துகள் வாடகைக்கு ஒழுங்குபடுத்தப்பட்டது தொடக்கம் இடம்பெற்ற பல்வேறு செயற்பாடுகள் பாரிய செலவு மேற்கொள்ளப்பட்டதைச் சுட்டிநிற்கின்றன.

இதற்கும் மேலாக, இந்தப் பேரணியில் பாரியளவிலான மக்கள் கலந்து கொண்டனர் என்பதை உறுதிப்படுத்தும் முகமாக air-space camera தொழினுட்பத்தைப் பயன்படுத்திய முதலாவது அரசியல்வாதிகளாக ராஜபக்சாக்கள் காணப்படுகின்றனர். இவ்வாறானதொரு பேரணியில் அதிக எண்ணிக்கையான மக்கள் வருகைதந்துள்ளனர் என்பதைக் காண்பிப்பதற்காக இதற்கு முன்னர் எவ்வித அரசியற் கட்சிகளாலோ அல்லது பேரணியை ஒழுங்குபடுத்துபவர்களாலோ இவ்வாறானதொரு ஒளிப்பதிவுத் தொழினுட்பம் பயன்படுத்தப்படவில்லை.

மக்களைத் தவறாக வழிநடத்த விரும்பும் எவரும் மேலதிக தொழினுட்பத்தைப் பயன்படுத்த முடியும். ஆகவே, தனக்கு ஆதரவாக ஹைட்பார்க் மைதானத்தில் பெருந்தொகையான மக்கள் பேரணியில் கலந்து கொண்டனர் என்பதைக் காண்பித்து அதன்மூலம் நீதிச்சேவை மீது அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கான முயற்சியை மகிந்த மேற்கொண்டார். மேலும் இவர் தனது திட்டங்கள் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக கோயில்கள் மற்றும் விகாரைகளில் தேங்காய் உடைப்பு வழிபாட்டிலும் ஈடுபட்டார். சிறிலங்கா அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுவதற்காக மட்டுமல்லாது நீதிச்சேவைக்கும் எச்சரிக்கை விடுவதற்காகவே மகிந்த தேங்காய்களை உடைத்து வழிபாட்டை மேற்கொண்டார்.

அரசாங்கத்திற்கு எதிராகத் தேங்காய்களை உடைத்து வழிபாடு செய்ததால் அரசாங்க அமைச்சர்கள் சிலர் இறந்துள்ளதாகவும் பலர் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் மகிந்த தெரிவித்துள்ளார். மேலும், தனது குடும்பத்தினருக்கு எதிராக தீர்ப்பை வழங்கும் நீதிபதிகள் அதே நிலைமையை எதிர்கொள்ள வேண்டியேற்படும் எனவும் மகிந்த நீதிபதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பேரணிகளை ஒழுங்குபடுத்துதல்:

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பேரணியில் பங்குகொள்வார்கள் என்பதைக் கூறி மக்களை அச்சுறுத்திய முன்னைய அரசாங்கங்களில் முதலாவது தலைவர் திருமதி.சிறிமாவோ பண்டாரநாயக்க ஆவார். அப்போதைய ஜே.ஆர் அரசாங்கத்தால் சிறிமாவின் சிவில் உரிமை பறிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்ற போது அதனை முறியடிப்பதற்காக இவ்வாறானதொரு பேரணி ஒழுங்குபடுத்தப்பட்டது. ஆனால் ஜே.ஆர், சிறிமாவின் தந்திரோபாயத்தை தோல்வியுறச் செய்தார். ஜே.ஆர் ஜெயவர்தன தொடர்பான சுயசரிதை நூலில் பின்வருமாறு விபரிக்கப்பட்டுள்ளது:

‘செப்ரெம்பர் 27ல் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தை எதிர்த்து திருமதி.பண்டாரநாயக்கவின் ஒழுங்குபடுத்தலில் நாடு தழுவிய பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. தனது ஆதரவாளர்களை கொழும்பில் ஒன்றுசேர்த்து பாரிய பேரணிகளை மேற்கொண்டதுடன் தனது அரசியற் பழிவாங்கலுக்கு ஆதரவாக மக்களைத் திரட்டுதல் போன்றன சிறிமாவின் பிரதான பணிகளாகக் காணப்பட்டன. எந்தவொரு வன்முறையும் சிறிலங்கா அரசாங்கத்தையும் பாதிக்கும் என்பது இங்கு முக்கியமானதாகும். ஒக்ரோபர் 16 அன்று இடம்பெற்ற மிக முக்கிய விவாதம் ஒன்றில் பங்கெடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது.

ஜே.ஆர் இந்த அச்சுறுத்தல்களை மிகத் தீவிரமாகக் கவனத்திற் கொண்டார். சிறிமாவின் விசுவாசிகளால் ஒன்றுதிரட்டப்பட்ட மக்கள் கூட்டத்தை சிறிலங்கா காவற்துறையினர் கலைக்காது விட்டிருந்தால் ஆகஸ்ட் 08 அன்று மிகப் பாரிய இரத்தக்களரி ஏற்பட்டிருக்கும். இவ்வாறானதொரு உயிர்த்தியாகத்துடன், சிறிமாவின் கனவும் நனவாகியிருக்கும். இப்பேரணியின் பின்னரும் கூட, ஜே.ஆர் அரசாங்கத்தின் காலத்தில் வேலைவாய்ப்பின்மை மற்றும் பணவீக்கம் போன்றன அதிகமாக இருந்தன. இதனால் இவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இலங்கைத் தீவு முழுமையும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைக் குழப்புவதற்கான காலஅவகாசத்தை வழங்கினார். இதன்மூலம் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மீதான மக்களின் கருத்துக்கள் எவ்வாறு உள்ளன என்பதை ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் அறிய முடிந்தது.

இதுமட்டுமல்லாது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர், அரசியல் விமர்சனங்கள் மற்றும் ஜே.ஆர் மற்றும் பிறேமதாசா, பல்வேறு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றவர்கள் மீதான தாக்குதல்கள், நாடாளுமன்றம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதற்கான அச்சுறுத்தல்கள், வன்முறைகள் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்குப் பதிலளிப்பதற்கான சூழலும் உருவாக்கப்பட்டது.  ஒக்ரோபர் 16 அன்று சிறிமாவின் பேரணியின் போது மிகப் பெருமளவான மக்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் இதில் ஏற்படக்கூடிய பல்வேறு வன்முறைகளைத் தடுப்பதற்காக ஜே.ஆரால் பாதுகாப்புப் படையினர் அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாதுகாக்குமாறு ஐ.தே.க ஆதரவாளர்களிடம் கூறப்பட்டது. அத்துடன் இவர்கள் அன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்படவிருந்த முக்கிய வரைவுக்கு வாக்களிப்பதற்கு கொழும்பிற்கு வரவேண்டும் என்பதால் இவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரப்பட்டது. ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவற்துறையினரின் பாதுகாப்பிற்கு அப்பால் தமது ஆதரவாளர்களின் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதென்பது சற்று வித்தியாசமானதாகும். மக்களை வன்முறைக்குத் தூண்டும் எவரும் கைது செய்யப்பட வேண்டும் எனவும் காவற்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் ஜே.ஆர் தனக்கு எதிராக சிறிமாவால் முன்வைக்கப்பட்ட சவாலை முறியடித்தார்.

பாதுகாப்புப் படையினர் மற்றும் காவற்துறையினரின் மிகத் தீவிர பாதுகாப்பு முன்னெடுப்புக்களால் தன்னால் திட்டமிடப்பட்ட பேரணி தோல்வியுறும் என்பதை சிறிமா உணர்ந்துகொண்டார். இதனால் இவர் உடனடியாகப் பேரணியை நிறுத்துமாறு தனது ஆதரவாளர்களுக்கு கூறவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்.

ஏனைய அரசியற் கட்சிகளிடமிருந்தும் சிறிமாவிற்கான ஆதரவு பெரிதளவில் கிடைக்கவில்லை. இதில் லங்கா சமாசமாஜக் கட்சியின் நிலைப்பாடு தெளிவற்றதாகக் காணப்பட்டது. இந்தக் கட்சியினர் சிறிமாவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக 1975ல் நாடாளுமன்றில் தமது ஒரு வாக்கை மட்டுமே வழங்கியிருந்தனர். ஆனால் இவர்கள் தமது அரசியல் நலன்களுக்காக மட்டுமே இதனை எதிர்த்தனரே ஒழிய, இவர்கள் சிறிமாவை ஆதரிக்கவில்லை.

இவ்வாறானதொரு சூழலில், ஒக்ரோபர் 16 அன்று திட்டமிட்டபடி சிறிமா மீதான விவாதம் இடம்பெறும் எனவும், இதில் எவ்வித மாற்றத்தையும் செய்ய முடியாது எனவும் சட்டம் தன் கடமையைச் செய்யும் எனவும் ஐ.தே.க அறிவித்தது. இந்நிலையில் ஒக்ரோபர் 12 அன்று கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெகிவளையில் பாரிய மக்கள் ஒன்றுகூடலை ஜே.ஆர் நடத்தினார். இக்கூட்டத்தில், சிறிமாவிற்கு இடம்பெற்றது போலவே ஐ.தே.க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணை ஆணைக்குழுவானது ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுக்களை  முன்வைத்தால் இவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜே.ஆர் தெரிவித்தார்.

அமைச்சரவை விவாதம் இடம்பெறுவதை முன்னிட்டு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவில்லை, அவசரகாலச் சட்டமும் பிரகடனப்படுத்தப்படவில்லை. ஆனால் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுவதற்கான அழைப்பு காவற்துறையினர் மற்றும் இராணுவத்தினர் மீது விடுக்கப்பட்டது. இவர்கள் தமது தலைமையகங்களைப் பாதுகாக்குமாறும் அறிவுறுத்தப்பட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றுக்கு வரும் போது கொல்லப்படுவதைத் தடுப்பதற்காக ஜே.ஆரால் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன்மூலம் இவர் தனது அமைச்சரவை அதிகாரத்தைப் பாதுகாத்தார்.

இதையொத்த தந்திரோபாயங்கள்:

சிறிலங்காவின் கடந்த கால வரலாற்றில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை ஆராய்ந்து இதிலிருந்து எதிர்காலத்திற்கான பாடங்களைக் கற்றுக்கொள்ளும் போது, ஜே.ஆர் போலவே மைத்திரி-ரணில் அரசாங்கமும் ஒரேவிதமான தந்திரோபாயத்தையே பயன்படுத்துகின்றது. இத்தந்திரோபாயமானது மைத்திரி-ரணில் அரசாங்கம், மகிந்த தொடர்பான அச்சுறுத்தல்களை ஒழிப்பதற்கு உதவும்.

யோசித கைதுசெய்யப்பட்ட போது, மகிந்தவின் இளைய மகனான றோகித தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திற்கு தனது முகநூலின் ஊடாக எச்சரிக்கை ஒன்றை வழங்கியிருந்தார். அதாவது ‘அன்பிற்குரிய நல்லாட்சி அரசாங்கமே, நீங்கள் தற்போது சிங்கத்தின் வாலின் மீது நிற்கிறீர்கள். தற்போது இந்தச் சிங்கம் உங்களைத் துண்டு துண்டாக்கிவிடும் என நீங்கள் நினைக்கவில்லையா?’ என்பதே றோகிதவின் முகநூல் எச்சரிக்கையாகும்.

இது ராஜபக்சாக்களின் தற்போதைய பொதுவான போக்கைச் சுட்டிநிற்கிறது. ஆகவே ராஜபக்சாக்களிடமிருந்து எழும் இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு எதிராக சட்டங்களை அமுல்படுத்துவதற்கு மைத்திரி-ரணில் அரசாங்கமானது காவற்துறை மற்றும் நீதிச் சேவையை மேலும் பலப்படுத்த வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளது.

‘எல்லா இடங்களிலும் விடுக்கப்படும் அச்சுறுத்தல்களானது நீதிக்கான அச்சுறுத்தலாகும்’ என மார்டின் லூதர் கிங் குறிப்பிட்டுள்ளார்.

தேசியவாதிகளைத் திருப்திப்படுத்தும் சிறிலங்கா அதிபர் –அனைத்துலக ஊடகம்

$
0
0

maithriசிறிலங்காவின்  அதிபர் மைத்திரிபால சிறிசேன, தமிழ் அரசியற் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் வாக்குறுதியை வழங்கியிருந்தாலும் கூட, அந்த வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. கெட்டவாய்ப்பாக இந்த விவகாரம் முடிவுக்கு வராமல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

நிலையான நீதி மற்றும் அது தொடர்பான மறுமலர்ச்சி தொடர்பில் சிறிலங்கா அரசாங்கமானது மிகப் பாரியளவில் உறுதிமொழிகளை வழங்கியிருந்தாலும் கூட, அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படப் போவதில்லை. 2015 ஒக்ரோபரில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சிறிலங்காவின் இணை அனுசரணையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் கூட, சிறிலங்கா அரசாங்கமானது இது தொடர்பில் மாற்றங்களை கொண்டு வரவில்லை.

ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பில் சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தொடர்ந்தும் காத்திரமான பேச்சுக்களை மேற்கொண்டு வருகிறார். இவை பெரும்பாலும் அனைத்துலக சமூகத்தின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதை நோக்காகக் கொண்டுள்ளன.  மங்கள சமரவீர இந்த நாட்டை நிர்வகிக்கவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

சிறிலங்காவின் நீதி நடைமுறையில் மாற்றத்தைக் கொண்டு வருவது தொடர்பான மங்கள சமரவீரவின் கருத்துக்கள் சிறிலங்காவின் அதிபர், பிரதமர் உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய தலைவர்களின் பேச்சுக்களில் முன்வைக்கப்படவில்லை.

உச்சளவிலான ஊழல் மோசடி வழக்குகள், நிலையான நீதி போன்றவற்றுடன் தொடர்புபட்ட அரசியல் மாற்றத்தை நாட்டில் அமுல்படுத்துவதற்கான இயலுமையை சிறிலங்கா அரசாங்கம் கொண்டுள்ளதா என்பது ஆராயப்பட வேண்டும். அனைத்துலக சமூகத்தின் தொழினுட்ப உதவியையும் சிறிலங்கா பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது. ஆனால் அனைத்துலக நாடுகளின் பங்களிப்புடன் நாட்டில் பாரிய மாற்றம் ஒன்றைக் கொண்டு வருவதில் சிறிலங்கா அரசாங்கம் ஆர்வம் காண்பிக்கவில்லை.

இந்நிலையில் சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கமானது தன்னால் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் மிகவும் கரிசனையுடன் நிறைவேற்றுமா? இதற்கான செயற்பாடுகளை இது முன்னெடுக்கின்றதா? சிறிலங்காவின் அதிபர் சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தம்மால் முன்வைக்கப்பட்ட உறுதிமொழிகளைச் செயல்வடிவம் ஆக்குவார்களா?

தனது நாட்டில் உண்மையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைக் காண்பிக்கவே சிறிலங்கா விரும்புகிறது. ஆனால் இன்னமும் சிறிலங்காவில் தமிழ் அரசியற் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறிலங்கா அரசாங்கமானது தனது நிலைப்பாட்டைத் தெளிவாக முன்வைக்க வேண்டுமாயின் அரசியற் கைதிகளை விடுவிக்கவோ அல்லது இவர்கள் மீதான வழக்குகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்.  தமிழ் அரசியல் கைதிகள் விவகாரமானது போர் சார்ந்த ஒன்று எனினும் இது தொடர்பாக சிறிலங்கா தனது தெளிவான தீர்வை முன்வைக்க வேண்டும்.

யுத்த கால மீறல்களுக்குப் பொருத்தமான உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழுவா அல்லது பொறுப்பளிக்கும் பொறிமுறையை உருவாக்குவதா? அல்லது இராணுவத்தின் உயர் நிலைத் தளபதிகளுக்கு எதிராக விசாரணையை மேற்கொள்வதா? என்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் தனது தீர்வை முன்வைக்க வேண்டும்.

இதேபோன்று தமிழ் அரசியற் கைதிகள் விவகாரம் தொடர்பாகவும் சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டைக் காண்பிக்க வேண்டும்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்வொன்றை எட்டாதவிடத்து நாட்டில் நிச்சயமற்ற தன்மையும் நிலைத்திருக்கும். இதுவரை கால சிறிசேனவின் ஆட்சியை நோக்குவோமாயின், இவர் சிங்கள தேசியவாதிகளின் நம்பிக்கையைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டுள்ளார் என்பது மறுப்பதற்கல்ல.

வழிமூலம்         –  Huffington post

ஆங்கிலமூலம் – Taylor dibbert

மொழியாக்கம்  – நித்தியபாரதி

Viewing all 367 articles
Browse latest View live